பதிவு செய்த நாள்
22 அக்2017
04:59
புதுடில்லி : இந்திய தொழில்துறையில், அன்னிய நேரடி முதலீடு பெருகி வருவதற்கு ஏற்ப,நிறுவனங்கள் தொடர்பான துப்பறியும் சேவைக்கும் தேவை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, அமெரிக்காவில் முன்னணியில் உள்ள துப்பறியும் நிறுவனங்கள், இந்தியாவில் கால்பதித்து வருகின்றன.மத்திய அரசு, பெரும்பாலான துறைகளில், அன்னிய நேரடி முதலீட்டு விதிகளை தளர்த்தியுள்ளது. இதனால், அன்னிய முதலீடு அதிகரித்துள்ளது. அன்னிய நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களுடன் இணைந்து, கூட்டாக செயல்படவே அதிகம் விரும்புகின்றன. இதற்கு, இந்திய நிறுவனங்களிடம் உள்ள வலுவான அடிப்படை கட்டமைப்பு வசதி, உள்நாட்டு வர்த்தகச் சூழல் குறித்த பழுத்த அனுபவம், நிர்வாக நடைமுறைகளில் உள்ள ஆற்றல் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. இருந்தபோதிலும், அன்னியநிறுவனங்கள், குறிப்பாக, அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கள், துளியும் லஞ்ச முறைகேடுகளில் ஈடுபடாமல், நியாயமான முறையில், பிற நாடுகளில் தொழில் துவங்குவதற்கே, முக்கியத்துவம் அளிக்கின்றன.அச்சம் ஏனெனில், பிற நாடுகளில் லஞ்ச முறைகேடுகள் மூலம் அமெரிக்க நிறுவனங்கள் தொழில் துவங்கியது தெரிய வந்தால், அந்நாட்டு லஞ்ச ஊழல் தடுப்பு சட்டப்படி கடும் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சம் தான் காரணம்.அமெரிக்காவைச் சேர்ந்த வால்மார்ட், மோன்டலெஸ் நிறுவனங்களுக்கு, இத்தகைய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வால்மார்ட், இந்தியா தவிர்த்து, மெக்சிகோ மற்றும்சீனாவில் முறைகேடான வழியில், தொழில் துவங்கிய வழக்கில், 300 மில்லியன் டாலர் அபராதம் செலுத்த உள்ளது.இத்தகைய நிலையை தவிர்க்க, அன்னிய நிறுவனங்கள், இந்தியாவில் தொழில் துவங்குவதற்கு முன், துப்பறியும் நிறுவனங்களின் சேவையை பயன்படுத்துகின்றன.இந்நிறுவனங்கள், அன்னிய நிறுவனங்கள் முதலீடு செய்ய உள்ள இந்திய நிறுவனங்களின் முழு ஜாதகத்தையும் ஆராய்ந்து, அறிக்கை அளிக்கின்றன. அதில், நிறுவனத்திற்கு உள்ள சொத்து, கடன், வழக்குகள் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் இடம் பெறும். அவற்றின் அடிப்படையில், இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்வது குறித்து, அன்னிய நிறுவனங்கள் முடிவு செய்கின்றன.மின்ட்ஸ் குழுமம்துப்பறியும் தொழிலுக்கு வரவேற்பு பெருகி வருவதால், அமெரிக்காவைச் சேர்ந்த, தனியார் துப்பறியும் நிறுவனமான, மின்ட்ஸ் குழுமம், இந்தியாவில் வர்த்தகத்தை துவக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதுபோல, கலிபோர்னியாவின், பெர்க்லி ரீசர்ச் குழுமமும், இந்தியாவில் களமிறங்குகிறது. ஏற்கனவே, அமெரிக்காவைச் சேர்ந்த, பின்கர்டன், க்ரால் நிறுவனங்கள், இந்திய நகரங்களில் கிளை பரப்பி, துப்பறியும் தொழிலில் ஈடுபட்டுள்ளன.இது தவிர, உள்நாட்டில், மத்திய புலனாய்வு அமைப்பு, அமலாக்க இயக்குனரகம், ரிசர்வ் வங்கி, ‘செபி’ ஆகியவையும், பொருளாதார குற்றங்கள் தொடர்பான விபரங்களை சேகரிக்க, தனியார் துப்பறியும் நிறுவனங்களை நாடுகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|