பதிவு செய்த நாள்
20 பிப்2017
04:42
முன்னணி, ஐ.டி., நிறுவனங்கள், ‘பைபேக்’ திட்டம் மூலம், பங்குகளை திரும்ப வாங்கிக் கொள்ளும் வாய்ப்பை தீவிரமாக பரிசீலிக்கத் துவங்கிஇருக்கும் சூழல் பற்றி, ஒரு பார்வை.
முதலீட்டாளர்கள் மற்றும் வல்லுனர்கள் மத்தியில், நிறுவனங்களின் பைபேக் திட்டம் தான், தீவிரமாக விவாதிக்கப்படும் விஷயமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக, ஐ.டி., துறையில் ஆர்வம் உள்ள முதலீட்டாளர்கள், இந்த விவாதத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். டி.சி.எஸ்., உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் பைபேக் திட்டம் மூலம், பங்குகளை திரும்ப பெறுவது பற்றி தீவிரமாக பரிசீலித்து வருவதே, இதற்கு முக்கிய காரணம். டி.சி.எஸ்., நிறுவனத்தின் இயக்குனர் குழு, இது தொடர்பாக முடிவெடுக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்போசிஸ் உள்ளிட்ட மற்ற முன்னணி நிறுவனங்களும் பங்குகளைத் திரும்ப பெறும் முடிவை அறிவிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இன்போசிஸ் நிறுவனம் இதை மறுத்திருந்தாலும், அதன் முதலீட்டாளர்கள் சிலர், இது குறித்து வலியுறுத்தியுள்ளனர்.
பைபேக் ஏன்?நிறுவனங்கள் தங்கள் பங்குகளை முதலீட்டாளர்களிடம் இருந்து திரும்ப வாங்கிக் கொள்ளும் செயல்பாடே, பைபேக் என, குறிப்பிடப்படுகிறது. பைபேக் மூலம், பங்குகளை நிறுவனங்கள் வாங்கிக்கொள்வதற்கு பலவித காரணங்கள் உள்ளன. பங்குகள் மீதான வருவாயை அதிகரிப்பது, மூலதனம் மீதான பலன், நிகரமதிப்பு மீதான பலனை அதிகரிப்பது, நிறுவன பங்குகளை நிலைப்படுத்துவது, கையகப்படுத்தல் முயற்சியை முறியடிப்பது என, பல வித காரணங்களுக்காக பைபேக் வாய்ப்பை நிறுவனங்கள் நாடலாம். இவைத்தவிர பொதுவாக நிறுவனங்கள் கைவசம், ரொக்க இருப்பு அதிகமாக உள்ள நிலையிலும், பங்குதாரர்களுக்கான பலனை அதிகரிக்க விரும்பும் சூழலிலும், நிறுவனங்கள் இந்த முடிவை மேற்கொள்ளலாம்.
இந்திய ஐ.டி., நிறுவனங்கள் மத்தியில் இப்போது, பங்குகளை திரும்ப வாங்கும் வாய்ப்பு பரபரப்பாக பேசப்பட பிரதான காரணம், அவற்றின் கைவசம் அதிக ரொக்கம் இருப்பது தான். அதோடு இந்த நிறுவனங்களின் வளர்ச்சி விகிதமும், ஒற்றை இலக்கமாக குறைந்துள்ளது. அண்மை காலமாகவே ஐ.டி., நிறுவனங்கள், வளர்ச்சி நோக்கில் பல்வேறு சவால்களை சந்தித்து வருகின்றன. தானியங்கிமயமாக்கல் உள்ளிட்டவை தாக்கம் செலுத்தும் வகையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் கொள்கை முடிவுகள் புதிய நெருக்கடியை உண்டாக்கியுள்ளன.
இந்த சூழ்நிலையில், கைவசம் ரொக்கத்தை வைத்துள்ள, ஐ.டி., நிறுவனங்கள் ஓரளவு பங்குகளை திரும்ப வாங்கி கொள்ளும் முடிவின் மூலம், அவற்றின் பங்குதாரர்களுக்கு பலன் அளிக்க வேண்டும் எனும் கருத்து முன்வைக்கப்படுகிறது. இக்கருத்திற்கு முதலில் வளைந்து கொடுத்திருப்பது, காக்னிசண்ட் நிறுவனம் தான். இந்நிறுவனம், 3.4 பில்லியன் டாலர் அளவில் பங்குகளை திரும்பி வாங்கி கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது.
என்ன பலன்?இதைத் தொடர்ந்து டி.சி.எஸ்., நிறுவனமும் இது தொடர்பான பரிசீலனையில் ஈடுபட்டுள்ளது. நிறுவன இயக்குனர் குழு, இது தொடர்பாக முடிவு எடுக்க உள்ளது. இது இன்போசிஸ், விப்ரோ உள்ளிட்ட மற்ற முன்னணி ஐ.டி., நிறுவனங்களையும் இதே போன்று முடிவெடுக்கும் நெருக்கடிக்கு உள்ளாக்கலாம் என கருதப்படுகிறது. அதிக ரொக்கம் வைத்துள்ள நிறுவனங்கள், கையகப்படுத்தல் போன்றவற்றில் ஈடுபட்டு, வளர்ச்சி வாய்ப்புகளை பெருக்கி கொள்ளாத நிலையில் பங்குகளை திரும்ப பெறுவது சரியாக இருக்கும் என, வலியுறுத்தப்படுகிறது. இன்போசிஸ், எச்.சி.எல்., மற்றும் டெக் மகிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் கடந்த, 2 ஆண்டுகளில் மொத்தம், 11 நிறுவனங்களை மட்டுமே கையக்கப்படுத்தியுள்ளன.
இந்த சூழ்நிலையில் பங்குகளை திரும்ப வாங்குவது, முதலீட்டாளர்களுக்கு பலன் அளிக்கும் என, வாதிடப்படுகிறது. மேலும், ஈவுத்தொகையாக முதலீட்டாளர்களுக்கு பலன் அளிப்பதைவிட, இந்த முறை மிகவும் ஏற்றது என, கருதப்படுகிறது. ஈவுத்தொகை வழங்கும் போது, அவை வரி விதிப்புக்கு உள்ளாகின்றன. எனவே, பங்குகளை வாங்குவதன் மூலம் பலன் அளிக்க முடியும். மேலும், இவ்வாறு செய்வதன் மூலம் நிறுவனங்கள் தங்கள் மீதான நம்பிக்கையை வலுப்படுத்திக்கொள்ளும். ஐ.டி., நிறுவன பங்குகள் விலை உயர்ந்திருப்பது இதற்கான அடையாளம். எனினும் ஒரு தரப்பினர் நிறுவனங்கள் பங்குகளை திரும்ப பெறுவதை விட, கையில் இருக்கும் ரொக்கத்தை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டு வளர்ச்சியில் கவனம் செலுத்தி முதலீட்டாளர் களுக்கு நீண்ட கால பலனை அளிக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|