பதிவு செய்த நாள்
06 மே2016
04:17
மும்பை : நிறுவனங்களின் பங்குகள், விளை பொருட்கள், தங்கம், வெள்ளி, தாமிரம், கச்சா எண்ணெய் போன்றவற்றில் முதலீடு செய்யவும், வர்த்தகம் புரியவும், தனித்தனியே சந்தைகள் உள்ளன.அதுபோல, வைரக் கற்களில் முதலீடு செய்யவும், வர்த்தகம் புரியவும், சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்டு, எஸ்.டி.ஐ.எக்ஸ்., என்ற, சிங்கப்பூர் வைர முதலீட்டு சந்தை துவக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே முதன் முதலாக அமைக்கப்பட்டுள்ள இச்சந்தையில், நேற்று, வைரங்கள் டிபாசிட், விற்பனை உள்ளிட்ட பரிவர்த்தனைகள் துவங்கின. உலகளவில், கச்சா வைரங்களை நறுக்குவது, பட்டை தீட்டுவது ஆகிய பணிகளை மேற்கொள்வதில், இந்தியாவின் பங்களிப்பு, 90 சதவீதமாக உள்ளது. இத்தொழிலில், குஜராத்தின் சூரத் நகரம் முதலிடத்தில் உள்ளது. அதனால், இந்நகரில், வைரக் கற்கள் தொழிலில் ஈடுபட்டுள்ள பலர், எஸ்.டி.ஐ.எக்ஸ்.,–ல் உறுப்பினராக சேர்ந்துள்ளனர்.
இதுகுறித்து, வைர ஏற்றுமதியாளர் ஒருவர் கூறியதாவது:தற்போது, வைரங்களை நேரில் பார்த்து வாங்குகிறோம். இனி அவற்றை, எஸ்.டி.ஐ.எக்ஸ்., வலைதளம் வாயிலாகவே வாங்கலாம், விற்கலாம். அனைத்து வைரக் கற்களுக்கும், ஜி.ஐ.ஏ., எனப்படும், அமெரிக்க நவரத்தினங்கள் மையம், தரச் சான்று வழங்கும். அந்த சான்றிதழின் அடிப்படையில், எஸ்.டி.ஐ.எக்ஸ்., வலைதளத்தில் நேரடியாக வைரங்களை வாங்கலாம், முதலீடு செய்யலாம்; விலை ஏறும்போது விற்பனை செய்யலாம்.
ஒரு வைரக்கல் முதல், பல வைரங்கள் கொண்ட தொகுப்பை, இச்சந்தையில் வாங்கலாம். சுலபமான வர்த்தக நடைமுறை, தரத்திற்கு உத்தரவாதம், வெளிப்படையான விலை ஆகியவை, இச்சந்தையின் சிறப்பம்சங்கள். எஸ்.டி.ஐ.எக்ஸ்.,மூலம் வாங்கும் அல்லது விற்கப்படும் வைரங்களை பாதுகாப்பாக சேமித்து வைக்கும் பணியில், சர்வதேச நிதி மேலாண்மை நிறுவனமான, மல்கா – அமிட் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம், முதலீட்டாளர்களின் வைரங்களை, மும்பையில் உள்ள பாரத் வைரச் சந்தையில் உள்ள கிடங்கில் சேமித்து வைக்கிறது. அதுபோல, சிங்கப்பூரிலும், இந்நிறுவனத்திற்கு ஒரு கிடங்கு உள்ளது.
எஸ்.டி.ஐ.எக்ஸ்.,–ல் பதிவு செய்துள்ள தரகர்கள் மூலமாகவே, வைரங்களில் முதலீடு செய்யவோ அல்லது அவற்றின் வர்த்தகத்தில் ஈடுபடவோ முடியும். தரகர்கள், முதலீட்டாளர்களிடம் இருந்து பணம் பெற்று, எஸ்.டி.ஐ.எக்ஸ்.,–ல் டிபாசிட் செய்யும் பணியையும் மேற்கொள்கின்றனர். வர்த்தகம் புரிந்தபின், அடுத்த மூன்றாவது நாளில், வாடிக்கையாளரின் கணக்கில், வைரம் டிபாசிட் செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
நேற்று, மும்பை, லண்டன் உள்ளிட்ட 10 நகரங்களில், சிங்கப்பூர் வைர சந்தை வாயிலாக, வைர வர்த்தகம் துவங்கியது. மும்பையில், பிற்பகல் 12:00 மணிக்கு வர்த்தகம் துவங்கி, 4:00 மணிக்கு முடிவுற்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|