பதிவு செய்த நாள்
09 டிச2016
04:38
புதுடில்லி:‘மத்திய அரசின், பண மதிப்பு நீக்க நடவடிக்கையாலும், ஆர்ஜியோ நிறுவனத்தின் போட்டி காரணமாகவும், தொலை தொடர்பு சேவை நிறுவனங்களின் வருவாய், 5 –- 6 சதவீதம் குறையும்’ என, தர நிர்ணய அமைப்பான, ‘இக்ரா’ தெரிவித்து உள்ளது.
அதன் விபரம்:தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள், பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன. அலைவரிசை உரிமம் பெறுவதற்கு, அதிகளவில் முதலீடு செய்துள்ள நிறுவனங்கள், விதிமுறைப்படி, சிறிய நகரங்களிலும் மொபைல் போன் சேவையை விரிவுபடுத்தும் கட்டாயத்தில் உள்ளன. அதற்கான, அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு, குறிப்பிட்ட தொகை ஒதுக்க வேண்டியுள்ளது.
கடன்:விளம்பரங்கள், சலுகை திட்டங்கள் மூலம், வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வதற்கான செலவினங்களும், நிறுவனங்கள் வருவாயில், தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இது போன்ற காரணங்களால், தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள், 4.25 லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளித்து வருகின்றன.
இத்தகைய சூழலில், ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த, ஆர்ஜியோ நிறுவனம், மொபைல் போன் சேவையில் களமிறங்கி, சந்தைப் போட்டியை மேலும் சூடாக்கியுள்ளது. அதுவும், செப்., 5 முதல், டிச., இறுதி வரை, இலவச சேவை என அறிவித்து, தற்போது, 2017 மார்ச் வரை, இச்சலுகையை நீட்டித்துள்ளது. இதனால், முன்னணி தொலை தொடர்பு சேவை நிறுவனங்களின் புதிய வாடிக்கையாளர் வளர்ச்சி சரிந்துள்ளது.அதே சமயம், ஆர்ஜியோ, மூன்று மாதங்களில், 5.20 கோடி வாடிக்கையாளர்களை கவர்ந்து, வேகமாக முன்னேறி வருகிறது. இந்நிலையில், மத்திய அரசின், பண மதிப்பு நீக்க அறிவிப்பால், பணத் தட்டுப்பாடு ஏற்பட்டு, மக்கள் செலவழிப்பது குறைந்துள்ளது.
பண தட்டுப்பாடு:இதனால், குறிப்பாக, ‘பிரீபெய்டு’ பிரிவில், மொபைல் போன் சேவை நிறுவனங்களின் வருவாய், பெருமளவு குறைந்துள்ளது. பணத் தட்டுப்பாடு பிரச்னை, டிசம்பருக்கு பின், படிப்படியாக குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்ஜியோவின் இலவச சேவை, அடுத்த மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு இருப்பதால், அடுத்த ஆறு மாதங்களுக்கு, தொலை தொடர்பு சேவை நிறுவனங்களின் வருவாய், 5 – 6 சதவீதம் குறையும். ஆர்ஜியோ நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி, நீண்ட கால அடிப்படையில், நிலையாக இருக்கும். இந்நிறுவனத்திற்கு, கடன் பிரச்னைகள் எழும்பட்சத்தில், அதை சமாளிக்க, தாய் நிறுவனமான ரிலையன்ஸ் உதவும். அதனால், ஆர்ஜியோவிற்கு, கடன் தகுதி மதிப்பீட்டில், ஸ்திரத்தன்மை பிரிவு அளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|