பதிவு செய்த நாள்
24 நவ2017
00:12
மும்பை : ‘சாப்ட்வேர் ஏற்றுமதி மூலம், ஐந்து ஆண்டுகளில் பெற்ற, 10 ஆயிரம் கோடி ரூபாய் வரிச்சலுகையை திரும்பத் தர வேண்டும்’ என, ஐ.டி., மற்றும், ஐ.டி.இ.எஸ்., எனப்படும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த சேவைகள் துறை நிறுவனங்களுக்கு, மத்திய வரித்துறை, ‘நோட்டீஸ்’ அனுப்பி உள்ளது. இது ஏற்கனவே, அமெரிக்காவின், ‘எச் – 1பி’ விசா கட்டுப்பாடு, மற்றும் ‘ஆட்டோமேஷன், ஏ.ஐ.,’ போன்ற, புதிய தொழில்நுட்பங்களின் பரவலால் பாதிக்கப்பட்டுள்ள, ஐ.டி., – ஐ.டி.இ.எஸ்., நிறுவனங்களுக்கு, கடும் அதிர்ச்சியை அளித்து உள்ளது.
இது குறித்து, வரித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்திய, ஐ.டி., – ஐ.டி.இ.எஸ்., நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, சாப்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் சேவைகளை ஏற்றுமதி செய்யும் போது, வரிச்சலுகைகளை பெறுகின்றன. அதே சமயம், வெளிநாட்டு நிறுவனங்கள், மின்னஞ்சல் வாயிலாக, அவற்றின் சாப்ட்வேர்களில் செய்ய வேண்டிய, மேம்பாடுகள் குறித்த விபரங்களை, இந்திய நிறுவனங்களுக்கு அனுப்புகின்றன. அதன்படி, சாப்ட்வேர்களில், கூடுதல் வசதிகளை, இந்திய, ஐ.டி., – ஐ.டி.இ.எஸ்., நிறுவனங்கள் செய்து கொடுக்கின்றன. அதனால், மின்னஞ்சல் வாயிலான சாப்ட்வேரும், அதில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த விபரங்களும், சரக்கு சப்ளையாக கருதப்படும்.
இந்த சரக்கில், அதாவது, சாப்ட்வேரில், மின்னஞ்சல் விபரப்படி, ஐ.டி., நிறுவனங்கள் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி தருவதால், அது, சேவையாக எடுத்துக் கொள்ளப்படும்.அதனால், இத்தகைய சேவைகளை மேற்கொண்ட வகையில், ஐ.டி., – ஐ.டி.இ.எஸ்., நிறுவனங்கள், சேவை வரி செலுத்த வேண்டும்.
அதற்கு மாறாக, அவை, சாப்ட்வேர் சேவை ஏற்றுமதிக்கு, வரிச்சலுகைகளை பெற்று உள்ளதால், அத்தொகையை திரும்பத் தர வேண்டும் என, 200க்கும் அதிகமான, ஐ.டி., – ஐ.டி.இ.எஸ்., நிறுவனங்களுக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டு உள்ளது.
அதில், ‘2012 – 16 வரையிலான ஐந்து ஆண்டுகளில், சாப்ட்வேர் சேவை ஏற்றுமதியில் பெற்ற சலுகை தொகையுடன், 15 சதவீத சேவை வரியும், அதற்கு வட்டி மற்றும் விற்றுமுதல் அடிப்படையில், அபராதமும் செலுத்த வேண்டும்’ என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு, சேவை வரியை திரும்பப் பெற, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். வரித்துறையின் இந்த நடவடிக்கை, இந்திய, ஐ.டி., – ஐ.டி.இ.எஸ்., நிறுவனங்களை, அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
விளக்கம் தேவை:
இந்திய ஏற்றுமதியாளருக்கு, வெளிநாட்டு நிறுவனம், மின்னஞ்சலில் அனுப்பும் விபரங்களை, சரக்கு சப்ளையாக எப்படி எடுத்துக் கொள்ள முடியும்? வருவாய் அதிகாரி, அதை ஏற்றுமதி பிரிவில் இருந்து, உள்ளூர் சப்ளையாக மாற்ற முடியுமா? ஏற்றுமதி சலுகைகள் மறுக்கப்பட்டு, வரியை கோர முடியுமா? இந்த குழப்பங்களை, வரித்துறை தான் தெளிவுபடுத்த வேண்டும்.
-மேனன், சி.இ.ஓ., வரி பிரிவு, கே.பி.எம்.ஜி.,
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|