பதிவு செய்த நாள்
01 ஆக2017
06:55
புதுடில்லி : ‘இந்தியா, நடப்பு நிதியாண்டின், ஏப்., – ஜூன் வரையிலான முதல் காலாண்டில், சீனாவுக்கு, 62.90 கோடி டாலர் மதிப்புள்ள, பொறியியல் சாதனங்களை ஏற்றுமதி செய்துள்ளது; இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட, 28.20 கோடி டாலர் ஏற்றுமதியை விட, 123 சதவீதம் அதிகம்’ என, பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி கழகம் தெரிவித்துள்ளது.
பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி வளர்ச்சிக்கு, அலுமினியம், செம்பு, பித்தளை போன்ற, இரும்பு சாரா உலோகங்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி உள்ளன. இவற்றின் ஏற்றுமதி, மதிப்பீட்டு காலாண்டில், 344 சதவீதம் அதிகரித்து, 35.50 கோடி டாலராக உயர்ந்து உள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 8 கோடி டாலராக இருந்தது. ஜூன் மாதம், 23.40 கோடி டாலர் மதிப்பிலான, பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதியாகி உள்ளன. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், 9.40 கோடி ஆக இருந்தது.
இதே காலத்தில், இரும்பு சாராத உலோகங்கள் ஏற்றுமதி, 971 சதவீதம் உயர்ந்து, 1.47 கோடி டாலரில் இருந்து, 15.80 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இந்தியாவில் இருந்து, இவ்வகை உலோகப் பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்வதில், சீனாவும், தென்கொரியாவும் முன்னணியில் உள்ளன.
வர்த்தக பற்றாக்குறை:இந்தாண்டு ஜூன் மாதம், இந்தியாவின் ஏற்றுமதி, 4.39 சதவீதம் அதிகரித்து, 2,356 கோடி டாலராக உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், ஏற்றுமதி, 10.57 சதவீதம் அதிகரித்து, 7,221 கோடி டாலராக வளர்ச்சி கண்டுள்ளது. இதே காலத்தில், இறக்குமதி, 32.78 சதவீதம் உயர்ந்து, 11,220 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இதனால், வர்த்தக பற்றாக்குறை, 4,000 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|