பதிவு செய்த நாள்
24 ஜூன்2017
00:23
புதுடில்லி : ‘பத்து தேசிய நெடுஞ்சாலைகளை விற்பது குறித்த, மத்திய அரசின் திட்டம், அன்னிய நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கான அரிய வாய்ப்பு’ என, பி.எம்.ஐ., ரிசர்ச் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இந்திய சாலைகளில், தேசிய நெடுஞ்சாலையின் பங்கு, 1.7 சதவீதம் என்ற அளவிற்குத் தான் உள்ளது. ஆனால், 40 சதவீதத்திற்கும் அதிகமான சரக்கு போக்குவரத்து, தேசிய நெடுஞ்சாலைகளில் தான் நடைபெறுகிறது. 2016 ஜூன் நிலவரப்படி, தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம், 1.08 லட்சம் கி.மீ., ஆக உள்ளது. இதை, அடுத்த மூன்று ஆண்டுகளில், 2 லட்சம் கி.மீ., ஆக உயர்த்த, பிரதமர் மோடி தலைமையிலான, மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு உள்ளது.இதன் விளைவாக, மூன்று ஆண்டுகளுக்கு முன், நாள் ஒன்றுக்கு, 3 கி.மீ., வீதம் முடிக்கப்பட்டு வந்த நெடுஞ்சாலை பணி, 2016 – 17ம் நிதியாண்டில், 23 கி.மீ., ஆக உயர்ந்துள்ளது. இதை, அடுத்த ஆண்டு, 40 கி.மீ., ஆக அதிகரிக்க திட்டமிட்டு உள்ளதாக, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
ஆனால், நிதிப் பற்றாக்குறையால், தற்போதைய நெடுஞ்சாலை பணிகளையே முடிக்க முடியாமல், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திணறி வருகிறது. இதன் காரணமாக, அரசு நிதியில் கட்டப்பட்ட, 75 தேசிய நெடுஞ்சாலைகளில், 10 நெடுஞ்சாலைகளை விற்பனை செய்வது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இவை, குறிப்பிட்ட காலம் வரை, சுங்கக் கட்டணம் வசூலித்து, பின் அரசுக்கு திரும்ப அளிக்கும் நடைமுறையின் கீழ் விற்பனை செய்யப்படும்.
இது குறித்து, ‘பிட்ச்’ குழுமத்தைச் சேர்ந்த, பி.எம்.ஐ., ரிசர்ச் நிறுவனம், ‘அதிக இடர்ப்பாடு இல்லாத இந்த நெடுஞ்சாலை திட்டங்களில், அன்னிய நிறுவனங்கள் முதலீடு செய்ய, இது ஓர் அரிய வாய்ப்பு’ என, தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|