பதிவு செய்த நாள்
02 மார்2017
00:07
மும்பை : ‘‘உலக வர்த்தக அமைப்பின், ‘வர்த்தக வசதி ஒப்பந்தம்’ அமலுக்கு வந்துள்ளதால், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு, சரக்கு பெட்டகம் சார்ந்த நடைமுறை செலவினம், தலா, 15 ஆயிரம் ரூபாய் வரை குறையும்,’’ என, சுங்க வரி துறையின் முதன்மை ஆணையர், பெனி பட்டாச்சார்யா தெரிவித்து உள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: உலகளவில், ஏற்றுமதி – இறக்குமதியில் ஒளிவுமறைவற்ற, ஒரே சீரான நடைமுறைகளை பின்பற்ற, வர்த்தக வசதி ஒப்பந்தம் துணைபுரியும். இதன் விதிமுறைகள், சர்வதேச நாடுகள் சுலபமாக வர்த்தகம் புரியவும், பரஸ்பர வணிக நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் உதவும். காகித ஆவணங்கள் குறைந்து, அனைத்து பரிவர்த்தனைகளும், மின்னணு முறைக்கு மாறவும், சரக்கு கையாள்வதில், சர்வதேச நடைமுறைகளை பின்பற்றவும், ஒப்பந்தம் வகை செய்கிறது. ஒற்றைச் சாளர நடைமுறை காரணமாக, சரக்குகளை அனுப்புவதற்கான அனுமதியை, ஏற்றுமதியாளர்கள் விரைவாக பெற முடியும். சரக்குகளை, பெட்டகத்தில் வைத்து அனுப்புவது சார்ந்த செலவினங்கள் குறையும்.
ஏற்றுமதியாளர்களுக்கு, 40 அடி நீளம் உள்ள ஒரு சரக்கு பெட்டகத்தை பயன்படுத்துவதற்கான செலவில், 15 ஆயிரம் ரூபாய் வரை மிச்சமாகும். அதுபோல, 20 அடி நீளம் உள்ள ஒரு சரக்கு பெட்டகம் மூலம், சரக்குகளை அனுப்புவதற்கான செலவினத்தில், 10 ஆயிரம் ரூபாய் வரை குறையும். இதன் மூலம், இந்திய ஏற்றுமதியாளர்கள், சர்வதேச சந்தையில், பிற நாடுகளின் போட்டியை சமாளிக்க முடியும். ஏற்றுமதி நடைமுறைகள் விரைவாக முடிக்கப்படும் என்பதால், குறித்த நாளில் சரக்கு டெலிவரி ஆகும் என, எதிர்தரப்பிற்கு உறுதி அளிக்கலாம்.
ஏற்றுமதியில், தற்போதுள்ளதை விட, ஒன்றரை நாட்களும்; இறக்குமதியில், இரண்டு நாட்களும் குறையும். இது, ஏற்றுமதியாளர்களின் நம்பகத்தன்மையை அதிகரிக்கவும், பரஸ்பர வர்த்தகம் மேம்படவும் உதவும்.புதிய ஒப்பந்தம், ஏற்றுமதி, இறக்குமதி துறையினருக்கு மகிழ்ச்சியை அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மைல்கல் ஒப்பந்தம்சுவிட்சர்லாந்தில் உள்ள, ஜெனிவா நகரில், உலக வர்த்தக அமைப்பு இயங்கி வருகிறது. இங்கு, பிப்., 22ல், ‘வர்த்தக வசதி ஒப்பந்தம்’ பெரும்பான்மை உறுப்பு நாடுகளின் ஒப்புதலுடன் நிறைவேறியது; இது, இந்த அமைப்பின், 21 ஆண்டு வரலாற்றில், முதன்முதலாக நிறைவேற்றப்பட்ட, பன்னாட்டு வர்த்தக கூட்டு ஒப்பந்தமாகும். சர்வதேச வர்த்தகத்தில், இது ஒரு மைல்கல் ஒப்பந்தம் என, வர்ணிக்கப்படுகிறது. இதன் மூலம், வளரும் நாடுகள் மற்றும் குறைவான வளர்ச்சி கண்டு வரும் நாடுகளின் புதிய பொருட்கள் ஏற்றுமதி, முறையே, 20 சதவீதம் மற்றும் 35 சதவீதம் அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|