பதிவு செய்த நாள்
24 ஜூலை2017
02:13
இந்திய பங்குச் சந்தை, வரலாற்று உயர்வில் இருந்து, கடந்த வாரம், சிறிய இறக்கம் கண்டு முடிவடைந்தது. தேசிய பங்குச் சந்தை, ‘நிப்டி’ குறியீட்டு எண், 9,900 புள்ளிகளை கடந்து வியாபாரம் ஆனது.ஜூலை, 14 முதல், நிப்டி, 9,900 என்ற நிலையில், சீராக வர்த்தகம் நடைபெறுகிறது. சர்வதேச சந்தையில் ஏற்பட்ட உயர்வு, அதனுடன் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு நிதி அறிக்கை லாபகரமாக அமைந்ததால், அந்த பங்கு உயர்ந்ததுடன், மொத்த சந்தையில் ஏறுமுகம் காணப்பட்டது.இந்த வாரத்தை பொறுத்தவரை, இரு முக்கிய நிகழ்வுகளின் அடிப்படையில், சந்தை போக்கு இருக்கும். முதலாவதாக, வர இருக்கும் நிறுவனங்களின் முதல் காலாண்டு நிதி அறிக்கை. இரண்டாவதாக, எப் அண்டு ஓ செட்டில்மென்ட் ஆவது.எச்.டி.எப்.சி., பேங்க், ஆக்சிஸ் பேங்க், யெஸ் பேங்க், பெடரல் பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க் போன்ற தனியார் வங்கிகள் மற்றும் பல முன்னணி நிறுவனங்களின் காலாண்டு அறிக்கைகள் வர உள்ளன. இதில், ஐ.டி.சி., ஏசியன் பெயின்ட்ஸ், எச்.சி.எல்., ஜீ, எல் அண்டு டி, மாருதி போன்றவையும் அடங்கும்.இந்த வாரமும், சந்தையின் போக்கில் ஏறுமுகம் காணப்படும். ‘நிப்டி’ குறியீட்டு எண், 10 ஆயிரம் என்ற நிலையை கடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இச்சூழலில், சில சர்வதேச நிகழ்வுகளும், அதன் தாக்கத்தை, நம் சந்தையில் பிரதிபலிக்கும்.புதன் கிழமை நடைபெற உள்ள, அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித கூட்டத்தில், வட்டி விகிதம், 1.25 சதவீதம் என்பதில், எந்த மாற்றமும் இருக்காது என, எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், அடுத்து வரும் கூட்டங்களில், வட்டி விகித உயர்வு குறித்த எதிர்பார்ப்பும் இதில் அடங்கும்.மேலும், 28ல் வெளிவர உள்ள, இரண்டாம் காலாண்டின் (ஏப்., – ஜூன் வரை) மொத்த உள்நாட்டு உற்பத்தி விபரமும் வெளிவர உள்ளது. மேலும், இன்று, ‘ஒபெக்’ கூட்டமைப்பு நாடுகளின் சந்திப்பு நடைபெற உள்ளது. இதில், எண்ணெய் உற்பத்தி குறைப்பு பற்றி விவாதிக்கப்படும்.வரும் நாட்களில், ‘நிப்டி’ நிலையில், 10,045 இலக்காகும்; 9,815 சப்போர்ட் ஆகும்.
