பதிவு செய்த நாள்
06 டிச2017
00:31
புதுடில்லி:'ஜி.எஸ்.டி., தாக்கம், மூலப்பொருட்கள் விலை உயர்வு, தேவைப்பாடு குறைவு உள்ளிட்ட காரணங்களால், நவம்பரில், இந்திய சேவைகள் துறை வளர்ச்சியில், பின்னடைவு ஏற்பட்டுள்ளது' என, 'நிக்கி - மார்கிட்' ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன் விபரம்:நவம்பரில், தயாரிப்புத் துறை சிறப்பான வளர்ச்சி கண்டுள்ள நிலையில், சேவைகள் துறை, பின்னடைவை கண்டுள்ளது.சேவைகள் துறை வளர்ச்சியை குறிக்கும், என்.எம்.எஸ்.பி.எம்.ஐ., குறியீடு, நவம்பரில், 48.5 புள்ளிகள் என்ற அளவில் சரிவை கண்டுள்ளது. இது, அக்டோபரில், 51.7 புள்ளிகளாக இருந்தது.
இக்குறியீடு, 50 புள்ளி களுக்கு மேல் இருந்தால் வளர்ச்சியாகவும், குறைந்தால், பின்னடைவாகவும் கணக்கில் கொள்ளப்படும். இந்த வகையில், ஆகஸ்டுக்கு பின், நவம்பரில் தான், சேவைகள் துறை வளர்ச்சியில், பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி., அறிமுகத்தின் போது, நிறுவனங்களுக்கு, பொருட்களின் விலை நிர்ணயத்தில் ஏற்பட்ட குழப்பம், தற்போது நீங்கி உள்ளது. அவை, மூலப்பொருட்கள் விலை உயர்வை, நுகர்வோர் மீது சுமத்தி வருகின்றன.இது, பண மதிப்பு நீக்க தாக்கத்தில் இருந்து, இன்னும் முழுமையாக மீளாத முடியாத நுகர்வோரிடம் பாதிப்பை ஏற்படுத்தி, தேவைப்பாடு குறைய வழிவகுத்து உள்ளது. இதனால், சேவை துறைக்கு புதிய, 'ஆர்டர்'கள் கிடைப்பது குறைந்துள்ளது; வெளிநாட்டு ஆர்டர்களும் குறைந்துள்ளன.
இதையடுத்து, புதிய ஆர்டர்களின் வளர்ச்சியை குறிக்கும் குறியீடு, 48.3 புள்ளிகள் என்ற அளவில், பின்னடைவை கண்டுள்ளது. இது, அக்டோபரில், 51.5 புள்ளிகளாக இருந்தது.அதே சமயம், தயாரிப்புத் துறை, நவம்பரில், 13 மாதங்களில் இல்லாத அளவிற்கு, வேகமான வளர்ச்சியை கண்டுள்ளது.அதனால், சேவை மற்றும் தயாரிப்புத் துறை வளர்ச்சியை குறிக்கும், என்.சி.ஓ.ஐ., குறியீடு, நவம்பரில், 50.3 புள்ளிகள் என்ற அளவில் உள்ளது. இது, அக்டோபரில், 51.3 புள்ளிகளாக இருந்தது.இத்தகைய சாதகமற்ற சூழலிலும், சேவை துறை நிறுவனங்கள், தொடர்ந்து பணியாளர்களை அமர்த்தி வருகின்றன. இதற்கு, அடுத்த ஓராண்டிற்கு, வர்த்தகச் சூழல் நன்கு இருக்கும் என்ற மதிப்பீடு தான் காரணம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எவை எவை?
இந்திய சேவைகள் துறையில், தகவல் தொழில்நுட்பம், வியாபாரம், ஓட்டல், சுற்றுலா, போக்குவரத்து, நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட், வர்த்தகம், கட்டுமானம் உள்ளிட்ட துறைகள் சார்ந்த சேவைகள் அடங்கி உள்ளன.
வாய்ப்பு குறைவு
நவம்பரில், தயாரிப்பு, சேவைகள் துறையின் வளர்ச்சி, ஸ்திரமாக இருக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப, தயாரிப்புத் துறை சிறப்பான வளர்ச்சியை கண்டுள்ளது. ஆனால், சேவைகள் துறை வளர்ச்சியில், சரிவு ஏற்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகமானதில் இருந்து, தேவைப்பாடும், நுகர்வோர் பயன்பாடும் குறைவாகவே உள்ளன.ஆஷ்னா தோதியா பொருளாதார வல்லுனர், ஐ.எஸ்.எஸ்., மார்கிட்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|