பதிவு செய்த நாள்
21 பிப்2017
00:21
புதுடில்லி : மத்திய அரசின், பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், நடப்பு நிதியாண்டின், அக்., – டிச., வரையிலான மூன்றாவது காலாண்டில், சோப்பு முதல், சிமென்ட் வரை, பல்வேறு தயாரிப்புகளில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களின் விற்பனை பாதிக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு, நவ., 8ல், உயர் மதிப்பு கரன்சிகள் செல்லாது என, அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஏற்பட்ட பணத் தட்டுப்பாடு காரணமாக, மக்களின் தேவை குறைந்து, பொருட்களின் விற்பனை சரிவடைந்தது. ‘பண மதிப்பு நீக்க பாதிப்பு தற்காலிகமானது; நீண்ட கால அளவில், பயனளிக்கக் கூடியது’ என, அரசுக்கு ஆதரவாக, பெரும்பான்மையான தொழிலதிபர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
சரிவுபஜாஜ் ஆட்டோ நிர்வாக இயக்குனர் ராஜிவ் பஜாஜ் உள்ளிட்ட, ஓரிரு தொழிலதிபர்கள் மட்டுமே, அரசின் நடவடிக்கைக்கு, பகிரங்க எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், பங்குச் சந்தை பட்டியலில் உள்ள, கார்ப்பரேட் நிறுவனங்கள் பலவற்றின் மூன்றாவது காலாண்டு, நிதி நிலை அறிக்கைகள் வெளியாகி உள்ளன. அவற்றில், பண மதிப்பு நீக்கத்தால், விற்பனை குறைந்து, விற்றுமுதல் வளர்ச்சி குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பணப்புழக்கம் குறைந்ததால், சிமென்ட் தேவை குறைந்து, விற்பனை மந்தமடைந்ததாக, ஆதித்ய பிர்லா குழுமத்தைச் சேர்ந்த, அல்ட்ரா டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘சரிவடைந்த கைக்கடிகாரங்கள் விற்பனை, இன்னும் அதிகரிக்கவில்லை’ என, டாடா குழுமத்தின் டைடன் நிறுவனம் கூறியுள்ளது.இக்குழுமத்தைச் சேர்ந்த, தனிஷ்க் நிறுவனம், பண மதிப்பு நீக்க அறிவிப்பு அன்று, அதுவரை காணாத வகையில், தங்க நகை விற்பனை உயர்ந்ததாகவும், அதன்பின், மந்தமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது.
நகரங்களை விட, கிராமப்புறங்களில், கார், டிராக்டர் ஆகியவற்றின் விற்பனை வீழ்ச்சியுற்றதாக, அவற்றை தயாரிக்கும் மகிந்திரா குழுமம் கூறிஉள்ளது. பஜாஜ் உள்ளிட்ட, இருசக்கர வாகன நிறுவனங்களும், ‘சரிவடைந்த விற்பனை, இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை’ என, தெரிவித்துள்ளன. ஐ.டி.சி., நிறுவனம், அதன், பிஸ்கட், நுாடுல்ஸ், அழகுப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் விற்பனை வீழ்ச்சியடைந்து உள்ளதாக கூறியுள்ளது.
பாதிப்புபணத் தட்டுப்பாடு பிரச்னையால், கடன் தவணை வசூல் பாதிக்கப்பட்டு உள்ளதாக, உஜ்ஜிவன் பைனான்சியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. தாபர் இந்தியா நிறுவனம், அதன் ஷாம்பூ, பற்பசை, கேச பராமரிப்பு எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை, நவம்பரை விட, டிசம்பரில், 50 சதவீதம் குறைந்திருந்ததாக கூறியுள்ளது. காபி டே நிறுவனம், இரு வாரங்கள் வரை, காபித் துாள் விற்பனை குறைந்து, பின், நிலைமை சீரடைந்ததாக தெரிவித்துள்ளது. அது போல, கோத்ரெஜ் கன்ஸ்யூமர், ஜோதி லேப்ஸ், அட்லாப்ஸ் என்டர்டெயின்மென்ட், இந்தியா சிமென்ட்ஸ், தல்வால்கர்ஸ், கிராம்ப்டன் கிரீவ்ஸ் உள்ளிட்ட, பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டதாக கூறியுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|