பதிவு செய்த நாள்
12 டிச2016
05:47
ரெப்போ வகிதம் மாற்றம் இல்லாமல் தொடரும் நிலையிலும், கடன்களுக்கான வட்டி விகிதம் குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக வல்லுனர்கள் கருதுகின்றனர்.
பரவலாக எதிர்பார்க்கப்பட்டதற்கு மாறாக, ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு, அண்மையில் வெளியிட்ட நிதிக் கொள்கை அறிவிப்பில், ரெப்போ விகிதத்தை குறைக்கவில்லை. ஏற்கனவே உள்ள ரெப்போ விகிதமே தொடரும் என, தெரிவிக்கப்பட்டது.
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு, பொருளாதார வல்லுனர்கள் மற்றும் வங்கியாளர்களை ஏமாற்றத்திலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது. ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை, 25 அடிப்படை புள்ளிகளாவது குறைக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது.
பண மதிப்பு நீக்க நடவடிக்கை, பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், வட்டி குறைப்பு ஓரளவு ஊக்கமாக அமைந்திருக்கும் என்று கருதப்படுகிறது. வங்கிகள், மத்திய வங்கியிடம் இருந்து பெறும், குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டால், வங்கிகளும், தங்கள் வட்டி விகிதத்தை குறைக்கும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
எனவே, ரிசர்வ் வங்கி, ரெப்போ வகிதத்தை குறைத்திருந்தால், கடன்களுக்கான வட்டி விகிதமும் குறைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் முடிவு, வீட்டுக்கடன் வாடிக்கையாளர்களையும், ஏமாற்றத்தில் ஆழ்த்தி உள்ளதாக கருதப்படுகிறது.
காரணம் என்ன?
ரிசர்வ் வங்கி, ரெப்போ விகிதம் மாற்றம் இல்லாமல் தொடரும் என, அறிவித்ததற்கு, சர்வதேச மற்றும் உள்நாட்டு பொருளாதார சூழல் காரணமாக இருக்கலாம் என, கருதப்படுகிறது. அமெரிக்க வளர்ச்சி விகிதம், உள்நாட்டு பணவீக்க போக்கு உள்ளிட்ட அம்சங்கள் தாக்கம் செலுத்தியதாக, பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். ரிசர்வ் வங்கி காத்திருந்து பார்த்து முடிவு செய்யும் அணுகு முறையை கடைபிடித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதனடிப்படையில், அடுத்த நிதிக் கொள்கை அறிவிப்பில், வட்டி குறைப்பு இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே, ரெப்போ விகிதம் குறைக்கப்படவில்லை என்றாலும் கூட, கடன்களுக்கான வட்டி விகிதத்தை, வங்கிகள் குறைக்கும் வாய்ப்பு இருப்பதாக, வல்லுனர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
பண மதிப்பு நீக்க நடவடிக்கையை அடுத்து, பழைய ரூபாய் நோட்டுகள், வங்கிகளிடம் டிபாசிட் செய்யப்பட்டுள்ளதால், வங்கிகளில், டிபாசிட்கள் பெருமளவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, வங்கிகள் டிபாசிட் திரட்டும் செலவு குறைந்துள்ளது. பல வங்கிகள், டிபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளன.
வட்டி குறையும்?
இதே போலவே, கடன்களுக்கான வட்டி விகிதமும் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. வங்கிகளிடம் அதிகளவில், டிபாசிட் பணம் குவிந்துள்ளது. மேலும், வங்கிகளுக்கான, சி.ஆர்.ஆர்., எனப்படும், தற்காலிக ரொக்க இருப்பு விகிதம், 100 சதவீதமாக இருக்க வேண்டும் என, அறிவித்ததையும், ரிசர்வ் வங்கி விலக்கி கொண்டு உள்ளது. இவ்வாறு இருப்பு வைக்கப்படும் தொகைக்கு வட்டி கிடையாது என்பதால், வங்கிகள் இந்த அறிவிப்பால் பாதிக்கப்பட்டிருக்கும். ஆனால், இது விலக்கி கொள்ளப்பட்டிருப்பதால், வங்கிகள் கடன் வழங்குவதற்கான தொகை அதிகரித்துள்ளது. எனவே, கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
ஏற்கனவே, ஒரு சில வங்கிகள், ரிசர்வ் வங்கி அறிவிப்புக்கு முன்பாகவே கடன்களுக்கான, எம்.சி.எல்.ஆர்., அடிப்படையிலான வட்டி விகிதத்தை ஓரளவு குறைத்துள்ளன. வரும் மாதங்களில், இந்த போக்கு தொடரலாம் என, கருதப்படுகிறது.
ரிசர்வ் வங்கி, கடந்த கடந்த காலங்களில் அறிவித்த வட்டி குறைப்பின் பலனை, வங்கிகள் முழுவதுமாக வாடிக்கையாளர்களுக்கு அளிக்கவில்லை என்ற கருத்தும் இருக்கிறது. எனவே, தற்போது பண இருப்பு அதிகரித்துள்ள நிலையில், வங்கிகள் வட்டி விகிதத்தை சிறிதளவேனும் குறைக்க வாய்ப்பு உள்ளதாக, வல்லுனர்கள் வாதிடுகின்றனர்.
புதிதாக வீட்டுக்கடன் பெற திட்டமிட்டுள்ளவர்கள், இந்த சூழலில் மாறும் வட்டி விகித அடிப்படையில், கடன் பெற தீர்மானிக்கலாம் என்றும் கூறுகின்றனர். ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களை பொறுத்தவரை, வங்கிகள், எம்.சி.எல்.ஆர்., விகிதத்தை மாற்றி அமைக்கும் வரை காத்திருக்க வேண்டும்.
இந்த ஆண்டு ஏப்ரல் முதல் வழங்கப்படும் வீட்டுக்கடன்களுக்கு, இந்த முறையிலேயே வட்டி விகிதம் தீர்மானிக்கப்படுகிறது. முந்தைய பேஸ்ரேட் முறையில் கடன் பெற்றவர்கள், விரும்பினால், இந்த முறைக்கு மாறிக்கொள்ளும் வாய்ப்பும் அளிக்கப்பட்டு உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|