பதிவு செய்த நாள்
19 டிச2017
00:36
புதுடில்லி : ஜி.எஸ்.டி.,யை காட்டி, குடியிருப்புகளின் விலையை உயர்த்தி உள்ள, ரியல் எஸ்டேட் நிறுவனங்களை ஆய்வு செய்து, தவறு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க, கொள்ளை லாப தடுப்பு ஆணையம் திட்டமிட்டு உள்ளது.
இது குறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: கட்டுமானத்தில் உள்ள வீடுகளுக்கு, 12 சதவீதம், ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி உள்ளது. மேலும் இந்நிறுவனங்கள், கட்டுமானத்தின் போது பயன்படுத்தும் மூலப்பொருட்களுக்கு செலுத்திய வரியை, உள்ளீட்டு வரி பயனாக பெறவும், ஜி.எஸ்.டி., சட்டத்தில் வகை செய்யப்பட்டு உள்ளது.
தற்போது, கட்டுமானத்தில் உள்ள குடியிருப்புக்கு, ஏற்கனவே, மூலப்பொருட்களுக்கு செலுத்திய, 18 சதவீத வரியில், உள்ளீட்டு வரி பயன் கிடக்கிறது.அதாவது, செலுத்திய, ஜி.எஸ்.டி.,யை விட, கூடுதல் வருவாய் அந்நிறுவனங்களுக்கு கிடைக்கிறது. ஜூலைக்கு முந்தைய வரி நடைமுறையில், கட்டுமானத்தில் உள்ள குடியிருப்பின் மதிப்பில், 30 சதவீதத்திற்கு, 15 சதவீதம் சேவை வரி விதிக்கப்பட்டது. இதன்படி, 4.5 சதவீத சேவை வரியும், மாநில அரசுகளின், 4.5 சதவீத, மதிப்பு கூட்டு வரியும் சேர்த்து, மொத்தம், 9 சதவீத வரி மட்டுமே, வீடு வாங்குவோர் செலுத்த வேண்டி இருந்தது.
அதே சமயம், முந்தைய வரி விதிப்பில், கட்டுமான நிறுவனங்களுக்கு, உள்ளீட்ட வரி பயனில்லை என்பதை, கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால், ஜி.எஸ்.டி.,யில், உள்ளீட்டு வரிச்சலுகையுடன் இணைந்த, 12 சதவீத வரி விதிக்கப்படுகிறது. அதனால், பழைய நடைமுறையை விட, ஜி.எஸ்.டி.,யில், வரிச்சுமை குறைவாகவே உள்ளது. இந்த வகையில், கிடைக்கும் உள்ளீட்டு வரி பயன் சார்ந்த லாபத்தை, கட்டுமான நிறுவனங்கள், குடியிருப்புகளை வாங்குவோருக்கு அளிக்க வேண்டும். வீடுகளுக்கான மாதத் தவணையை குறைக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், சில கட்டுமான நிறுவனங்கள், மூலப்பொருட்கள் செலவு உயர்ந்துள்ளதாக கூறுகின்றன.
மேலும், குடியிருப்பின் விலையை அதிகரிக்க, வர்த்தக நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதாக கூறி, வீடு வாங்குவோரிடம் கூடுதல் தொகையை வசூலிப்பதாக கூறப்படுகிறது. இப்புகார்களை விசாரிக்க, கொள்ளை லாப தடுப்பு ஆணையம் திட்டமிட்டு உள்ளது. அதில், குடியிருப்பு விலையை உயர்த்தியதற்கு நியாயமான, திருப்தியான காரணங்கள் இல்லாதபட்சத்தில், கட்டுமான நிறுவனங்கள் மீது, அபராதமுடன் கூடிய நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதலாக வசூலித்த வரியை, வட்டியுடன், குடியிருப்பு உரிமையாளருக்கு திரும்ப வழங்கவும், கட்டுமான நிறுவனங்களின், ஜி.எஸ்.டி., பதிவை ரத்து செய்யவும் முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
லாப பகிர்வு:
கட்டுமான நிறுவனங்கள், ஜி.எஸ்.டி., பயனை, நுகர்வோருக்கு வழங்குவதில்லை. அந்நிறுவனங்கள் பெறும் உள்ளீட்டு வரி பயனில், சிறிதளவாவது குடியிருப்பை வாங்குவோருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
-அபிஷேக் ரஸ்தோகி, பங்குதாரர், கேதான் அண்டு கோ
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|