பதிவு செய்த நாள்
01 டிச2016
01:58
ஆமதாபாத்: சுசூகி மோட்டார் நிறுவனம், குஜராத்தில் அமைத்து வரும் தொழிற்சாலையில், 2017க்கு முன்னதாகவே, உற்பத்தியை துவக்க முடிவு செய்துள்ளது.
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த, சுசூகி மோட்டார் கார்ப், மோட்டார் வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், குஜராத் மாநிலம், மெக்சானா மாவட்டத்தில், தன் முதல் வாகன தொழிற்சாலையை அமைத்து வருகிறது. மாருதி சுசூகி இந்தியா உடன் ஒப்பந்தம் செய்து, அந்நிறுவனத்தின் கார்களை, இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்ய உள்ளது, சுசூகி நிறுவனம்.
இந்நிலையில், புதிய ஆலையில், 2017க்கு முன்னதாகவே, கார் உற்பத்தியை துவக்க, சுசூகி மோட்டார் முடிவு செய்துள்ளது. இது குறித்து, இந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:எங்கள் நிறுவனம், குஜராத்தில், 2,600 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய ஆலையை அமைத்து வருகிறது. இந்த ஆலை, ஆண்டுக்கு, 2.50 லட்சம் கார்களை தயாரிக்கும் திறன் உடையதாகும். இந்த ஆலையில், முதல் பிரிவில், அடுத்த ஆண்டுக்கு முன்னதாகவே உற்பத்தி துவங்கப்படும். அதே உற்பத்தித்திறன் உடைய விரிவாக்க ஆலையும், விரைவில் அமைக்கப்பட உள்ளது. விரிவாக்க ஆலையில் உற்பத்தி, 2019ல், துவங்கி விடும் என, எதிர்பார்க்கிறோம். முதல் ஆலை மற்றும் விரிவாக்க ஆலை ஆகியவற்றுக்கான மொத்த முதலீடு, 5,800 கோடி ரூபாயாக இருக்கும். இந்த புதிய ஆலையில், மாருதி நிறுவனத்தின், ‘பலேனோ, விட்டாரா பிரெஸ்ஸா ஆகிய மாடல் கார்கள் உற்பத்தி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
விட்டாரா பிரெஸ்ஸா, பலேனோ ஆகிய கார்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், அந்த தேவையை, தற்போது உள்ள நிலையில் ஈடுசெய்ய முடியாமல் இருக்கிறது மாருதி சுசூகி. இதன் காரணமாகவே, சுசூகி நிறுவனம், புதிய ஆலையை விரைவாக திறந்து, உற்பத்தியில் இறங்கும் முயற்சியில் இறங்கி இருப்பதாக தெரிகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|