பதிவு செய்த நாள்
09 அக்2017
00:14
பணி நிரந்தரம் என்பது, பழைய கருத்தாக்கமாகி உள்ள நிலையில், பொருளாதார தேக்க நிலையின் தாக்கம், புதிய தொழில்நுட்பங்கள் கொண்டு வரும் மாற்றம் ஆகியவற்றின் காரணமாக, பணியிட சவால்களும் அதிகரித்து இருக்கின்றன. இந்த பின்னணியில், பணி பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள, தங்கள் துறையில் முன்னேற்றம் காண திட்டமிடுவதும் அவசியமாகிறது. இந்த நோக்கில், மனதில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்:
ஆய்வு செய்யுங்கள்!
முதலில், தற்போதைய பணியில், ஒருவர், தன் நிலை என்ன என்பதை ஆய்வு செய்ய வேண்டும்; பணியில் உள்ள எதிர்கால சவால்களையும் அறிய வேண்டும். நிறுவனங்கள், ஊழியர்கள் செயல்பாடு தொடர்பாக, காலாண்டு அல்லது ஆண்டு ஆய்வுகள் செய்வது போல, ஊழியர்கள், தங்கள் நிலை குறித்த சுய ஆய்வு செய்வதன் மூலம், பணியிடத்தில், தங்கள் நிலையை தெளிவாக அறிய முடியும். உங்களுக்கென இலக்கும் வேண்டும்.
உங்களுக்கென திட்டம் தேவை:
பணி ஏணியில் ஏறிச் செல்வது பற்றி, தெளிவான திட்டம் இருக்க வேண்டும். தலைமை பதவி நோக்கி முன்னேற விரும்பினால், ஐந்து ஆண்டுகளில், எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்பது பற்றி, ஒரு கணிப்பு இருக்க வேண்டும். இந்நிலையை அடைய தேவையான தகுதிகள் இருக்கின்றனவா? கூடுதலாக திறன்கள் தேவையா என, கண்டறிந்து, அதற்கேற்ப தயாராக வேண்டும். உங்கள் செயல்திறனை அதிகரிப்பதிலும் கவனம் தேவை.
பயன் தரும் புதிய திறன்கள்:
பணியிடத்திற்கான தேவைகள் மாறிக்கொண்டே இருக்கும் சூழலில், திறன் மேம்பாடு என்பது, மிகவும் அவசியம். பழைய கல்வித் தகுதி மட்டும், இனியும் போதுமானதல்ல. ஒவ்வொருவரும் தங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். தேவையெனில், ஆன் – லைனில், புதிய பாடத் திட்டங்களில் சேர்ந்து, புதிய திறன்களுக்கான பயிற்சி பெறலாம். எந்த சுழலிலும், வளைந்து கொடுத்து முன்னேறும் ஆற்றலை, இது கொடுக்கும்.
அனுபவம் தேவை:
புதிய திறன்களை வளர்த்துக் கொள்ளும் அதே நேரத்தில், அவற்றை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் நாட வேண்டும். நிறுவனத்தில், எதிர்கால நலன் சார்ந்த திட்டங்களில், ஆர்வத்துடன் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். உதாரணமாக, பெரும்பாலான நிறுவனங்கள், ‘டிஜிட்டல்’ பாதைக்கு மாறி வருகின்றன. இந்த திசையில், உங்கள் திறன் மற்றும் ஈடுபாடு இருக்கும்படி, பார்த்துக் கொள்வது நல்லது. எதிர்பாராத பின்னடைவுகள் வந்தாலும், சமாளித்து முன்னேறும் வகையில், தெளிவான இலக்கும் தேவை.
வழிகாட்டியை நாடுதல்:
நீங்கள் பணியாற்றும் நிறுவனம் அல்லது சார்ந்துள்ள துறையில் உங்களுக்கென ஒரு வழிகாட்டி தேவை. பல நிறுவனங்கள், வழிகாட்டுவதற்கான பிரத்யேக திட்டங்களையும் வைத்திருக்கின்றன. அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது தொழில் முறையில் உங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல ஊக்கமளிக்கும் ஒருவரை, வழிகாட்டியாக தேடிக் கொள்ள வேண்டும். லிங்க்டுஇன் போன்ற சமூக வலைபின்னல் சேவைகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|