கமாடிட்டி சந்தை
கச்சா எண்ணெய் விலை, கடந்த வாரம் துவக்கத்தில் உயர்வை கண்டும், வார இறுதியில் சரிவை சந்திக்க நேர்ந்தது. வாரம் ஒருமுறை வெளிவரும் அமெரிக்க எண்ணெய் இருப்பு, ஜூலை, 14 உடன் முடிவடையும் வாரத்தில், 4.7 மில்லியன் பேரல்கள் குறைந்தது. எதிர்பார்த்தது, 3.2 மில்லியன் பேரல். எதிர்பார்த்ததை விட, அதிகமாக குறைவு ஏற்பட்டதால், சந்தையில் விலை உயர்ந்து, ஒரு பேரல், 47.73 டாலர் என்ற உச்சத்தை தொட்டது. இருப்பினும், விலை உயர்வு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.காரணம், ஒபெக் நாடுகள் தங்கள் உற்பத்தியில், தினசரி, 1.8 மில்லியன் பேரல்களை குறைக்க தீர்மானித்தது. இதில், நைஜீரியா மற்றும் லிபியா நாடுகளுக்கு விலக்களிக்கப்பட்டது. மேலும், பெருகி வரும் அமெரிக்க எண்ணெய் உற்பத்தி, 2015யை விட அதிகரித்து, தினசரி, 9.43 மில்லியன் பேரல்கள் ஆனது.கடந்த வெள்ளியன்று வெளிவந்த சந்தை புள்ளி விபரப்படி, ஒபெக் நாடுகளின், ஜூலை எண்ணெய் உற்பத்தி, 1.45 லட்சம் பேரல்கள் அதிகரித்தது. இது, ஜூன் மாதத்தை விட அதிகம். இதனால், சந்தையில் எண்ணெய் விலை சரிந்தது.இன்று, ஒபெக் கூட்டமைப்பு நாடுகளின், எண்ணெய் துறை அமைச்சர்கள் ஒன்று கூடி, விலை பற்றி ஆலோசிக்க உள்ளனர். இந்த ஆண்டு துவக்கம் முதல், இதுவரை, 12 சதவீதம் விலை சரிந்துள்ளது. வரும் நாட்களில், சர்வதேச சந்தையில், 45.50 டாலர் நல்ல சப்போர்ட் ஆகும். இதை கடக்கும் நிலையில், இதன் சரிவு தொடரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம்
தங்கம் மற்றும் வெள்ளி விலைகள், இரண்டாவது வாரமாக உயர்ந்து காணப்படுகின்றன. அமெரிக்க டாலருக்கு நிகரான, யூரோவின் மதிப்பு கடுமையாக உயர்ந்து, 14 மாத உச்சத்தில் வியாபாரமாகிறது.அமெரிக்க டாலரின் மதிப்பு குறைவு, சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் உயர காரணமாகியது. கடந்த, 20ல் நடைபெற்ற, ஐரோப்பிய மத்திய வங்கியின் நிதி கொள்கை கூட்டத்தில், நாட்டின் தாராள நிதி கொள்கையில், படிப்படியாக மாற்றங்கள் கொண்டு வரப்படும் என, தெரிவிக்கப்பட்டது. இதன்பின், சந்தையில் யூரோ நாணயத்தின் மதிப்பு உயர்ந்தது.எஸ்.பி.டி.ஆர்., எனப்படும், உலகின் மிகப்பெரிய தங்க முதலீட்டு பண்டு நிறுவனத்தின் இருப்பு அளவு, பிப்ரவரியை விட குறைந்துள்ளது.பொதுவாக, அமெரிக்க நாணய குறியீடான, டாலர் இண்டெக்சின் மதிப்பு கூடும் போதும், குறையும் போதும், அது தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில், எதிர்திசையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.மேலும், பெருகி வரும் வடகொரியாவின் ஏவுகணை சோதனை, உலகளவில் பெரும் சஞ்சலத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக, சில முதலீட்டாளர்கள், தங்கள் முதலீடுகளை பாதுகாப்பு கருதி, தங்கத்தின் மீது திருப்பி வருகின்றனர். இதனாலும், சந்தையில் சாதகமான போக்கு நிலவுகிறது. வரும் நாட்களிலும், இது தொடரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
செம்பு
கடந்த வாரம், செம்பின் விலை உயர்ந்து வர்த்தகமானது. தொழிற்சாலை துறையில், அதிகளவு நுகர்வு தேவை கொண்ட நாடு சீனா. சீனாவின் தேவை உயரும் போது, சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயரும். இதன் அடிப்படையில், சமீபத்தில் வெளிவந்த சீன நாட்டின் பொருளாதார காரணியான, ஜி.டி.பி., நடப்பாண்டின் இரண்டாம் காலாண்டில், அதாவது, ஏப்., – ஜூன் வரையிலான காலத்தில், 6.9 சதவீதம் வளர்ச்சியடைந்து உள்ளது. இது, சந்தையில் பெரியளவில் தொழிற்சாலை இடுபொருட்களின் விலைக்கு சாதகமாக அமைந்தது. லண்டன் எக்சேஞ்ச் செம்பு விலை, ஐந்து மாதங்களை விட உயர்ந்து காணப்படுகிறது.சர்வதேச செம்பு ஆய்வு குழுமம், சுரங்க உற்பத்தி, 3.5 சதவீதம் அளவுக்கு, இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் குறைந்து உள்ளதாக தெரிவித்தது. இருப்பினும், இக்கால கட்டத்தில் நுகர்வு தேவை, 3 சதவீதம் குறைந்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|