பதிவு செய்த நாள்
25 ஜூன்2016
07:34
புதுடில்லி : ‘ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேற உள்ளதால், அங்கு உருக்கு, வாகனம், மருந்து உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ள இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும்’ என, வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனில் நடைபெற்ற கருத்து ஓட்டெடுப்பின் முடிவு, நேற்று வெளியானது. அதில், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற, பெரும்பான்மையானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக, பிரிட்டன் முடிவெடுத்து உள்ளது. இதனால், பிரிட்டனில் செயல்பட்டு வரும், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், சன் பார்மா, மதர்சன் சுமி உள்ளிட்ட நிறுவனங்களின் விற்பனை பாதிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிறுவனங்களின் நடைமுறை செலவினங்கள் அதிகரிக்கும்; அவை, ஊழியர்களை ஐரோப்பிய நாடுகளில் உள்ள கிளைகளுக்கு, பணிக்கு அனுப்புவதிலும், கட்டுப்பாடுகளை சந்திக்க நேரிடும். எனினும், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் முழுவதுமாக வெளியேற இரண்டு ஆண்டுகள் ஆகும் என்பதால், பாதிப்புகளை சமாளிக்க, இந்திய நிறுவனங்கள் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளும் என, தெரிகிறது. பெரும்பாலான இந்திய நிறுவனங்கள், பிரிட்டனில் தொழிற்சாலைகளை நிறுவி, அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன.
இனி, ஐரோப்பிய கூட்டமைப்பின் கட்டுப்பாடுகளுக்கு, பிரிட்டனில் உள்ள இந்திய நிறுவனங்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இது, வர்த்தக விரிவாக்கம், வளர்ச்சி உள்ளிட்டவற்றுக்கு கடிவாளமிடும்; ஏற்றுமதி வருவாய் குறையும். டாடா குழுமத்தைச் சேர்ந்த, ஜாகுவார் லேண்டுரோவர் கார் தயாரிப்பு நிறுவனத்தின் லாபம், அடுத்த நான்கு ஆண்டுகளில், 147 கோடி டாலர் குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. பவுண்டு மதிப்பு அதிரடியாக வீழ்ந்துள்ளதால், பிரிட்டன் உருக்கு பிரிவுகள் விற்பனை வாயிலான, டாடா ஸ்டீல் நிறுவனத்தின் வருவாய் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பிரிட்டன் விவகாரத்தால், நேற்று, இந்திய பங்குச் சந்தைகள் சரிவைக் கண்டன; ரூபாய் மதிப்பும் வீழ்ச்சி அடைந்தது.
* பிரிட்டனில், 800க்கும் அதிகமான இந்திய நிறுவனங்கள் உள்ளன. அவற்றில், 1.10 லட்சத்திற்கும் அதிகமானோர் பணியாற்றுகின்றனர்* இந்தியாவின், பரஸ்பர வர்த்தக நாடுகளில், பிரிட்டன், 12வது இடத்தில் உள்ளது * இரு நாடுகளும், பரஸ்பர அன்னிய நேரடி முதலீட்டில், மூன்றாவது இடத்தில் உள்ளன* இந்தியா உபரி வர்த்தகம் புரியும், 25 நாடுகளில், பிரிட்டன், 7வது இடத்தில் உள்ளது * ஐரோப்பிய கூட்டமைப்பில், பிரிட்டனில் தான் இந்தியா அதிக அளவில் முதலீடு செய்துள்ளது * உருக்கு, வாகனம், மருந்து, ஆரோக்கிய பராமரிப்பு, உணவு, குளிர்பானம் உள்ளிட்ட துறைகளில், இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன* பிரிட்டனின் முடிவு, 10 ஆயிரத்து, 800 கோடி டாலர் மதிப்பிலான இந்திய ஐ.டி., துறையில், குறுகிய காலத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தும்.– நாஸ்காம்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|