பதிவு செய்த நாள்
23 ஜன2017
23:57
புதுடில்லி : மின்னணு பணப் பரிவர்த்தனைகளை கண்காணிக்க, தனி அமைப்பை ஏற்படுத்தும் மத்திய அரசின் திட்டத்திற்கு, ரிசர்வ் வங்கி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு, ‘டிஜிட்டல் பேமென்ட்’ எனப்படும், மின்னணு முறையிலான பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவித்து வருகிறது.இந்நிலையில், மின்னணு பரிவர்த்தனைகள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட, ரத்தன் வாட்டாள் தலைமையிலான குழு, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம், தன் பரிந்துரைகளை வழங்கியுள்ளது.அதில், தனிப்பட்ட கட்டுப்பாட்டு அமைப்பின் கீழாகவோ அல்லது ரிசர்வ் வங்கியின் கீழ் உள்ள, பி.பி.எஸ்.எஸ்., அமைப்பிற்கு கூடுதல் அதிகாரம் வழங்கியோ, மின்னணு பணப் பரிவர்த்தனைகளை கண்காணிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு, ரிசர்வ் வங்கி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, மத்திய அரசு உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: மின்னணு பரிவர்த்தனை தொடர்பாக, ரிசர்வ் வங்கி, வாட்டாள் குழுவிடம் அறிக்கை ஒன்றை அளித்துள்ளது. அதில், நிதிச் சந்தையில் பணப்புழக்கத்தை குறைக்கவும், அதிகரிக்கவும், தனக்குள்ள பொறுப்பை எடுத்துக் கூறி, அதனால், ஒட்டுமொத்த பணப் பரிவர்த்தனைகளை கையாளும் அதிகாரம், தன்னிடமே இருக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. ரிசர்வ் வங்கி சட்டம், வங்கி மற்றும் வாடிக்கையாளர் நலனை கருத்தில் கொண்டு, ரொக்கப் பயன்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு உள்ளது.
மின்னணு முறையில், வங்கியின் துணையின்றியும் பணப் பட்டுவாடா மேற்கொள்ளலாம் என்பதால், மின்னணு பரிவர்த்தனைக்கு என, தனி சட்ட அதிகாரம் உள்ள கண்காணிப்பு அமைப்பை ஏற்படுத்துவதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது. ரிசர்வ் வங்கி, வங்கிகளின் முன்னேற்றத்தில் தான் ஆர்வம் காட்டும் என்பதால், மின்னணு பணப் பட்டுவாடா சேவை நிறுவனங்களின் வளர்ச்சிக்கு, தனி அமைப்பு ஏற்படுத்துவது அவசியம் எனவும், அரசு கருதுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|