பதிவு செய்த நாள்
18 டிச2017
00:13
வைப்பு நிதி கணக்குகளின் நம்பகத் தன்மை சார்ந்து, பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது, புதிய, எப்.ஆர்.டி.ஐ., மசோதாவின் முதல் வடிவம்.
பார்லி., குழுவின் ஆய்வுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்த மசோதாவின் வடிவம், பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. அடிப்படையில், தற்போது வங்கிகளில், நாம் முதலீடு செய்யும் வைப்பு கணக்குகள், ஒரு லட்சம் ரூபாய் வரை தான் காப்பீட்டால் பாதுகாக்கப் படுகிறது. இது, பல ஆண்டுகளுக்கு முன் நிர்ணயிக்கப்பட்ட அளவு. இந்த அளவை, 3.5 லட்சம் ரூபாயாக உயர்த்த, இந்த மசோதா பரிந்துரை செய்கிறது.
ஆனால், மசோதாவின் முற்போக்கு அம்சங்கள் எதுவும், பொது வெளியில் பேசப்படாமல், அதன் குறையாக தோன்றக்கூடிய சில அம்சங்கள் மட்டுமே முன்வைக்கப்படுகின்றன.இது, சிறு, குறு முதலீட்டாளர்கள் மத்தியில், பெரும் அச்சத்தை உருவாக்கி உள்ளது. ஏற்கனவே, குறைந்து வரும் வட்டி விகிதங்களால், பாதிக்கப்பட்ட இவர்கள், தங்கள் முதலீடுகளை வங்கியில் இருந்தே வெளியில் எடுத்து, வேறு இடங்களில் செலுத்த காட்டும் அவசரம், கவலைக்கிடமானது.
ஏற்கனவே, வாராக்கடன் தொல்லையில் வாடும் பொதுத் துறை வங்கிகள், மேலும் பல சிரமங்களுக்கு ஆளாகக்கூடிய சூழல் நிலவுகிறது. இந்த தவறான புரிதல், அடிப்படைத்தன்மை அற்றது என்பதை, நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். வங்கி வைப்பு கணக்கை மட்டுமே நம்பி இருப்போர், தங்கள் நம்பிக்கையை மாற்றியமைக்கும் போது ஏற்படும் பிற ஆபத்துகளை, கருத்தில் கொள்ளத் தவறுகின்றனர். அடிப்படை முதலீட்டு மாற்றங்களை கையாளும் போது, நாம் சந்திக்கக் கூடிய ஆபத்துகளை, முன்கூட்டியே ஆய்வு செய்வது மிக அவசியம். அதை செய்யத் தவறினால், பிற்காலத்தில் அந்த ஆபத்துகளால் ஏற்படும் விளைவுகள், நாம் தாங்கிக் கொள்ள முடியாத அளவு அமையும். இதை முதலில் உணர்வது அவசியம்.
வைப்பு கணக்கு காப்பீடு, சராசரி முதலீட்டாளர்கள் நலன் சார்ந்து மட்டுமே மாற்றி அமைக்கப்படும் என்ற அடிப்படை நம்பிக்கை, நம்மில் தொடர வேண்டும். வங்கிகளின் அடிப்படை இயக்கம் சீராக அமைய, வைப்பு நிதி காப்பீடு அதிகப்படுத்தப்பட வேண்டும். இந்த மசோதா, நிச்சயம் அதைச் செய்யும் என, எதிர்பார்க்கலாம். புதிய சட்டங்கள் அமலுக்கு வருவதற்கு முன், அவற்றின் மீது, பார்லி.,யும், ரிசர்வ் வங்கியும், அதிக கவனம் செலுத்துவது வழக்கம். அந்த வழக்கம் தொடர்கிறது என்பதை, முதலீட்டாளர்கள் உணர வேண்டும்.
புதிய சட்டம் மூலம் வங்கி நடப்பையும், முதலீட்டாளர்களின் பங்கையும் இணைக்க முற்படுவது, ஒரு புதிய முயற்சி. அதை மதிக்க வேண்டும். அதே சமயம், ஒரு வங்கி எப்படி இயங்குகிறது என்று கூட ஆய்வு செய்யாமல், அதன் வைப்பு கணக்கில் முதலீடு செய்யும் கலாசாரம் மாற வேண்டும்.வெறும் வட்டி விகிதத்தை மட்டுமே பார்த்தும், ஆபத்துகளை பார்க்காமலும் செய்யும் முதலீட்டு கலாசாரம், மாற வேண்டிய அவசர சூழலை, நாம் உணர வேண்டுவது அவசியம்.
வைப்பு கணக்குகளில் இருந்து வெளியே வர விரும்புவோர், மிக கவனமாக பிற முதலீடுகளை ஆய்வு செய்ய வேண்டும். உரிய ஆலோசனை பெற்று, தங்கள் தேர்வுகளை மிக கவன மாக செய்ய வேண்டும். வைப்பு கணக்கு பணத்தை பங்கு சந்தையில் செலுத்தும் போது, நன்கு யோசித்து, தரம் பார்த்து, ஆபத்துகளை உணர்ந்து முடிவெடுக்க வேண்டும்.
-ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|