பதிவு செய்த நாள்
26 ஜூலை2016
07:22
நியூயார்க் : அமெரிக்காவைச் சேர்ந்த, ‘யாகூ’ வலைதள நிறுவனத்தை, தொலைத்தொடர்பு துறையைச் சேர்ந்த, வெரிசான் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், 32 ஆயிரத்து, 361 கோடி ரூபாய்க்கு (483 கோடி டாலர்) கையகப்படுத்துகிறது.
இது தொடர்பாக, பல மாதங்களாக, இரு நிறுவனங்களுக்கும் இடையே ரகசிய பேச்சு நடைபெற்று வந்தது. இந்நிலையில், நேற்று, யாகூ நிறுவனத்தை கையகப்படுத்த உள்ளதாக, வெரிசான் கம்யூனிகேஷன்ஸ் அதிகார பூர்வமாக அறிவித்தது. யாகூ நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஒப்புதலுக்கு பின், 2017, மார்ச் மாதத்திற்குள், யாகூ, வெரிசான் நிறுவனத்தின் ஓர் அங்கமாக மாறும். அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களான, ஜெரி யங், டேவிட் பிலோ ஆகியோர் இணைந்து, 1994ல், யாகூ நிறுவனத்தை உருவாக்கினர்.
இணையத்தில், வலைதள நிறுவனங்களின் முகவரிகளை தேடித் தரும் முன்னோடி தேடல் பொறி என்ற சிறப்பு, யாகூ வலைதளத்திற்கு உள்ளது. பின்னாளில், பொழுதுபோக்கு, செய்திகள், விளையாட்டு என, ஏராளமான வசதிகளுடன், கிடுகிடுவென யாகூ வளர்ந்தது.துவக்கத்தில், ‘கூகுள்’ தேடல் பொறி வசதிகளை பயன்படுத்தி வந்த யாகூ, அந்நிறுவனத்தை கையகப்படுத்த விரும்பியது. ஆனால், கூகுள் அதை ஏற்காமல், 1998ல், தனியே வலைதள தேடல் பொறியாக செயல்படத் துவங்கியது. கூகுள், கூடுதல் வசதிகளுடன் உலகளவில் விறுவிறுவென நெட்டிசன்களை வசீகரித்துக் கொண்டது. இதனால், போட்டியை சமாளிக்க முடியாமல் யாகூ திணறியது. இந்நிலையில், சமூக வலைதளமான, ‘பேஸ்புக்’ நிறுவனமும், யாகூவிற்கு பலத்த போட்டியை ஏற்படுத்தியது.
இதனால், தடுமாறிய யாகூ நிறுவனத்தை, சில ஆண்டுகளுக்கு முன், ‘மைக்ரோசாப்ட்’ கையகப்படுத்த முன்வந்தது. ஆனால், அதை ஏற்காத யாகூ, தற்போது, வெரிசான் வழங்க முன் வந்த தொகையை ஏற்றுக்கொண்டுஉள்ளது. அமெரிக்காவில் தொலைத்தொடர்பு சேவையில் முதலிடத்தில் உள்ள, வெரிசான் கம்யூனிகேஷன்ஸ், பல்வேறு நாடுகளில் இணைய சேவையை வழங்கி வருகிறது. யாகூவை கையகப்படுத்துவதன் மூலம், இணையம் சார்ந்த வர்த்தக செயல்பாடுகளிலும், உலகளவில் தனித்துவம் பெற, வெரிசான் திட்டமிட்டுள்ளது.
* உலகளவில் மிக மதிப்புள்ள வலைதள நிறுவனங்களில் யாகூ, நான்காவது இடத்தில் உள்ளது* யாகூ வலைதளத்தை, பிரதி மாதம், 70 கோடி பேர் பார்வை இடுகின்றனர்* 30க்கும் மேற்பட்ட மொழிகளில் சேவை வழங்கி வருகிறது * வலைதளம் வாயிலாக மாதம், 50 கோடிக்கும் அதிகமானோர், பொருட்களை வாங்குகின்றனர்* யாகூ நிறுவனத்தில், 16 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பணியாற்றுகின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|