பதிவு செய்த நாள்
23 ஜன2017
07:29
புதிய வகை வங்கிகளான, ‘பேமென்ட்’ வங்கிகள், இந்திய சூழலில், வங்கிச் சேவைகள் அளிக்கப்படுவதில் பெரும் மாற்றத்தை கொண்டு வரும் என, எதிர்பார்க்கப்படும் நிலையில், இவை பல்வேறு சவால்களையும் எதிர்கொள்ள உள்ளன.
பேமென்ட் வங்கிகள் தான், இப்போது வங்கித் துறையில் அதிகம் கவனத்தை ஈர்க்கும் கருத்தாக்கமாக உள்ளது. அதிலும், பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின், ‘மொபைல் வாலட்’ பயன்பாடு உள்ளிட்ட, ‘டிஜிட்டல்’ பரிவர்த்தனை வசதி அதிகரித்து வரும் நிலையில், பேமென்ட் வங்கிகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பேமென்ட் வங்கிகள், மொபைல் போனை மையமாக கொண்டு செயல்படும் என்பதால், இவை டிஜிட்டல் பரிவர்த்தனையை, மேலும் பரவலாக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.பேமென்ட் வங்கிகளின் நோக்கமே, அனைவருக்கும் நிதிச்சேவை அளிக்கும் இலக்கை நோக்கி முன்னேறுவது தான். இந்த நோக்கத்துடனே, ரிசர்வ் வங்கி இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. முதற்கட்டமாக, 11 நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டன. இந்த வகை வங்கிகள், வழக்கமான வங்கிகளை போன்றவை தான் என்றாலும், அவற்றை விட வரம்புகள் கொண்டவை. இவை கடன் வழங்க முடியாது மற்றும் கிரெடிட் கார்டு வழங்க முடியாது. ஆனால், பணப் பரிவர்த்தனை, டிபாசிட் ஏற்பு போன்றவற்றில் ஈடுபடலாம்.
மொபைல் போனே வங்கிபேமென்ட் வங்கிகள், மொபைல் போனை பிரதானமாக கொண்டு செயல்படும். எனவே, வாடிக்கையாளரை பொறுத்தவரை, மொபைல் போனே, வங்கி கிளை போல அமையும். இவற்றில் கணக்கு துவக்குவதும் எளிதாக இருக்கும்; ஆதார் அடையாள அட்டையை காண்பித்து உறுப்பினராகலாம். மொபைல் போன் எண்ணே, வங்கிக் கணக்கு எண்ணாக அமையும்; மொபைல் போனே, வங்கிக் கணக்கு புத்தகமாகவும் அமையும். மேலும், இந்த வகை வங்கிகள், சில்லரை வர்த்தக மையங்களை, தங்கள் பிரதிநிதியாக அமர்த்திக் கொண்டு செயல்பட உள்ளன. இதனால், பெட்டிக்கடைகளில் கூட, இனி, மொபைல் போன் மூலம் பணப் பரிவர்த்தனை செய்வது சாத்தியமாகும். அனுமதி பெற்ற நிறுவனங்களில், ஏர்டெல் நிறுவனம், முதல் பேமென்ட் வங்கியை துவக்கியுள்ளது. முதற்கட்டமாக, ராஜஸ்தான் மாநிலத்தில், முன்னோட்ட வடிவில் துவக்கப்பட்ட இந்த சேவை, நாட்டின் மற்ற மாநிலங்களிலும் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.
ஏர்டெல் நிறுவனம், நாடு முழுவதும் உள்ள, ஏர்டெல் சில்லரை வர்த்தக மையங்கள் வாயிலாக, இந்த சேவையை வழங்க உள்ளது. சேமிப்பு கணக்கு டிபாசிட்டிற்கு, 7.25 சதவீத வட்டியை அறிவித்துள்ளது.அடுத்ததாக, ‘பேடிஎம்’ நிறுவனம், பேமென்ட் வங்கியை துவக்குவதற்கான தீவிர முயற்சியில் உள்ளது. பேடிஎம் பேமென்ட் வங்கி துவங்கிய பின், ‘பேடிஎம் வாலெட்’ வைத்திருப்பவர்கள், பேடிஎம் வங்கிக்கு மாற்றப்படுவர் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்திய அஞ்சல் துறை சார்பிலும், பேமென்ட் வங்கிக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
அஞ்சல் துறை பேமென்ட் வங்கி துவக்கப்படும் போது, நாடு முழுவதும் உள்ள அஞ்சலகங்களே, வங்கி கிளை போல செயல்படும்.கிராமப்புறத்தில் சேவைநாட்டின் குக்கிராமங்களுக்கு கூட, வங்கிச் சேவையை கொண்டு செல்ல, இந்த வங்கிகள் உதவும் என, கருதப்படுகிறது. வழக்கமாக, வங்கிகள், கிராமப்புறங்களில் கிளைகள் அமைத்து செயல்படுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. பேமென்ட் வங்கிகள், கிராமப்புறங்களில் சேவை அளிக்கக் கூடியவையாக செயல்படும். இந்த சேவையை பெற, ‘ஸ்மார்ட் போன்’ தான் வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை; சாதாரண போனிலும் சேவை பெறலாம். முதற்கட்டமாக, இவை பணப் பரிவர்த்தனை மற்றும் டிபாசிட் சேவையை அளிக்க உள்ளன. வாடிக்கையாளர்கள் பணம் செலுத்துவது, பில் தொகை செலுத்துவது போன்றவற்றுக்கும் இவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பயண டிக்கெட் போன்றவற்றையும் வாங்க முடியும். கணக்கில் இருந்து பணம் ரொக்கமாக எடுக்கப்படும் போது, சிறிதளவு கட்டணம் செலுத்த வேண்டிஇருக்கும். ஏர்டெல் நிறுவனம் இதை, 0.65 சதவீதமாக நிர்ணயித்துள்ளது.வங்கிச் சேவை பெற முடியாமல் இருக்கும் மக்களுக்கு, வங்கிச் சேவையை கொண்டு செல்வதில், பேமென்ட் வங்கிகள் முக்கிய பங்காற்றும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இவற்றின் செயல்பாடுகளுக்கு வரம்புகள் உள்ளதால், லாபமீட்ட இவை புதுமையான முறையில் செயல்பட வேண்டியிருக்கும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|