பதிவு செய்த நாள்
31 ஆக2016
07:25
மும்பை : மத்திய அரசு, ஆசிய, ஆப்ரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகளுக்கான புதிய, ‘பேக்கேஜிங்’ விதிமுறைகளை உருவாக்குமாறு, இந்திய பேக்கேஜிங் மையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
மருந்துகளை பாதுகாப்பான உறைகள், பெட்டிகள் ஆகியவற்றில் அடைத்து விற்பது தொடர்பான பயிலரங்கம், மும்பையில் நடைபெற்றது.
அதில் பங்கேற்ற, மத்திய வர்த்தக துறை இணை செயலர் சுதான்ஷு பாண்டே, பின் செய்தியாளர்களிடம் பேசியதாவது: இந்தியா, மருந்து உற்பத்தியில் மூன்றாவது இடத்திலும், அவற்றின் மதிப்பில், 13வது இடத்திலும் உள்ளது.
தடைக்கல்இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளில், ‘ஜெனரிக்’ எனப்படும், மூல மருந்துகளின் பங்கு, 80 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இத்தகைய மருந்துகள் ஏற்றுமதியில், அளவு அடிப்படையில், 20 சதவீத பங்களிப்புடன், இந்தியா, முதலிடத்தில் உள்ளது. சர்வதேச மருந்து துறை, ஆண்டுக்கு, 5 சதவீத வளர்ச்சி கண்டு வரும் நிலையில், இந்திய மருந்து துறை, 15 சதவீத வளர்ச்சியை கண்டு வருகிறது. வரும், 2020ல், மிகப்பெரிய மருந்து சந்தையை கொண்ட நாடுகளில், இந்தியா, ஆறாவது இடத்தை பிடிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகைய வேகமான வளர்ச்சிக்கு தடைக் கல்லாக, மருந்துகளின் பேக்கேஜிங் பிரச்னை உள்ளது. மருந்துகளின் பாதுகாப்பிற்கும், போலி மருந்துகளை கட்டுப்படுத்தவும், உயர்தரமான பேக்கேஜிங் முறைகளை பின்பற்றுவது அவசியம். அதில், கவனக்குறைவாக செயல்படும் மருந்து நிறுவனங்களின் ஏற்றுமதி பாதிக்கப்படுகிறது.
சமீபத்தில், ‘சர்வதேச விதிமுறைப்படி பேக்கிங் செய்யப்படவில்லை’ என, இந்தியா அனுப்பிய மருந்துகளை, வியட்னாம் நிராகரித்துள்ளது. அதனால், அம்மருந்துகளை திரும்பப் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. இது போன்ற பிரச்னைகளை தவிர்க்க, ஆசிய, ஆப்ரிக்க நாடுகளுக்கான மருந்து ஏற்றுமதிக்கு, புதிய பேக்கேஜிங் தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை உருவாக்குமாறு, இந்திய பேக்கேஜிங் மையத்திற்கு, வர்த்தக அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அடுத்த ஆண்டில்...இதையடுத்து, புதிய பேக்கேஜிங் விதிமுறைகளை உருவாக்கும் பணி துவங்கியுள்ளது. இது தொடர்பாக, முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன், ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டில், புதிய பேக்கேஜிங் விதிமுறைகள் அமலுக்கு வரும். சர்வதேச தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி, பேக்கேஜ் செய்யப்படும் இந்திய மருந்துகளுக்கு, உலக நாடுகளில் வரவேற்பு அதிகரிக்கும்; இது, நாட்டின் மருந்து ஏற்றுமதி வளர்ச்சிக்கு உதவும். அத்துடன், போலி மருந்துகளால், இந்திய மருந்து நிறுவனங்களுக்கு ஏற்படும் பாதிப்பும் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|