பதிவு செய்த நாள்
24 அக்2017
00:35
புதுடில்லி : ‘‘வர்த்தகர்கள், ஜி.எஸ்.டி., கணக்கை தாக்கல் செய்யும் போது எதிர்கொண்ட சிக்கல்களில், பெரும்பாலானவற்றுக்கு தீர்வு கண்டு உள்ளோம். விரைவில், முழு தீர்வு காணப்பட்டு, சுலபமாக, ஜி.எஸ்.டி., கணக்கை தாக்கல் செய்யும் சூழல் உருவாகும்,’’ என, ஜி.எஸ்.டி., நெட்வொர்க் நிறுவனத்தின் தலைவர், அஜய் பூஷண் பாண்டே தெரிவித்து உள்ளார்.
ஜி.எஸ்.டி.என்., நிறுவனம், ஜி.எஸ்.டி., நடைமுறைகளை நிர்வகித்து வருகிறது. இந்நிறுவனத்தின் வலைதளத்தில், ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் செய்யும் போது, அடிக்கடி முடங்கி விடுவதாக, புகார் எழுந்துள்ளது.
இது குறித்து, ஜி.எஸ்.டி.என்., தலைவர், அஜய் பூஷண் பாண்டே கூறியதாவது: ஜி.எஸ்.டி.என்., வலைதளத்தில், ஜி.எஸ்.டி., கணக்கை, சுலபமாக தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதற்காக, பீஹார் துணை முதல்வர், சுஷில் குமார் மோடி தலைமையில், அமைச்சரவைக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழு, இரு வாரங்களுக்கு ஒருமுறை கூடி, சுலபமாக கணக்கு தாக்கல் செய்யப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தி வருகிறது. இக்குழு, மூன்றாவது முறையாக, 28ம் தேதி கூட உள்ளது. அப்போது, நிறுவனங்கள், வர்த்தகர்கள் ஆகியோரின் பாதிப்பு குறித்து கேட்டறிந்து, தீர்வு காணப்படும்.
ஜூலை – ஆக., மாதங்களில், ஜி.எஸ்.டி., கணக்கை, முறையே, 55 லட்சம் மற்றும் 50 லட்சம் பேர் தாக்கல் செய்துள்ளனர். பெரும்பாலானோர், கணக்கு தாக்கல் செய்வதற்கான இறுதி நாளில், வர்த்தக கணக்கு விபரங்களை பதிவேற்றியதால், ஜி.எஸ்.டி.என்., வலைதளம் அடிக்கடி முடங்கி, பதிவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது.ஒரு மணி நேரத்திற்கு, 80 ஆயிரத்திற்கும் அதிகமான கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டதால், இந்த நிலை உண்டானது. ஒரு வலைதளத்தில், 50 லட்சத்திற்கும் அதிகமான நிறுவனங்கள், ஜி.எஸ்.டி., கணக்கை தாக்கல் செய்வது, இதுவரை நடைமுறையில் இல்லாதது.
அதிகப்படியான பதிவேற்றங்களால், துவக்க காலத்தில் பிரச்னைகள் எழுந்தன. அவற்றுக்கு தீர்வு காண்பதில், நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில், இப்பிரச்னைகளுக்கு அடியோடு தீர்வு காணப்படும். இதன் மூலம், ஜி.எஸ்.டி., கணக்கை, மிகச் சுலபமாக தாக்கல் செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
‘ஆப் லைன்’ வசதி அறிமுகம்:
ஜி.எஸ்.டி., நெட்வொர்க் நிறுவனம், இணைய வசதியின்றி, ‘ஆப் லைன்’ மூலம், ‘ஜி.எஸ்.டி.ஆர்., – 3பி’ படிவத்தை பூர்த்தி செய்து, ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் செய்யும் வசதியை, கடந்த வாரம் அறிமுகப்படுத்தியது. இதற்கான சாப்ட்வேரை, ஜி.எஸ்.டி.என்., வலைதளத்தில் இருந்து இலவசமாக பதிவிறக்கி, கணக்கு விபரங்களை பூர்த்தி செய்த பின், வலைதளத்தில் பதிவேற்றலாம். இதனால், ஜி.எஸ்.டி., கணக்கை தவறின்றி, தாக்கல் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இணைய தொடர்பின்றி, ‘ஆப் லைன்’ மூலம், ‘ஜி.எஸ்.டி.ஆர்., – 1’ படிவத்தில் கணக்கு தாக்கல் வசதி, ஏற்கனவே உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|