பதிவு செய்த நாள்
15 ஜன2017
04:10
ஐதராபாத்:'' இந்திய சுற்றுலா துறையை மேலும் அமைப்பு சார்ந்ததாக மாற்றி, ரொக்கமற்ற பரிவர்த்தனை அதிகமானால், ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்ப துறையின் வளர்ச்சியை விஞ்சும்,'' என, அமெரிக்காவின் இமோரி பல்கலையின் சந்தைப்படுத்துதல் பிரிவு பேராசிரியர் ஜகதீஷ் என். சேத் தெரிவித்துள்ளார்.
அவர், ஐதராபாத் பல்கலையில், 'சந்தைப்படுத்துவதில் நிகழும் மாற்றங்கள்' என்ற சர்வதேச கருத்தரங்கில், பங்கேற்று பேசியதாவது:இந்தியாவில் ஏராளமான சுற்றுலா தலங்கள் இருந்தும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, ஆண்டுக்கு, 80 லட்சம் என்ற அளவில் தான் உள்ளது.இதை உயர்த்த, மத்திய அரசுடன், மாநில அரசுகளும் பல்வேறு ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் ; அவை அமைத்த, சிறப்பு பொருளாதார மண்டலங்கள், பொறியியல் கல்லுாரிகள் போன்றவை, ஐ.டி., துறையின் வளர்ச்சிக்கு, வலுவான அடிப்படை கட்டமைப்பு ஏற்படுத்தி தந்தன.
இந்திய ஐ.டி.,சேவைகள் துறையில், துவக்கத்தில் சிறிய நிறுவனங்கள் தான் ஈடுபட்டன. திடீரென்று, அவை ஆண்டுக்கு, 40,000 – 50,000 பட்டதாரிகளை பணியமர்த்தும் அளவிற்கு, வளர்ச்சி பெற்றன.இந்த அடிச்சுவட்டை பின்பற்றி, சுற்றுலா துறையும் வளர்ச்சி காண ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.சுற்றுலா துறையை, மேலும் அமைப்பு சார்ந்த துறையாக மாற்ற, தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக, ரொக்கப் பரிவர்த்தனையை குறைத்து, அனைத்து மட்டங்களிலும், மின்னணு பணப் பரிமாற்ற வசதியை ஏற்படுத்த வேண்டும்.
வெளிநாட்டு பயணிகள், ஊர் திரும்பும் போது, கையிலுள்ள ரொக்கத்தை எப்படியாவது செலவழித்து தீர வேண்டிய இக்கட்டை சந்திக்கின்றனர். இந்த பிரச்னைக்கு, மின்னணு பரிவர்த்தனை தீர்வளிக்கும்.
சீனா, சிங்கப்பூர் போன்ற நாடுகள், சுற்றுலாவை மேம்படுத்த, அத்துறை சார்ந்த சர்வதேச கருத்தரங்குகள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றை அடிக்கடி நடத்துகின்றன. இதை, இந்தியாவும் பின்பற்ற வேண்டும்.
ஐ.டி., துறையைப் போல, சுற்றுலா துறையின் வளர்ச்சிக்கு, அத்துறை சார்ந்த தொழில்முனைவோர்கள் அதிக அளவில் உருவாக வேண்டும். சுற்றுலா செயல்பாடுகள் அனைத்தையும், கணினிமயமாக்கி ஒருங்கிணைக்க வேண்டும்.
ஐ.டி., சேவைதுறையில், 20 ஆண்டுகளுக்கு முன் இருந்த வளர்ச்சி விகிதம், தற்போது இல்லை. இந்நிலையில், அரசு உரிய நடவடிக்கை எடுத்தால், சுற்றுலா துறை, ஐ.டி., துறையை விட, வளர்ச்சியில் விஞ்சும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்திய சுற்றுலா சந்தை, தற்போதைய, 12,000 கோடி டாலரில் இருந்து, 2020ல், 27,000 கோடி டாலராக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது; இது, அரசு நடவடிக்கைகள் மூலம் 50,000 கோடி டாலராக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|