பதிவு செய்த நாள்
10 ஜன2018
04:23
புதுடில்லி:அனைத்து துறை நிறுவனங்களும், நிரந்தர ஊழியருக்கு நிகரான ஊதியத்துடன், ஒப்பந்த தொழிலாளரை நியமிக்க அனுமதி அளித்து, மத்திய அரசு வரைவு அறிக்கை வெளியிட்டு உள்ளது.இதனால், நிறுவனங்கள், ஒப்பந்ததாரர் தயவின்றி, தொழிலாளர்களை நேரடியாக தற்காலிக பணிகளில் நியமிக்க முடியும்.
அனுமதி
தற்போது, ஆயத்த ஆடைகள் தயாரிப்புத் துறையில் மட்டுமே, குறிப்பிட்ட கால ஒப்பந்த பணியாளர் நடைமுறைக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதை, அனைத்து துறைகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என, பல ஆண்டுகளாக, தொழில் கூட்டமைப்புகள் கோரின.சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில், காலணி, தோல் மற்றும் தோல் பொருட்கள் உள்ளிட்ட துறைகளுக்கும், ஒப்பந்த பணியாளர் நடைமுறையை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில், அனைத்து துறைகளிலும், ஒப்பந்த பணியாளர் நடைமுறைக்கு, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.இந்த முடிவு, மிகப்பெரிய அளவில், சர்வதேச முதலீடுகளை ஈர்க்க துணை புரியும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து, இந்திய தொழிலக கூட்டமைப்பின், தொழில் நல்லுறவுக்கான தேசிய குழு தலைவர், எம்.எஸ்.உன்னிகிருஷ்ணன் கூறியதாவது:தற்போது நிறுவனங்கள், ஒப்பந்ததாரர் மூலமாகவே, தற்காலிக பணிக்கான தொழிலாளர்களை நியமிக்கின்றன. நிறுவனம், ஒப்பந்த தொழிலாளருக்கு நிர்ணயிக்கும் ஊதியத்தில், ஒரு பகுதியை, ஒப்பந்ததாரர், தனக்குரிய கட்டணமாக எடுத்துக் கொள்கிறார்.
முரண்பாடு
அதனால், ஒப்பந்த தொழிலாளருக்கு, ஊதியம் குறைவாகவே கிடைக்கிறது. மேலும், ஒரு நிறுவனத்தில், நிரந்தர பணியாளர்கள் பெறும் சலுகைகள் அனைத்தும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கிடைப்பதில்லை.இந்த முரண்பாடுகளுக்கு, தற்போது முடிவு கட்டப்பட்டு உள்ளது. இனி, ஒப்பந்ததாரர் தயவின்றி, நிறுவனங்கள் நேரடியாக தற்காலிக பணியாளர்களை நியமிக்கலாம். நிறுவனத்தின், ஒரு பிரிவில் நிரந்தர பணியாளர்கள் பெறும் ஊதியம் மற்றும் சலுகைகளை, அதே பிரிவின் தற்காலிக தொழிலாளர்களும் பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
எதிர்ப்பை மீறி
பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு, 2003ல், குறிப்பிட்ட காலத்திற்கான தற்காலிக பணியாளர் நியமன நடைமுறைக்கு அனுமதி அளித்தது. 2007ல், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, தொழிற்சங்கங்களின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்து, இந்த நடைமுறையை ரத்து செய்தது. தற்போது, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, மீண்டும், ஒப்பந்த தொழிலாளர் நியமன நடைமுறைக்கு அனுமதி அளித்துள்ளது.
பணி நேரம் - சலுகைகள்
குறிப்பிட்ட காலத்திற்கு ஒப்பந்தம் செய்யப்படும் தொழிலாளர்களுக்கு, நிரந்தர பணியாளர்களுக்கு நிகரான, பணி நேரம், ஊதியம் மற்றும் சலுகைகள் கிடைக்கும். ஒப்பந்தத்தை நீட்டிக்காவிடின், நிறுவனங்கள், 'நோட்டீஸ்' அளிக்கத் தேவையின்றி, தொழிலாளர்கள் தன்னிச்சையாகவே பணி வாய்ப்பை இழப்பர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|