பதிவு செய்த நாள்
24 ஜூலை2016
01:02
புதுடில்லி:கடந்த, 2015 – 16ம் நிதியாண்டில், பல்வேறு திட்டங்களில், அரசு முதலீடுகள் அதிகரித்து, தனியார் முதலீடுகள் குறைந்திருப்பது ஆய்வொன்றில் தெரியவந்து உள்ளது. கடந்த நிதியாண்டில், நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பொது முதலீடுகள் குறித்து, எச்.எஸ்.பி.சி., நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை விவரம்:கடந்த, 20 ஆண்டு களில் இல்லாத வகையில், 2015 – 16ம் நிதியாண்டில், பல்வேறு திட்டங்களில், மத்திய, மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள், பொது துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் முதலீடு, 21 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயம், தனியார் முதலீடு, 1.4 சதவீதம் பின்னடைவைக் கண்டுள்ளது.
இந்தியாவில், முதலீடுகளுக்கான தேவையில், தனியார் துறை, 75 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. எனினும், மதிப்பீட்டு காலத்தில், ஒட்டுமொத்த முதலீட்டு வளர்ச்சி, 4 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது. கடந்த, 20 ஆண்டுகளில், முதலீடுகளின் சராசரி வளர்ச்சி, 8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தனியார் முதலீடுகள் தொடர்ந்து குறைய வாய்ப்பில்லை. அடிப்படை காரணிகள் வலுவாக உள்ளன. குறிப்பாக, ஒரு நாடு, பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்று வரும்போது, விரிவாக்கத் திட்டங்களுக்கு தேவை அதிகம் இருக்கும்.
இது, முதலீடுகளுக்கு வழி வகுக்கும். தனியார் முதலீடுகளில் காணப்படும் மந்தநிலை, வரும் மாதங்களில் மாறும்.இந்தியாவில், நுகர்வோருக்கான தேவை அதிகரித்து வருவதால், பல்வேறு திட்டங்களில், அரசின் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. இது, தனியார் துறையில், கூட்டு முதலீடுகள் பெருக வழிவகுக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|