பதிவு செய்த நாள்
31 ஆக2016
23:57
புதுடில்லி : ‘‘இந்திய வாகனத் துறை, உலகளவில் முதல் இடத்தை பிடிப்பதற்கான ஆற்றலுடன், மிக விரைவாக வளர்ச்சி கண்டு வருகிறது,’’ என, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அவர், டில்லியில் நடைபெற்ற, வாகன உதிரி பாகங்கள் தயாரிப்போர் கூட்டமைப்பின் கூட்டத்தில் மேலும் பேசியதாவது: இந்திய வாகனத் துறை, ஆண்டுக்கு 4.50 லட்சம் கோடி ரூபாய் விற்றுமுதலுடன், 8 சதவீத வளர்ச்சியை கண்டு வருகிறது. அடுத்த, 10 ஆண்டுகளில், வாகன துறையின் விற்றுமுதல், 20 லட்சம் கோடி ரூபாயாக உயரும். இந்திய வாகன துறைக்கு, சர்வதேச அளவில், முதல் இடத்தை பிடிக்கக் கூடிய ஆற்றல் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்றுமதி :இந்தியாவின் வாகன ஏற்றுமதி, 70 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது. இதை உயர்த்த வேண்டும். அதற்கு, புதுமையான கண்டுபிடிப்புகளும், ஆய்வும் அவசியம். அத்துடன் தரக் கட்டுப்பாட்டை கடைபிடிப்பதிலும் உறுதியாக இருக்க வேண்டும். தரத்தில் சமரசம் செய்து கொண்டால், வர்த்தக வாய்ப்புகளை இழக்க நேரிடும். ஏற்றுமதியை அதிகரிப்பதே நம் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும். ஏற்றுமதியை ஊக்குவிக்க, மத்திய அரசு ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
குறிப்பாக, நீர்வழி போக்குவரத்திற்கும், துறைமுகங்களில் ஏற்றுமதி வசதிகளை அதிகரிப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. புதிய துறைமுகங்கள் உருவாக்கப்படுகின்றன; சுலபமாக சரக்குகளை கொண்டு வரவும், எடுத்துச் செல்லவும் அணுகு சாலைகள் அமைக்கப்படுகின்றன.கடந்த ஆண்டு, மும்பை துறைமுகத்தில் இருந்து, 1.58 லட்சம் வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இது, இந்தாண்டு, 2 லட்சமாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
போக்குவரத்து செலவு :உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில் இருந்து, மேற்கு வங்கத்தின் ஹால்டி நகர் வரை, நீர்வழிப் போக்குவரத்து துவங்கியுள்ளது. இதில், முதற்கட்டமாக, கார்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இதனால், அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில், கார் விலையில், 4,000 – 5,000 ரூபாய் வரை குறையும். மத்திய அரசு, 7,500 கி.மீ., நீளமுள்ள கடலோரம் மற்றும், 20,000 கி.மீ., அளவிற்கான, உள்நாட்டு நீர்வழிப் பாதையில் சரக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம், நிறுவனங்களின் சரக்கு போக்குவரத்து செலவு, குறிப்பிடத்தக்க அளவிற்கு குறையும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|