பதிவு செய்த நாள்
25 ஜூலை2017
06:54
மும்பை : ‘மக்கள், மின் செலவை குறைப்பதில் தீவிரமாக உள்ளதால், மின் சிக்கனத்திற்கான, ‘இன்வெர்ட்டர் ஏசி’ சாதனங்கள் விற்பனை, அடுத்த ஐந்து ஆண்டுகளில், 37 சதவீதம் அதிகரிக்கும்’ என, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
வீடுகளில் பயன்படுத்தும், ‘ஏசி’ சாதனங்கள் குறித்து, ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: நாடு முழுவதும், மின் வசதி பரவலாகி வருகிறது. இதனால், மின் சாதனங்களின் தேவையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, வீடுகளில் பயன்படுத்தும், ‘ஏசி’ சாதனங்கள் விற்பனை விறுவிறுப்பாக உள்ளது. பல ஆண்டுகளாக மின்சாரம் இல்லாத பகுதிகள் கூட, தற்போது மின் வசதி பெற்றுள்ளன. அதனால், வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க, ‘ஏசி’ சாதனங்களை வீடுகளில் பொருத்துவது அதிகரித்து வருகிறது.
தற்போது, ‘ஏசி’ சந்தையின் மதிப்பு, 11 ஆயிரத்து, 600 கோடி ரூபாயாக உள்ளது. அடுத்த 5 – 6 ஆண்டுகளில், அறைகளுக்கான, ‘ஏசி’ சாதனங்கள் சந்தை, ஆண்டுக்கு சராசரியாக, 12 – 13 சதவீதம் வளர்ச்சி காணும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. நகர்ப்புற கட்டமைப்பு வசதி, போக்குவரத்து ஆகியவற்றுக்கு, மத்திய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு அதிகரித்துள்ளது. அத்துடன், வணிக ரியல் எஸ்டேட் துறை, மீண்டும் எழுச்சி காணும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இது போன்ற காரணங்களால், ‘ஏசி’ சாதனங்களின் விற்பனை அதிகரிக்கும்.
அறைகளுக்கான, ‘ஏசி’ சந்தையில், ‘இன்வெர்ட்டர் ஏசி’ பிரிவு வேகமாக வளர்ச்சி காணும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வகை, ‘ஏசி’ சாதனங்களின் மின் பயன்பாடு குறைவாக உள்ளதே, இதற்கு காரணம். மேலும் இவை, வழக்கமான, ‘ஏசி’யை விட, சப்தம் குறைவாகவும், கூடுதலாகவும் உழைக்கின்றன. அதனால், மக்கள், மின் செலவை குறைக்கும் நோக்கில், ‘இன்வெர்ட்டர் ஏசி’யை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். இதன் காரணமாக, ஒரே வேகத்தில் செயல்படும், ‘கம்ப்ரஸர்’ பொருத்திய வழக்கமான, ‘ஏசி’யை விட, தேவைக்கேற்ற மின் சக்தியில் இயங்கும், ‘இன்வெர்ட்டர் ஏசி’யின் சந்தை பங்களிப்பு, அடுத்த ஐந்து ஆண்டுகளில், தற்போதைய, 13 சதவீதத்தில் இருந்து, 50 சதவீதமாக உயரும்.
அடுத்த ஆண்டு ஜன., முதல், புதிய மின் தரக் குறியீடு அமலுக்கு வருவதால், இவ்வகை, ‘ஏசி’களின் விற்பனை மேலும் அதிகரிக்கும். ‘ஏசி’ நிறுவனங்களும், பாரம்பரிய, ‘ஏசி’ தயாரிப்பில் இருந்து, ‘இன்வெர்ட்டர் ஏசி’ சாதனங்களை தயாரிப்பதில், அதிக கவனம் செலுத்த துவங்கும். புதிய, ஜி.எஸ்.டி., நடைமுறை, ‘ஏசி’ நிறுவனங்களுக்கு கூடுதல் ஆதாயத்தை அளித்துள்ளது; பலதரப்பட்ட வரிகளின் சுமையை குறைத்துள்ளது. அத்துடன், மாநிலங்கள் இடையிலான, சரக்கு போக்குவரத்து செலவு, நேரம் ஆகியவையும் குறைந்துள்ளன. இது, ‘ஏசி’ விலையை உயர்த்தாமல், சந்தையில் போட்டியை சமாளிக்கும் ஆற்றலை, தயாரிப்பு நிறுவனங்களுக்கு அளித்து, ‘ஏசி’ துறை வளர்ச்சி காண உதவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|