பதிவு செய்த நாள்
26 ஜூன்2017
07:39
நிதி வெற்றிக்கான வழிகளை விவரிக்கும் வகையில், ‘மோர் மணி ப்ளீஸ்’ எனும் புத்தகத்தை எழுதியுள்ள ஸ்காட் கேம், பட்ஜெட் போடுவதன் முக்கியத்துவத்தையும், அதற்கான வழிகளையும் விவரிக்கிறார்:
பட்ஜெட் எனும் வார்த்தையை கேட்டதுமே, கால்குலேட்டர், காகிதங்கள், பார்முலாக்கள் இவற்றோடு மல்லுக்கட்ட வேண்டியிருக்கும் என, திகைக்கலாம். ஆனால், பட்ஜெட் போடுவது என்பது, நீங்கள் நினைத்து அஞ்சுவது போல, அத்தனை சோதனையானது அல்ல. நிச்சயமாக பட்ஜெட் போடுவது வலி மிகுந்ததோ, அதிக நேரம் எடுத்துக் கொள்ளக் கூடியதோ அல்ல.
நீண்ட கால நோக்கில், நிதி விஷயங்களை வெற்றிகரமாக்க பட்ஜெட் மிகவும் அவசியம். இதற்கு, மாதம் சில மணி நேரம் போதும். பட்ஜெட் போடாமல் செலவு செய்வது என்பது, கண்ணைக் கட்டி, கார் ஓட்டுவதற்கு சமம். நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள்; எவ்வளவு செலவு செய்து, எவ்வளவு சேமிக்கிறீர்கள் போன்றவை குறித்த சித்திரத்தை பட்ஜெட் அளிக்கிறது.
உங்கள் கையில் அதிக பணம் இருக்க வேண்டும் எனில், பட்ஜெட் அவசியம். நீங்கள் யோசிக்காமல் வாங்கும் ஒவ்வொரு பொருட்களும், பாதிப்பை ஏற்படுத்தும். இத்தகைய பழக்கங்களை அறிந்து கட்டுப்படுத்தினால் தான், நிதி வாழ்க்கையை கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள முடியும். செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாயையும், நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
பட்ஜெட்டை தீர்மானித்தப் பின், எந்த செலவுகளை எல்லாம் கட்டுப்படுத்தலாம் என, உங்களுக்கு தெரியும். நீங்கள் தினமும் மாலையில், காபி சாப்பிடுபவராக இருந்தால், அது பற்றி யோசிக்காமலே கூட செலவு செய்து கொண்டு இருக்கலாம். ஆனால் செலவுகளை கண்காணிக்கத் துவங்கும் போது, இதற்காக செலவாகும் தொகை, யோசிக்க வைக்கும். அதற்காக, காபி குடிப்பதையே விட்டுவிட வேண்டும் என்றில்லை. கட்டுப்படுத்திக் கொள்ளலாம். இது போன்ற சின்ன சின்ன விஷயங்கள் மூலம், முக்கிய தேவைகளுக்கான பணத்தை சேமிக்க முடியும்.
வரி, பிடித்தம் போக, மாதம் வரும் வருமானம் என்ன என்பதையும், செலவுகளையும் குறித்து வைக்க வேண்டும். ஒவ்வொரு ரசீது, கிரெடிட் கார்டு அறிக்கை மூலம், செலவுகளை கணக்கில் கொள்ள வேண்டும். இதன் பின் பட்ஜெட்டிற்கான திட்டமிடலை துவக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம், தேவையில்லாத செலவுகளை கண்டறிந்து தவிர்க்கலாம்.
செலவு போக எஞ்சியத் தொகை சேமிப்பாக அமையும். ஆனால், மாதந்தோறும் வருமானத்தில், 10 சதவீத தொகையை, சேமிப்புக்கு என முதலிலேயே எடுத்து வைத்து விட வேண்டும். சேமிப்பை ஒரு செலவாக கருதலாம். இந்த தொகை தானாக சேமிப்பு கணக்கில் சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யலாம். இது மிகவும் எளிதானது. இந்த மூலம் சேரும் தொகை நல்ல முதலீடாக அமையும். அது மட்டும் அல்ல, சேமிப்பை தானியங்கி மயமாக்குவதன் மூலம், மாதம் வீட்டிற்கு கொண்டு வரும் வருமானம் கொஞ்சம் குறையும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|