பதிவு செய்த நாள்
12 ஜூன்2017
04:18
வரிச்சலுகையை மனதில் கொண்டு வாங்கப்பட்ட பாலிசி, செலவு மிக்கதாக விளங்கும் போது, அவற்றில் இருந்து வெளியேறுவதை பரிசீலனை செய்வது சரியாக இருக்கும் என, வல்லுனர்கள் கருதுகின்றனர்.
காப்பீடு என்பது முதலீடு அல்ல, இரண்டையும் ஒன்றாக கலந்து பார்ப்பது தவறு என்று சொல்லப்பட்டாலும், முதலீடாகவும் கருதி பாலிசிகளை வாங்குவதே பரவலான வழக்கமாக இருக்கிறது. காப்பீடு மட்டும் அளிக்கும் பாலிசியை விட, பாதுகாப்புடன் பலனும் அளிக்கும் பாலிசிகளை நாடுவது பொதுவான இயல்பாக இருக்கிறது. மேலும் வரிச்சலுகைக்காகவும், பாலிசிகளை வாங்கும் பழக்கம் இருக்கிறது. யூலிப்கள், எண்டோமென்ட் பாலிசி போன்றவை வரி சேமிப்பு காலத்தில் பலரால் வாங்கப்படுகின்றன. வரி சேமிப்பிற்காகவே, ஆண்டுதோறும் பல பாலிசிகள் வாங்கி வைத்திருப்பவர்களும் இருக்கின்றனர்.
வரிச்சலுகைக்காக பாலிசிகள் வாங்குவது சிறந்த வழியா எனும் கேள்வி ஒரு பக்கம் இருந்தாலும், இந்த பாலிசிகள் தரும் பலன்கள் போதுமானதா எனும் கேள்வியை கேட்டுக்கொள்வது அவசியம் என, நிதி வல்லுனர்கள் கூறுகின்றனர். உதாரணத்திற்கு, வரி சேமிப்பிற்காக வாங்கப்பட்ட ஒரு பாலிசியை, சில ஆண்டுகள் கழித்து பரிசீலித்துப் பார்க்கும் போது, அது செலவு மிக்கதாக தோன்றலாம் என்கின்றனர். அதாவது, பாலிசி தரும் பலன் குறைவாகவும், அதற்கான செலவு அதிகமாகவும் இருப்பதை உணரலாம். சில நேரங்களில், செலவை கணக்கில் கொண்டு, ஈக்விட்டி பண்ட் போன்ற மற்ற முதலீட்டு வழிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் பாலிசியின் பலன் குறைவாக இருப்பதையும் உணரலாம் என்கின்றனர்.
வெளியேறும் வழி!
இது போன்ற சூழ்நிலையில், செலவு மிக்க பாலிசியை விட்டு வெளியேறும் வாய்ப்பை பரிசீலிப்பது புத்திசாலித்தனமானதாக இருக்கும் என, நிதி வல்லுனர்கள் கருதுகின்றனர். செலவு மிக்க பாலிசிகளை ஒப்படைத்து வெளியேறிவிட்டு, அந்த தொகையை வேறு வழிகளில் முதலீடு செய்யலாம் என்றும் வல்லுனர்கள் சொல்கின்றனர். சில நேரங்களில் இவ்வாறு செய்வது இழப்பை ஏற்படுத்தலாம்; ஆனால் தொடர்ந்து குறைந்த பலனை எதிர்கொண்டு மொத்தமாக அதிகம் இழப்பதை விட, ஓரளவு இழப்பை எதிர்கொண்டு வெளியேறுவது ஏற்றது. இதன் மூலம் தேவையில்லாத இழப்பை குறைத்துக்கொள்ளலாம்.
யூலிப் ரக பாலிசிகளை எடுத்திருப்பவர்கள் சந்தை நிலவரத்தை கவனித்து, ஏற்ற நிலையில் வெளியேறுவது சரியாக இருக்கும் என்று கூறப்பட்டாலும், சந்தை நிலையை மட்டுமே பரிசீலித்தால் போதாது என்றும் கருதப்படுகிறது. பொதுவாக பாலிசிகளுக்கு லாக் இன் காலம் உண்டு. யூலிப்களை பொறுத்தவரை, லாக் இன் காலத்திற்கு முன் பாலிசிதாரர் வெளியேற தீர்மானித்தாலும், அவருக்கான மதிப்பு தொகையை வழங்குவதில் தாமதம் செய்யக்கூடாது என காப்பீட்டு நிறுவனங்களுக்கு அண்மையில் காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இது பாலிசிதாரர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது.
கவனிக்க வேண்டியவை
எனினும், பாலிசியை ஒப்படைத்து வெளியேறும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. லாக் இன் காலம், வெளியேறுவதால் ஏற்படும் இழப்பு, சரண்டர் மதிப்பு, திட்டத்தின் செயல்பாடு ஆகிய அம்சங்களை பரிசீலிக்க வேண்டும். முக்கியமாக, பாலிசியை விட்டு வெளியேறினாலும் போதிய காப்பீடு பாதுகாப்பு இருக்குமா என்றும் பார்க்க வேண்டும். வழக்கமான பாலிசிகள் என்றால் சேர்ந்துள்ள போன்ஸ் மற்றும் செலுத்த வேண்டிய பிரீமியம் ஆகியவற்றை கவனிக்க வேண்டும்.
யூலிப்கள் எனில் ஐந்தாண்டுகளுக்கு தொடர்ந்துவிட்டு வெளியேறுவதை பரிசீலிக்கலாம் என்கின்றனர். இவற்றுக்கான லாக் இன் காலம் ஐந்தாண்டுகள் அல்லது தொடர்ச்சியாக, மூன்று பிரீமியம்களுக்குப் பிறகு சரண்டர் மதிப்பு உண்டாகிறது. 4வது மற்றும் 5வது பிரீமியம் செலுத்தாமல் கூட, ஐந்தாண்டுக்கு பிறகு சரண்டர் செய்து பணம் பெறலாம். யூலிப் திட்டங்கள், நிகரான மியூச்சுவல் பண்ட் அல்லது வேறு நிகரான திட்டங்களுடன் ஒப்பிடும் போது நீண்ட கால நோக்கில் குறைவான பலனை அளித்தால் அவற்றை ஒப்படைத்துவிட்டு வெளியேறுவது பொருத்தமாக இருக்கும்.
எண்டோமென்ட் திட்டங்களை பொறுத்தவரை, முதிர்வு காலம் அருகாமையில் இருந்தால் அவற்றை தொடரலாம். இல்லை எனில், அவற்றை சரண்டர் செய்துவிட்டு வெளியேறி அந்த தொகையை வேறு வழிகளில் முதலீடு செய்யலாம். சம் அஷ்யூர்டு தொகை, திரும்பி கிடைக்கும் பலன் ஆகியவற்றை கணக்கு செய்து பார்க்க வேண்டும். வெளியேறுவதால் ஏற்படும் இழப்பையும் கணக்கிட்டு, அதை குறைக்கும் வழி இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும்.
காப்பீடு முக்கிய அம்சங்கள்:
• பாதுகாப்பு அளிப்பதே காப்பீட்டின் பிரதான அம்சம்.• காப்பீடை முதலீடாக கருதுவது சரியல்ல.• வரிச்சேமிப்பை மட்டும் மனதில் கொள்ளக்கூடாது.• பாலிசியை பராமரிப்பது செலவுமிக்கது எனில் வெளியேறலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|