பதிவு செய்த நாள்
17 ஆக2017
08:41
பெங்களூரு : ‘‘ஒரு நிறுவனம் வளர்ச்சி காண வேண்டுமென்றால், அதன் தலைவர், தலைமை செயல் அதிகாரி உள்ளிட்டோர் அனைவரும், சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும்,’’ என, ‘இன்போசிஸ்’ நிறுவனர் நாராயணமூர்த்தி வலியுறுத்தி உள்ளார்.
பெங்களூரில், அவர் செய்தியாளர்களிடம் மேலும் பேசியதாவது: உங்கள் சம்பாத்தியத்தை விட, குறைவாக செலவு செய்வது மிகவும் முக்கியம். இது, ஒரு நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி முதல், சாதாரண ஊழியர் வரைக்கும் பொருந்தும். ஒரு நிறுவனம் செலவழிக்கும் ஒவ்வொரு காசுக்கும், உரிய மதிப்பு கிடைக்க வேண்டும். ஒரு பணியை குறுகிய காலத்தில், தரமாக முடித்து தருவது குறித்து, ஊழியர்கள் சிந்திக்க வேண்டும். இதற்கு விடை காணும் நிறுவனங்களின் வருவாய், தானாக உயரும்.
தொழில்நுட்பங்களை புகுத்தி, பணிகளை சுலபமாக முடிக்கும் நிறுவனங்களின் செலவினம் குறையும். இது, நிறுவனங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். பணியாளர்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க, அவர்களுக்கு தகுந்த பயிற்சி அளிக்க வேண்டும். இதன் மூலம், நிறுவனத்தின் உற்பத்தி பெருகும்.அரசு, புதிய நிறுவனங்களின் துவக்க காலத்தில், வரிச்சலுகைகளை வழங்க வேண்டும். இது, தொழில்முனைவோரை ஊக்கம் அளித்து, உற்பத்தி பெருக துணை புரியும். நிதி, விற்பனை மற்றும் இதர துறைகளிலும், தொழில்முனைவோருக்கான பயிற்சி திட்டங்களை, அரசு ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
‘இன்போசிஸ்’ தலைமை செயல் அதிகாரி, விஷால் சிக்கா உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு, மிகப் பெருந்தொகை ஊதியமாக வழங்கப்படுவது குறித்து, நாராயணமூர்த்தி, ஏற்கனவே அதிருப்தி தெரிவித்திருந்தார். ‘ஐ.டி., நிறுவனங்களில், உயரதிகாரிகள் ஊதியத்தை குறைத்துக் கொண்டால், இளைஞர்களின் பணியிடங்கள் பறிபோவதை தடுக்க முடியும்’ என, அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|