பதிவு செய்த நாள்
21 நவ2016
03:42
‘நெட் பேங்கிங்’ வசதி மூலம், பணப் பரிவர்த்தனை மேற்கொள்வது தவிர, மேலும் பலவிதங்களில் வங்கிச் சேவைகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இணையம் மூலம் வங்கிச் சேவையை பெற வழி செய்யும் நெட் பேங்கிங் வசதி, வேகமாக பிரபலமாகி வருகிறது. பலரும் நெட் பேங்கிங் வசதியை பயன்படுத்த துவங்கியிருக்கின்றனர். எனினும் பெரும்பாலானோர் கணக்கில் மிச்சமுள்ள தொகையை அறியவும், பணப் பரிவர்த்தனை செய்யவும் தான், இந்த சேவையை அதிகம் பயன்படுத்துகின்றனர். நெட் பேங்கிங் வசதியை மேலும் பலவிதங்களில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
நெட் பேங்கிங் வசதியை பயன்படுத்தும் போது, வங்கிகள் அதற்கான இணையதளத்தை அமைத்துள்ள விதத்தை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு வங்கி இணையதளத்திலும், பல்வேறு வசதிகளை அணுகும் வசதி வெவ்வேறு இடங்களில் இருக்கலாம். உதாரணமாக, எச்.டி.எப்.சி., வங்கி இணையதளத்தில் காசோலை புத்தகத்திற்கான கோரிக்கை வைக்கும் வசதி, ‘ரிக்வெஸ்ட்’ எனும் வேண்டுகோள் பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஸ்டேட் பேங்க் இணையதளத்தில் இந்த வசதி, இ- – சர்வீசஸ் எனும் பகுதியின் கீழ் வருகிறது. எனவே முதலில், வங்கிகளின் இணையதள அமைப்பை புரிந்து கொண்டால், எந்ததெந்த சேவையை எப்படி அணுகலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மேலும் வசதிகள்இணையதளம் மூலம் காசோலை புத்தகம் கோருவது தவிர, வழங்கப்பட்ட காசோலைக்கான பணத்தை நிறுத்தி வைக்கும், ‘ஸ்டாப் பேமென்ட்’ கோரிக்கையையும் வழங்கலாம். இதற்காக காசோலை விபரங்களை குறிப்பிட்டு, பணத்தை நிறுத்தி வைக்க கேட்பதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். ஆனால் இந்த வசதியை பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டியிருக்கலாம் என்பதை அறியவும்.இதே போலவே, இணையம் மூலமே வரைவோலை எனப்படும், ‘டிடி’ கோரும் வசதியும் இருக்கிறது. உறுப்பினர் தன் கணக்கில் இருந்து தொகை மற்றும் ‘டிடி’ யார் பெயரில் என, குறிப்பிட வேண்டும்.
குறிப்பிட்ட காலத்திற்கான வங்கி கணக்கு அறிக்கை விபரம் தேவை என்றாலும் அதை இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம் அல்லது, ‘டவுன்லோடு’ செய்து கொள்ளலாம். கே.ஒய்.சி., அப்டேட் கணக்கு தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதோடு, கே.ஒய்.சி., விபரங்களை அப்டேட் செய்யவும் முடியும். இதற்காக, இணையதளம் மூலமே கோரிக்கை வைக்கலாம். மேலும் குறுஞ்செய்தி மூலம் தகவல்களை கோரும் வசதியில் இணையலாம்; அதிலிருந்து விலகிக் கொள்ளலாம். கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ள நாமினி பெயரை மாற்றவும் கோரலாம்.
வங்கி இணையதளங்களில் இதற்கான வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.பலரும் வங்கிகளில், பணப் பரிவர்த்தனை சேவைகள் தவிர முதலீடு தொடர்பான வசதியையும் நாடுகின்றனர். காப்பீடு, மியூச்சுவல் பண்ட் ஆகிய சேவைகளையும் வங்கிகள் மூலம் பெற முடிகிறது. இது போன்ற முதலீட்டு வசதிகளை நிர்வகிப்பதற்கும் கூட இணைய வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். வைப்பு நிதி, தொடர் வைப்பு நிதி, டிமெட் கணக்கு மூலமான பங்கு பரிவர்த்தனை, காப்பீடு சேவைகள் உள்ளிட்டவற்றை வங்கி இணையதளம் மூலம் பெறலாம். இதற்கான பணத்தை வாடிக்கையாளர் தன் கணக்கிலிருந்து இணையம் மூலமே செலுத்திவிடலாம். பங்கு பரிவர்த்தனை போன்றவற்றுக்காக, வங்கியில் டிமெட் கணக்கு துவக்க வேண்டும் என்றாலும் எளிதாக செய்து கொள்ளலாம். டிமெட் கணக்கு துவக்க கூடுதல் கட்டணம் இல்லை என்றாலும், சில வங்கிகள் ஆண்டு பராமரிப்பு கட்டணம் வசூலிக்கலாம்.
பரிவர்த்தனைமின் கட்டணம், தொலைபேசி கட்டணம் உள்ளிட்ட பெரும்பாலான பில் தொகையை நெட் பேங்கிங் வசதி மூலம் செலுத்தலாம். செலுத்தப்படும் தொகையை வாடிக்கையாளர் பார்த்து பரிசீலித்த பின் ஒப்புதல் அளிக்கும் வசதியும் இருக்கிறது. ஆனால் சில நேரங்களில், பில் தொகை செலுத்தப்படாமலேயே பணம் பிடிக்கப்படுவதாக சிலர் புகார் தெரிவிக்கின்றனர். இது போன்ற நேரங்களில், வங்கியிடம் முறையிட்டு சரி செய்து கொள்ளலாம். இணையம் மூலம் பணம் செலுத்தும் போது தள்ளுபடி கூப்பன்கள் போன்ற சலுகைகளை பெறும் வாய்ப்பும் இருக்கிறது.
எனினும் இணையம் வங்கிச் சேவையை பயன்படுத்தும் போது அது பாதுகாப்பானதாக அமைவதிலும் கவனம் செலுத்த வேண்டும். நெட் பேங்கிங் நடைமுறை தொடர்பாக சொல்லப்படும், ‘பாஸ்வேர்டு’ பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையிலான இ – மெயில் இணைப்புகளை கிளிக் செய்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என, வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|