பதிவு செய்த நாள்
30 ஏப்2017
03:49
புதுடில்லி:‘‘கார்ப்பரேட் நிறுவனங்களின் நிர்வாக செயல்பாடுகள் மோசமாக, மிகவும் கவலை அளிப்பதாக உள்ளன,’’ என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யின் தலைவர் அஜய் தியாகி குற்றஞ்சாட்டி உள்ளார்.
சமீபத்தில், இன்போசிஸ் நிறுவனத்தில், தனி இயக்குனர் நியமனம், உயரதிகாரிகளின் ஊதிய உயர்வு உள்ளிட்டவை தொடர்பாக, நிறுவனர் களுக்கும், இயக்குனர் குழுவுக்கும் பகிரங்க மோதல் வெடித்தது.அதே போல, கடந்த ஆண்டு, டாடா குழுமத்திலும் அதிரடி நடவடிக்கைகள் அரங்கேறின. டாடா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்து, சைரஸ் மிஸ்திரிநீக்கப்பட்டு, ரத்தன் டாடா மீண்டும் தற்காலிக தலைவராக பொறுப்பேற்றார்.
இதை தொடர்ந்து, இருதரப்பிலும் காரசாரமான அறிக்கை போர் நடைபெற்றது. சைரஸ் மிஸ்திரியும், ரத்தன் டாடாவும், ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டி, ‘செபி’யிடம் புகார் அளித்தனர்.பெரிய நிறுவனங்களில் நடைபெறும் இது போன்ற நிர்வாக ரீதியிலான மோதல்களால், அவற்றின் மதிப்பு சரிவதுடன், பங்குச் சந்தையில், அந்நிறுவனங்களின் பங்குகள் விலையிலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
இதனால், பங்கு முதலீட்டாளர்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க, ‘அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களும், நிர்வாக நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்’ என, ‘செபி’ வலியுறுத்தி வருகிறது.
இது குறித்து, ‘செபி’ தலைவர் அஜய் தியாகி, செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:கார்ப்பரேட் நிறுவனங்களின் இயக்குனர் குழு குறித்து, ‘செபி’ தெளிவான வழிகாட்டுதலை வழங்கியுள்ளது. ஆனால், அவற்றை, பல நிறுவனங்கள் பின்பற்றுவதில்லை; நிறுவனங்களின் தணிக்கை குழு செயல்படுவதில்லை.
தனி இயக்குனர்கள், அவர்களுக்கு உரிய பொறுப்புடன் நடந்து கொள்வதில்லை; தலைமைக்கு அடுத்த வாரிசு குறித்த தெளிவான கொள்கையில்லை. இது போல், பல பிரச்னைகள் உள்ளன. அவை, ‘செபி’யின் கவனத்திற்கு வந்துள்ளன. விரைவில், இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
வழிகாட்டு நெறிமுறை
கடந்த ஜனவரியில், கார்ப்பரேட் நிறுவனங்களின் இயக்குனர் குழு, எத்தகைய மதிப்பீட்டின்படி அமைக்கப்பட வேண்டும் என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை, ‘செபி’ அனைத்து நிறுவனங்களுக்கும் அனுப்பியது.அதில், இயக்குனர் குழுவை மதிப்பிடுவதில், தலைவருக்கு உள்ள பொறுப்புகள் குறித்து, தெளிவாக, முன்கூட்டியே வரையறுக்க வேண்டும். தனி இயக்குனர்கள் உட்பட, பல்வேறு உறுப்பினர்கள் மற்றும் குழுக்களுக்கு, இயக்குனர் குழுவை மதிப்பிடுவதில் உள்ள பொறுப்புகளை நிர்ணயிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விதிமுறைப்படி, நிர்வாக செயல்பாடுகளை நிறுவனங்கள் வெளியிட வேண்டும்; தனி இயக்குனர்கள் மற்றும் இதர உறுப்பினர்களின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்வதற்கான அளவுகோல்களை, நிறுவனங்களின் பணி நியமனம் மற்றும் ஊதியக் குழுக்கள் உருவாக்க வேண்டும் எனவும், ‘செபி’ வலியுறுத்தி உள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|