பதிவு செய்த நாள்
17 ஏப்2017
03:41
குறித்த காலத்தில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது அவசியமானது மட்டும் அல்ல, பல்வேறு பலன்களையும் அளிக்கக்கூடியது என்பதை உணர வேண்டும் என, வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர்.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் காலம் மீண்டும் வந்திருக்கிறது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டியவர்கள், ஜூலை மாத இறுதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். பலரும் இதை ஒரு சுமையாக கருதலாம். வருமான வரி விலக்கு வரம்பிற்கு மேல், வருமானம் உள்ளவர்கள் கட்டாயம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது அவசியம் என்பதையும், பலர் உணராமல் இருப்பதாக வல்லுனர்கள் கூறுகின்றனர். டி.டீ.எஸ்., முறையில் வரி பிடித்தம் செய்யப்பட்டாலும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
தாமதம் இல்லாமல், குறித்த காலத்தில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதால், பல்வேறு அனுகூலங்களும் உள்ளன. ஓராண்டுக்கு மேல் வைத்திருக்கும் பங்குகள் மூலமான, பலன் போன்ற வருமானங்களை கணக்கில் கொண்டு வர இது உதவுகிறது.
எளிமையான படிவம்வருமான வரித் துறை, வருமான வரி தாக்கல் செய்வதை எளிதாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒரு பக்க ஐ.டி.ஆர்., படிவம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 50 லட்சம் ரூபாய் வரை வருமானம் கொண்டவர்கள் மற்றும் ஒரு வீடு கொண்டவர்களுக்கு இது பொருந்தும். இதில் இருந்த சொத்துகள் மற்றும் கடன் பொறுப்புகள் பகுதி விலக்கப்பட்டுள்ளது.ஐ.டி.ஆர்., – 2, ஐ.டி.ஆர்., – 2ஏ, ஐ.டி.ஆர்., – 3 ஆகிய படிவங்கள் ஒன்றிணைக்கப்பட்டு ஐ.டி.ஆர்., 2 படிவமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மற்ற படிவங்கள் ஐ.டி.ஆர்., – 3 மற்றும் ஐ.டி.ஆர்., – 4 என, பெயரிப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு முதல் ஆதார் எண்ணை சமர்ப்பிப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. மேலும், ஆதார் எண்ணுடன், பான் எண்ணை இணைக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. பண மதிப்பு நீக்க காலத்தில், டிபாசிட் செய்த தொகை, 2 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால், அதை குறிப்பிட வேண்டும்.
அடிப்படை வரம்புவருமான வரிச் சட்டத்தின்படி அடிப்படை வரம்பிற்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள் அனைவரும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். நஷ்டத்தை கொண்டு செல்ல விரும்புகிறவர்கள் அல்லது பிடித்தம் செய்யப்பட்ட வரியை திரும்ப பெற விரும்புகிறவர்கள், நீண்ட கால ஆதாய பலன் பெற்றவர்கள் மற்றும் அறக்கட்டளை போன்றவை கீழ் உள்ள சொத்து மூலம் வருமானம் பெற்றவர்கள் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். இது அவசியம் என்பதோடு, பலவித பலன்களையும் அளிக்கக்கூடியது. வீட்டுக் கடன், கல்வி அல்லது வாகனக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது, வருமான வரித் தாக்கல் விபரம் முன்னுரிமையை பெற்றுத்தரும். விசா பெறவும் இது அவசியம். வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் வங்கிகள் கிரெடிட் கார்டு வழங்க தயங்கலாம்.
மேலும், இதன் மூலம் வருமான வரித் துறையிடம் உங்களுக்கான ஆவணப்பதிவை உண்டாக்கலாம். எல்லாவற்றுக்கும் மேல், வருமான வரி தாக்கல் செய்வதன் மூலம் தேசிய பொருளாதாரத்திற்கும் நீங்கள் உதவுகிறீர்கள். குறித்த காலத்தில் விபரங்களை தாக்கல் செய்வதன் மூலம், பின்னர் திருத்தங்களை செய்வது சாத்தியம். வரம்பிற்குள் இருந்தால் பிடித்தம் செய்த வரியை திரும்ப பெறுவதும் சாத்தியம்.
அபராதமும் உண்டு குறித்த காலத்தில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாவிட்டால், அதற்காக அபராதம் விதிக்கப்படலாம். 2017 பட்ஜெட்டில், சரியான மதிப்பீட்டு ஆண்டில் தாக்கல் செய்யாவிட்டால் 5,000 ரூபாய் அபராதம் விதிக்க வழி செய்யப்பட்டுள்ளது. எனவே, குறித்தக் காலத்தில் வருமான வரி தாக்கல் செய்வது மிகவும் அவசியம். தற்போது, டிஜிட்டல் தொழிற்நுட்பத்தின் பயனாக வருமான வரித் துறையால் பரிவர்த்தனைகளை மேலும் சிறந்த முறையில் கண்காணிக்க முடிகிறது. பல்வேறு வகையான வருமானங்களையும் தொடர்ந்து காண்காணிக்கிறது. ஆண்டு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகளையும் கண்காணித்து விபரங்களை திரட்டுவது சாத்தியமாகியுள்ளது. இதனால், தவறிழைப்பவர்களை எளிதாக கண்டறியலாம். எனவே, முறையாக வருமான வரி தாக்கல் செய்வது தேவையில்லாத பிரச்னைகளை தவிர்க்க உதவும்.
வருமான வரி தாக்கல் செய்ய வேண்டியவர்கள்* அடிப்படை வரம்புக்கு அதிகமான வருமானம் உள்ளவர்கள்* ரீபண்ட் பெற விரும்புகிறவர்கள்* சமபங்கு மூலம், நீண்ட கால ஆதாய பலன் பெற்றவர்கள்* கடன் விண்ணப்பங்கள் செயல்முறையில் சாதகம் பெற* விசா பெற விரும்புகிறவர்கள்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|