பதிவு செய்த நாள்
14 பிப்2018
00:40
புதுடில்லி:‘மத்திய
அரசு, வரி ஏய்ப்பு தடுப்பு நடவடிக்கைகளை, மேலும் தீவிரப்படுத்த
உள்ளதால், 2018 – 19ம் நிதியாண்டில், ஜி.எஸ்.டி., வருவாய், மாதம், 1
லட்சம் கோடி ரூபாயை தாண்டும்’ என, நிதியமைச்சக வட்டாரங்கள்
தெரிவித்து உள்ளன.
ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி,
2017 ஜூலை, 1ல் அமலுக்கு வந்தது. அம்மாதத்தில், 95 ஆயிரம் கோடி
ரூபாய் வசூலானது. அதன்பின், டிச., வரை, வரி குறைவாகவே வசூலாகி
உள்ளது.நடப்பு, பிப்., வரையிலான எட்டு மாதங்களில், ஜி.எஸ்.டி.,
மூலம், 4.40 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்க, மத்திய அரசு இலக்கு
நிர்ணயித்து உள்ளது. டிச., வரை, மொத்தம், 5.௨7 லட்சம் கோடி ரூபாய்வசூலாகி உள்ளது.
இலக்கு
இத்துடன்,
மார்ச் வரையிலான, நடப்பு காலாண்டு வருவாயை சேர்த்தால், மொத்த வரி
வசூல், மேலும் அதிகரிக்கும். இருந்த போதிலும், இதில் திரும்ப
அளிக்கப்படும் கூடுதல் வரியை கணக்கிட்டால், நிகர வரி வருவாய்,
நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து, நிதியமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஜி.எஸ்.டி.,
கணக்கு தாக்கலில் உள்ள, பெரும்பாலான பிரச்னைகளுக்கு தீர்வு
காணப்பட்டு உள்ளது. விரைவில், கணக்கு தாக்கல் நடைமுறையில்,
சிறிதும் பிசிறில்லாமல், முழுமையான ஸ்திரத்தன்மை உண்டாகும்.இத்துடன், சரக்கு போக்குவரத்துக்கான,‘இ
– வே பில்’ எனப்படும், மின் வழிச் சீட்டு நடைமுறையும், நாடு
முழுவதும் அமலுக்கு வந்து விடும். இதனால், சரக்கு போக்குவரத்தில்,
வரி முறைகேடுகள் முடிவிற்கு வரும்.இத்துடன், வரி ஏய்ப்பு தடுப்பு
நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்தவும், அரசு முடிவு
செய்துள்ளது. இதற்காக, டி.ஜி.ஏ.ஆர்.எம்., என்ற அமைப்பு
ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
ஒப்பீடு
இந்த அமைப்பு, ஜி.எஸ்.டி.,
கணக்கு தாக்கல் செய்தோரின் விபரங்களை சேகரித்து, அவர்கள் தாக்கல்
செய்த, வருமான வரி கணக்குடன் ஒப்பிட்டு பார்க்கும்.இந்த தகவல்
ஒப்பீட்டிற்காக, செயற்கை நுண்ணறிவு சாப்ட்வேர் உள்ளிட்ட நவீன
வழிமுறைகள் பின்பற்றப்படும். இதன் மூலம், வரி ஏய்ப்பு செய்வோர்
அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்படுவர்.அதுமட்டுமின்றி, தங்கத்திற்கு, 10 சதவீத சுங்க வரி உள்ள போதிலும், அதன் இறக்குமதி, மாதந்தோறும் அதிகரிக்கிறது.
இது குறித்தும், வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கண்காணிக்கஉள்ளனர்.ஜி.எஸ்.டி.,
மூலம், இறக்குமதியாகும் தங்கம், நுகர்வோரை சென்றடைவது வரை உள்ள
கணக்கு விபரங்களை, புலனாய்வு செய்ய முடியும். இந்த தகவல்களும்,
வருமான வரித்துறையுடன் பகிர்ந்து கொள்ளப்படும்.
இது போன்ற
நடவடிக்கைகளால், வரும் நிதியாண்டில், ஜி.எஸ்.டி., வருவாய், மாதம்
சராசரியாக, 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டும் என,
எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|