பதிவு செய்த நாள்
23 ஜன2018
01:09
டாவோஸ் : ‘‘அனைத்து துறைகளிலும், வளர்ச்சி காணப்படுவதால், நடப்பு நிதியாண்டின், அக்., – மார்ச் வரையிலான அரையாண்டில், ‘ஜி.டி.பி.,’ எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி, அரசின் மதிப்பீட்டை விட உயர்ந்து, 7 சதவீதத்தை எட்டும்,’’ என, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் நிர்வாக இயக்குனர், சந்தா கோச்சார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில், டாவோஸ் நகரில் சர்வதேச பொருளாதார மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வந்த சந்தா கோச்சார், செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய புள்ளியியல் அலுவலகம், நடப்பு 2017 – 18ம் நிதியாண்டின் ஜி.டி.பி., 6.5 சதவீதமாக இருக்கும் என, தெரிவித்துள்ளது. ஏப்ரல் – செப்டம்பர் வரையிலான அரையாண்டில், ஜி.டி.பி., 6 சதவீதமாக இருந்தது. இது, அனைத்து துறைகளில் வளர்ச்சிப் போக்கு காணப்படுவதால், இரண்டாவது அரையாண்டில், 7 சதவீதமாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால், நடப்பு நிதியாண்டின் ஜி.டி.பி., புள்ளியியல் அலுவலகம் ஏற்கனவே மதிப்பிட்ட, 6.5 சதவீத வளர்ச்சியை தாண்டும் என, கூறலாம். அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் காணப்படுவதால், இது, சாத்தியமாகும். உதாரணமாக, மக்களின் நுகர்வு அதிகரித்திருப்பதை, தொழில் உற்பத்தி குறியீட்டின் வளர்ச்சியில் இருந்து அறிந்து கொள்ளலாம். தனிநபர் கடன், உள்நாட்டு பயணியர் போக்குவரத்து, இரு சக்கரம் உள்ளிட்ட அனைத்து வாகன விற்பனை ஆகியவற்றின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களாக, தயாரிப்பு துறையின் வளர்ச்சியும் நன்கு உள்ளது.
நாட்டின் ஏற்றுமதியும், கடந்த நிதியாண்டை விட, நடப்பு நிதியாண்டில் அதிகரித்துள்ளது. இந்தியாவின் அன்னியசெலாவணி கையிருப்பு, ஓராண்டுக்கும் மேலான இறக்குமதியை சமாளிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளது. பொருட்கள் வினியோகம் பரவலாகி வருவதால், மக்களின் தேவை உயர்ந்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி சூடுபிடித்துள்ளது என, நம்பிக்கையுடன் கூறலாம். கடந்த நான்கு ஆண்டுகளாக, மத்திய அரசு, வளர்ச்சி ஒன்றையே இலக்காக கொண்டு, பொருளாதாரம், சமூகம், அரசு அமைப்புகள் என, பலமுனைகளில் சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது.
நீண்ட கால பயன்களை கருதி எடுக்கப்பட்டு வரும் இத்தகைய நடவடிக்கைகள், நாட்டை உயரிய வளர்ச்சிப் பாதையை நோக்கி இட்டுச் சென்று கொண்டிருக்கின்றன. இத்தகைய சீர்திருத்தங்கள், ஒழுங்குமுறையான பொருளாதாரத்தை உருவாக்கி வருவதில், முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால், உலகில், மிக வேகமான பொருளாதார வளர்ச்சியை காணும் நாடு என்ற வலிமையை, இந்தியா பெறும்.
தொழில் துறை வளர்ச்சி:
நாட்டின் தொழில் துறை உற்பத்தி, 17 மாதங்களில் இல்லாத வகையில், 2017, நவம்பரில், 8.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. தயாரிப்பு துறை உற்பத்தி, 10.2 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது. பொறியியல் சாதனங்கள், நுகர்வோர் சாதனங்கள், சுரங்கம், மின்சாரம் ஆகிய துறைகளும், உற்பத்தியில் வளர்ச்சி கண்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|