பதிவு செய்த நாள்
27 ஜூலை2016
01:29
புதுடில்லி : ‘இந்திய வேளாண் ரசாயனப் பொருட்கள் சந்தை மதிப்பு, வரும், 2020ல், 630 கோடி டாலராக உயரும்’ என, டி.எஸ்.எம்.ஜி., மற்றும் ‘பிக்கி’ அமைப்பு ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதன் விபரம்: நாட்டில், மக்கள் தொகை பெருக்கத்திற்கு நிகராக, உணவுப் பொருட்களுக்கான தேவையும் உயர்ந்து வருகிறது. தற்போது, ஆண்டுக்கு, 25.30 கோடி டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. வரும், 2030ல், உணவு தானியங்களின் தேவை, 35.50 கோடி டன்னாக உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப, உணவு தானியங்கள் உற்பத்தி அதிகரிக்க வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, நாட்டில், விவசாயம் செய்வதற்கு தகுதியான விளைநிலம் குறைந்துள்ளது; அவற்றிலும், பயிரிடும் பரப்பளவு குறைந்து வருகிறது.
காலாவதியாகும் காப்புரிமைகள்:அதேசமயம், வேளாண் பயிர்களில் பூச்சி தாக்குதல் பெருகி வருகிறது. இதனால், வேளாண் உற்பத்தி பாதிக்கப்பட்டு, உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய முடியாத சூழலுக்கு வித்திட்டுள்ளது. இப்பிரச்னையால், வேளாண் பயிர்களைக் காக்கும் ரசாயனப் பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில், வேளாண் பயிர் பாதுகாப்புக்காக ரசாயனப் பொருட்கள் பயன்படுத்துவது, மிகக் குறைவாகவே உள்ளது.
உலகளவில், ஒரு ஹெக்டேருக்கு, சராசரியாக, 3 கிலோ பயிர் பாதுகாப்பு பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது, இந்தியாவில், 0.6 கிலோ என்ற அளவில் குறைவாக உள்ளது. அதனால், இந்தியாவில், வேளாண் ரசாயனங்கள் துறைக்கு, மிகச் சிறப்பான எதிர்காலம் உள்ளது. நாட்டில், பயன்படுத்தப்படும் பயிர் பாதுகாப்பு பொருட்களில், பூச்சிக் கொல்லி மருந்துகள், 60 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன. அடுத்து, காளான் கொல்லி மருந்துகள், 18 சதவீதம்; களைக்கொல்லி மருந்துகள், 16 சதவீதம் என்ற அளவில் உள்ளன. வரும் ஆண்டுகளில், இவற்றின் பங்களிப்பு அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளவில், பல வேளாண் ரசாயனப் பொருட்களின் காப்புரிமைகள் காலாவதியாகி வருகின்றன. அவற்றை, இந்தியநிறுவனங்கள், குறைந்த செலவில் உற்பத்தி செய்யும். வேளாண் ரசாயனப் பொருட்களின் தேவை உயர்ந்து வருவதால், அவற்றுக்கான ஆய்வு நடவடிக்கைகளும் அதிகரிக்கும்.கடந்த இரண்டு ஆண்டுகளாக, வறட்சி, சர்வதேச பொருளாதார மந்தநிலை ஆகிய காரணங்களால், இந்திய பயிர் பாதுகாப்பு துறையின் வளர்ச்சி, சுணக்கமாக இருந்தது. அதனால், 2014 – 15ம் நிதியாண்டில், இந்திய வேளாண் ரசாயனங்கள் துறையின் சந்தை மதிப்பு, 440 கோடி டாலராக இருந்தது.
பருவமழை :இந்தாண்டு, பருவ மழை பொழிவால், இத்துறையின் வளர்ச்சி நன்கு இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. வேளாண் ரசாயனப் பொருட்களின் தேவை, ஆண்டுக்கு, 6.5 சதவீதம்; ஏற்றுமதி, 9 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. அதன் அடிப்படையில், வரும், 2020ல், வேளாண் ரசாயன பொருட்கள் சந்தை மதிப்பு, 630 கோடி டாலராக உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|