பதிவு செய்த நாள்
30 அக்2016
23:48
பிரச்னைகளை எதிர்கொள்ளும் போது மிகையாக நடந்து கொண்டு நமக்கு நாமே அவசர நிலையை உருவாக்கி கொள்கிறோம் என்கிறார் ரிச்சர்ட் கார்ல்சன். ‘டோண்ட் ஸ்வெட் தி ஸ்மால் ஸ்டப்’ எனும் புத்தகத்தில், சின்ன சின்ன விஷயங்களை நினைத்து கவலைப்படாமல் எல்லாவற்றையும், புதிய கண்ணோட்டத்தில் பார்க்கவும் வழிகாட்டுகிறார்.
நாம் சின்ன விஷயங்களை நினைத்து கவலைப் பட பழகியிருக்கிறோம். பெரிய சித்திரத்தை பார்க்கத்தவறி விடுகிறோம். எதிர்மறையான விஷயங்களில் கவனம் செலுத்துகிறோம். நம் வாழ்க்கையை ஏதோ அவசர நிலை போல வாழ்கிறோம். நாம் பிஸியாக இருப்பது போல காட்டிக்கொண்டு, பிரச்னைகளை தீர்க்க போராடிக் கொண்டு, ஆனால், உண்மையில் அவற்றை அதிகமாக்கி கொண்டிருக்கிறோம். ஏனெனில் எல்லாமே நமக்கு மலைப்பாகத் தெரிகிறது.இதற்கு மாறாக வாழ்க்கையை எளிதாக்கி கொள்ள வழி இருக்கிறது. அந்த மாற்று வழி, எதிர்வினை புரிவதை விட்டுவிட்டும், புதிய புரிதல் கொண்ட பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்வதாகும். பெரும்பாலான நேரங்களில் யோசித்துப் பார்த்தால் பெரிய விஷயமாக இல்லாத சின்ன விஷயங்களுக்காக நாம் அதிகம் அலட்டிக் கொள்கிறோம். போக்குவரத்து நெரிசல் கண்டு கோபம் கொள்கிறோம்.
இது பற்றி நாள் முழுவதும் பேசும் பழக்கம் கொண்டிருக்கிறோம். இப்படி பல சின்ன சின்ன விஷயங்கள் இருக்கின்றன. வரிசையில் காத்து இருப்பது முதல், அதிக வேலை பளுவை சுமப்பது வரை சின்ன விஷயங்கள் குறித்து அதிகம் கவலைப்படாமல் இருக்க கற்றுக்கொண்டால் வாழ்க்கை நன்றாக இருக்கும். இதை இலக்காக கொள்ளும் போது, மென்மையாகவும், கருணை யாகவும் இருப்பதற்கான ஆற்றலை பெறுவீர்கள். நம்மில் பலர் வாழ்க்கையை ஒரு பெரிய அவசர நிலையாக கருதி ஓடிக்கொண்டே இருப்பதற்கான காரணம், அமைதியானவர்களாகவும் அன்பானவர்களாகவும் மாறிவிட்டால் நாம் இலக்குகளை அடைவதில் இருந்து தவறிவிடுவோம் என்ற அச்சமாகும். ஆனால், உண்மையில் இதற்கு எதிர் கருத்தே நிதர்சனம் என புரிந்து கொண்டால் அச்சத்தை வெல்லலாம்.
காலையில் சீக்கிரம் எழுந்து கொண்டால் பலவேலைகளை செய்வதற்கான பொன்னான நேரம் கிடைக்கும். மன அமைதிக்காக தியானம் செய்யலாம். நமக்குள் அமைதியாக உணரும் தன்மை கொண்டிருந்தாலும் வாழ்க்கையில் சாதிக்கலாம். மன அமைதியை உணர எளிய வழிகள் பல இருக்கின்றன. மற்றவர்கள் பேசும் போது குறுக்கிடாமல் கவனியுங்கள். எதிர்காலம் பற்றிய கற்பனை கவலைகளை விட்டுவிட்டு இப்போதைய தருணத்தை அனுபவியுங்கள்.வெற்று கணத்தை கண்டு அஞ்ச வேண்டாம். செய்வதற்கு ஒன்றும் செய்யாமல் இருப்பதில் தவறில்லை. இதன் மூலம் மனதில் தெளிவை பெறலாம். மற்றவர்கள் உங்கள் செயல்களை ஏற்றுக்கொள்ளாமல் விமர்சிக்கும் போது அதனால் உணர்ச்சி வசப்படாமல், இது இயல்பானது தான் என எடுத்துக்கொள்ளுங்கள்.
மகிழ்ச்சியாக உணரும் தருணங்களில் நன்றி உணர்வுடன் இருங்கள். மோசமாக உணரும் போது அமைதியாக இருங்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதில் கவனம் செலுத்துவதன் மூலம் உங்கள் எண்ணங்களையும் மாற்றிக்கொள்ள முடியும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|