பதிவு செய்த நாள்
11 ஜூலை2016
06:52
முதலீடு மூலம் நிலையான வருமானம் பெற விரும்புகிறவர்கள் வழக்கமான வைப்பு நிதி தவிர மற்ற முதலீட்டு வாய்ப்புகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று நிதி ஆலோசாகர்கள் வலியுறுத்துகின்றனர்.
முதலீடு என்று வரும்போது, வங்கிகளின் வைப்பு நிதி திட்டங்களே பெரும்பாலானோரது முதல் தேர்வாக இருக்கிறது. அஞ்சலக டிபாசிட் திட்டங்கள், மூத்த குடிமகன்களுக்கான திட்டங்கள் ஆகியவையும் பரவலாக நாடப்படுகின்றன. முதலீட்டிற்கான பாதுகாப்பு மற்றும் நிலையான வருமானம் ஆகியவை இவற்றின் சிறப்பம்சங்களாக இருக்கின்றன. இந்த காரணங்களுக்காக இவை சராசரி முதலீட்டாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் விருப்பத் தேர்வாக இருக்கின்றன.ஆனால், குறைந்த வட்டி சூழலில் இவற்றின் மீதான பலன் போதுமானதாக இருக்கிறதா எனும் கேள்வி எழுகிறது. மேலும், இவை தரும் வட்டி வருமான வரிக்கு உட்பட்டது என்பதால், வருமான வரி அம்சத்தையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
வட்டி வருமானம், ஒருவரது வருமானத்தில் சேர்த்துக் கொள்ளப்படும் என்பதால் வருமான வரி விகிதத்திற்கு ஏற்ப வரி செலுத்தும் நிலையும் ஏற்படலாம். எனவே, நிலையான வருமானம் தரவல்ல மற்ற முதலீட்டு வாய்ப்புகளையும் பரிசீலிக்க வேண்டும் என நிதி ஆலோசகர்கள் வலியுறுத்துகின்றனர். இவை அதிக வருமானத்தையும் அளிக்க கூடியவையாக இருக்கின்றன.
மாதாந்திர வருமான திட்டங்கள் :மியூச்சுவல் பண்ட்களால் வழங்கப்படும், ‘மன்த்லி இன்கம் பிளான்ஸ்’ எனப்படும் மாதாந்திர வருமான திட்டங்கள் அடிப்படையில் கடன் சார்ந்த திட்டங்களாக அமைகின்றன. எம்.ஐ.பி., என இவை பிரபலமாக குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் சிறிய அளவில் சமபங்கு முதலீடு அம்சமும் உண்டு. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், கடன் சார்ந்த திட்டங்கள் தொடர்பாக கொண்டு வரப்பட்ட வரி மாற்றத்தால் இந்த திட்டங்கள் மீதான ஈர்ப்பு ஓரளவு குறைந்து விட்டாலும், நிலையான வருமானம் நாடுபவர்களுக்கு இவை இன்னமும் ஏற்றதாக இருக்கிறது என்றே நிதி ஆலோசகர்களின் கருத்தாக இருக்கிறது. இந்த வகை திட்டங்களில் வரிக்கு பிந்தைய சிறந்த பலனை பெற வேண்டும் என்றால், குறைந்தது 3 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும் என்கின்றனர். இவற்றில் சமபங்குகளின் அளவு 20 முதல் 25 சதவீதமாக அதிகரித்திருப்பதால் பலன்களில் ஏற்ற இறக்கம் அதிகம் இருந்தாலும், முதலீட்டாளர்களுக்கு ஏற்ற வாய்ப்பு என்றே கருதப்படுகின்றன.
புதிய வகை நிதிகள் :ஈக்விட்டி இன்கம் / சேவிங்ஸ் பண்ட் திட்டங்கள் புதிய வகை மியூச்சுவல் பண்ட்களாக அமைகின்றன. இந்த வகை நிதிகள் ஈக்விட்டி, ஈக்விட்டி டிரைவேட்டிவ்கள் மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்கின்றன. வரிச்சலுகைக்காக இவை 65 சதவீதம் வரை சமபங்குகளில் முதலீடு செய்யலாம். எனவே, ஓராண்டுக்கு மேல் முதலீடு செய்திருந்தால், முதலீட்டின் மீதான ஆதாய பலன் வரி பொருந்தாது. குறிப்பிட்ட இடைவெளியில் பணம் பெறும் வாய்ப்பு மற்றும் டிவிடெண்ட் பெறும் வாய்ப்புகளை தேர்வு செய்யலாம். புதிய வகை நிதிகள் என்பதால் இவற்றின் கடந்த கால செயல்பாடுகளை ஒப்பிட்டு பார்ப்பது கடினம்.
வர்த்தக டிபாசிட்கள் :வங்கிகள் போலவே, வர்த்தக நிறுவனங்களும் வைப்பு நிதிகளை பெற்றுக்கொள்கின்றன. இவற்றுக்கும் வட்டி விகிதம் உண்டு. மாதாந்திர அல்லது காலாண்டு அடிப்படையில் வட்டி வருமானத்தை தேர்வு செய்யலாம். வங்கிகள் தரும் வட்டி விகிதத்தை விட இவற்றுக்கான வட்டி விகிதம் கூடுதலாகும். ஆனால், வங்கி டிபாசிட்களுக்கு இருக்கும் பாதுகாப்பு இவற்றுக்கு கிடையாது. பொதுவாக வர்த்தக நிறுவனங்களின் மதிப்பு, நம்பகத்தன்மை ஆகியவற்றோடு, இத்திட்டங்களுக்கான கிரெடிட் ரேட்டிங்கை கருத்தில் கொண்டு முடிவு எடுக்க வேண்டும் என்கின்றனர்.
பத்திரங்கள் :அரசு சார்ந்த நிறுவனங்களால் வெளியிடப்படும் வரி இல்லா பத்திரங்களும், நீண்ட கால முதலீட்டிற்கான நல்ல வாய்ப்பாக அமைகின்றன. அண்மை காலங்களில் வெளியான பல வரி இல்லா பத்திரங்கள், முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்த நிதியாண்டில் புதிய பத்திரங்கள் வெளியிடப்படும் வாய்ப்பு இல்லை என்றாலும், இவை பங்குச் சந்தையில் பரிவர்த்தனை செய்யப்படுவதால் செகண்டரி மார்க்கெட் மூலம் வாங்கும் வாய்ப்பு இருக்கிறது. பொதுவாக அதிக வருமான வரி விகித பிரிவில் உள்ளவர்களுக்கு இவை ஏற்றவை என கருதப்படுகின்றன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|