பதிவு செய்த நாள்
28 மார்2017
02:17
புதுடில்லி : இந்திய நிறுவனங்கள், வரும் மாதங்களில், புதிய பங்கு வெளியீடுகள் மூலம், 20 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட உள்ளன.
மத்திய அரசின் நடவடிக்கைகளால், நாட்டின் பொருளாதாரம், நிலையான வளர்ச்சியை கண்டு வருகிறது; பணவீக்கமும் கட்டுக்குள் உள்ளது. பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி, நிதிச் சந்தை முதலீடுகளுக்கு, பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற காரணங்களால், பங்குச் சந்தைகளில் முதலீடுகள் பெருகி வருகின்றன. இத்தகைய சூழலை பயன்படுத்தி, விரிவாக்கத் திட்டங்கள், நடைமுறை மூலதன தேவை போன்றவற்றுக்கான நிதியை திரட்ட, பல நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீடுகளை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளன.
இந்த வகையில், தேசிய பங்குச் சந்தையான, என்.எஸ்.இ., – ஹட்கோ, சி.டி.எஸ்.எல்., – நக் ஷத்திரா வேர்ல்டு, கொச்சின் ஷிப்யார்டு உள்ளிட்ட நிறுவனங்கள், வரும் மாதங்களில், புதிய பங்குகளை வெளியிட உள்ளன. இவற்றுள், ஹட்கோ, சி.டி.எஸ்.எல்., – எஸ்.சந்த் அண்டு கம்பெனி, ஜெனசிஸ் கலர்ஸ், செக்யூரிட்டி அண்டு இன்டெலிஜன்ஸ் சர்வீசஸ் ஆகிய ஐந்து நிறுவனங்களின், பங்கு வெளியீடுகளுக்கு, செபி அனுமதி அளித்துள்ளது.
இத்துடன், ஜி.டி.பி.எல்., – ஹாத்வே, என்.எஸ்.இ., – பாரத் ரோடு நெட்வொர்க், தேஜாஸ் நெட்வொர்க்ஸ், இரிஸ் லைப்சயன்சஸ், சலசர் டெக்னோ இன்ஜினியரிங், ஏ.யு., பைனான்சியர்ஸ், பிரதாப் ஸ்நாக்ஸ், பி.எஸ்.பி., புராஜெக்ட்ஸ் ஆகிய நிறுவனங்களும், பங்குகளை வெளியிட்டு, நிதி திரட்ட உள்ளன.விரைவில், இந்நிறுவனங்களின் பங்கு வெளியீட்டிற்கு செபி அனுமதி அளிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, வரும் மாதங்களில், புதிய பங்கு வெளியீடுகளின் மூலம், நிறுவனங்கள், 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை திரட்டும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.இதில், என்.எஸ்.இ., நிறுவனம் மட்டும், 10 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட வாய்ப்புள்ளதாக, சந்தையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதிக வரவேற்புஆறு ஆண்டுகளுக்குப் பின், 2016ல், புதிய பங்கு வெளியீடுகளுக்கு முதலீட்டாளர்களிடம் அதிக வரவேற்பு காணப்பட்டது; 26 நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீடுகள் மூலம், 26ஆயிரம் கோடி ரூபாய் திரட்டியுள்ளன. இந்தாண்டு, இதுவரை, பி.எஸ்.இ., – அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் உள்ளிட்ட, ஐந்து நிறுவனங்கள், பங்கு வெளியீட்டை மேற்கொண்டுள்ளன.
கவர்ச்சிகரமான விலையில், புதிய பங்குகளை வெளியிட்டால், முதலீட்டாளர்களின் ஆதரவு கிட்டும். அப்பங்குகள் விலை, பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் போது, உயர வாய்ப்புள்ளது என்ற அடிப்படையில், முதலீடுகள் குவியும்.பங்கு விலையை அதிகமாக நிர்ணயித்தால், பங்குச் சந்தையில் பட்டியலிடும் போது, அப்பங்குகள் விலை, அதிகம் உயராது என்ற அனுமானத்தில், அவற்றில் முதலீடு செய்ய, முதலீட்டாளர்கள் தயங்குவர்.-ஐ.வி.சுப்ரமணியம், இயக்குனர், குவாண்டம் ஏ.எம்.சி.,
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|