பதிவு செய்த நாள்
20 நவ2017
01:27
முறையான ஆய்வு இல்லாமல் பங்குகளை வாங்கக்கூடாது என்பது தான், பங்குச்சந்தை முதலீட்டின் பாலபாடம். பங்குச்சந்தை பக்கம் உங்கள் பார்வை திரும்பியதற்கான காரணம் என்னவாக இருந்தாலும் சரி, பங்குகளை வாங்கும் முன், அதற்குரிய ஆய்வு செய்வது அவசியம். இல்லை எனில் பங்கு ஆர்வம் பரமபத விளையாட்டாக மாறிவிடலாம். கவனத்தை ஈர்த்த பங்கு தொடர்பாக விரிவான ஆய்வை மேற்கொண்ட பின்னரே, அதில் முதலீடு செய்வது பற்றி தீர்மானிக்க வேண்டும். அடிப்படையான சில கேள்விகளில் இருந்து இதை துவங்கலாம்.
வர்த்தகம் என்ன?நீங்கள் பங்குகளை வாங்க இருக்கும் நிறுவனம் எத்தகைய வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறது? இந்த கேள்வியில் இருந்து தான், நீங்கள் துவங்க வேண்டும். பங்குச்சந்தை முதலீட்டு வித்தகரான, வாரன் பப்பே தவறாமல் பின்பற்றும் மந்திரமும் இது தான். ஒரு நிறுவனம் என்ன வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறது என்பது தெளிவாக தெரியவில்லை எனில், நீங்கள் அந்த பங்கை வாங்குவதில் அர்த்தம் இல்லை.
‘டிவிடெண்ட்’ உண்டா? நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு ‘டிவிடெண்ட்’ வழங்கி வருகிறதா? என்பதும் அல்லது குறைந்தபட்ச வருமான வரியை முறையாக செலுத்தி வருகிறதா? என்பதும் முக்கியமாக கவனிக்க வேண்டியவை. டிவிடெண்ட் வழங்குவது நிறுவனம் லாபமீட்டுவதை குறிக்கும். வருமான வரி செலுத்தி வந்தால், லாப பாதையில் சென்று கொண்டிருப்பதாக புரிந்து கொள்ளலாம். டிவிடெண்ட் தரும் பங்குகளை வாங்குவது பாதுகாப்பானது.
வரலாறு எப்படி?நிறுவன செயல்பாடுகள் கடந்த காலங்களில் எப்படி இருந்திருக்கின்றன என்பதை அறிந்து கொள்வதும் அவசியம். அதன் அண்மைக்கால காலாண்டு அறிக்கைகளை வாசித்துப் பார்க்கலாம். நிறுவனர்களின் அறிக்கையில் எதிர்க்காலம் பற்றிய தொலைநோக்கு இருக்கிறதா? என, தெரிந்து கொள்ளலாம். சொன்னபடி எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றனரா? என்றும் அறியலாம்.
நடத்துவது யார்?நிறுவனத்தின் நிர்வாகத்திற்கு பொறுப்பேற்றிருப்பது யார்... என பார்க்க வேண்டும். நிறுவனத்தின் நிர்வாக கொள்கை என்ன; திட்டங்கள் என்ன... போன்ற கேள்விகளும் முக்கியமானவை. தொழில்முறையாக மற்றும் சிறந்த முறையில் நிர்வகிக்கப்படுகிறதா? என்பதை இதன் மூலம் உணர்ந்து கொள்ளலாம். பிரைஸ் ஏர்னிங் என சொல்லப்படும், பி.இ., விகிதத்தையும் கவனிக்க வேண்டும்.
போட்டி உண்டா?நிறுவனத்தை பற்றி அறிந்தால் மட்டும் போதாது. அதன் போட்டியாளர்கள் யார்? அந்நிறுவனங்களின் நிலை என்ன என்றும் அறிய வேண்டும். நிறுவனம் ஏகபோகம் நிலவும் சந்தையில் இருக்கிறதா? முன்னணி நிறுவனமே 10 சதவீத சந்தைப் பங்கை கொண்டு உள்ள துறையில் இருக்கிறதா? போன்ற விஷயங்கள் அதன் வளர்ச்சியில் தாக்கம் செலுத்தும். வெளிநாட்டு போட்டியையும் கவனிக்க வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|