பதிவு செய்த நாள்
21 பிப்2018
00:32
மும்பை : பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த, 11,400 கோடி ரூபாய் மோசடியை தொடர்ந்து, அவ்வங்கியின் கடன் தகுதி மதிப்பீட்டை குறைப்பது குறித்த ஆய்வை துவக்கி உள்ளதாக, தர நிர்ணய நிறுவனமான, ‘மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீசஸ்’ தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: பி.என்.பி.,யின் ஒட்டு மொத்த செயல்பாடுகளின் அடிப்படையில், நிதி ஸ்திரத்தன்மையை குறிக்கும், ‘பி ஏ ஏ – 2’ குறியீடு வழங்கப்பட்டு உள்ளது. மோசடி வெளிச்சத்திற்கு வந்ததால், இந்த மதிப்பீட்டை குறைக்கலாமா என, ஆய்வு செய்யும் பணி துவங்கி உள்ளது. முதலாவதாக, மோசடி பரிவர்த்தனைகளால், வங்கியின் நிதியாதாரத்தில் ஏற்படும் தாக்கம் ஆராயப்படும். அடுத்து, வங்கியின் பங்கு மூலதனத்தை மேம்படுத்த, நிர்வாக ரீதியில் எடுக்கப்படும் நடவடிக்கைகள், கவனத்தில் கொள்ளப்படும்.
மூன்றாவதாக, வங்கி மீது, ரிசர்வ் வங்கி ஏதாவது கடுமையான நடவடிக்கை எடுக்கிறதா என, பார்க்கப்படும். இத்துடன், வங்கியின் அடிப்படை கடன் மதிப்பீடு, அதன்படி வழங்கப்பட்ட, ‘பி ஏ – 3’ குறியீடு மற்றும் இடர்ப்பாட்டு மேலாண்மைக்கான, ‘பி ஏ ஏ – 3’ குறியீடு ஆகிய வற்றை குறைப்பது குறித்தும் ஆராய முடிவு செய்யப்பட்டு உள்ளது. பல ஆண்டுகளாக, போலி கடன் பொறுப்பேற்பு ஆவணங்கள் மூலம், வங்கியில், 180 கோடி டாலர் அளவிற்கு நடைபெற்ற மோசடியால், வங்கியின் கடன் சுமை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாகவே, வங்கியின் கடன் தகுதி மதிப்பீட்டை குறைப்பது தொடர்பான ஆய்வு நடக்கிறது. இந்த மோசடி பரிவர்த்தனைகளுக்கான பொறுப்பேற்பு மற்றும் நிதி தாக்கத்தை, சட்டம் தீர்மானிக்கும். இருந்த போதிலும், மோசடி தொகையில், குறைந்தபட்சம் குறிப்பிடத்தக்க தொகையை, வங்கி செலுத்த வேண்டி இருக்கும் என, கருதப்படுகிறது. அதனால், வங்கியின் லாபம் பாதிக்கப்படும். எனினும் அது, மோசடி பணத்தை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை சார்ந்தே உள்ளது.
வங்கி, மோசடி தொகை முழுவதையும் செலுத்த நேர்ந்தால், அதன் மூலதன இருப்பு விகிதம், ரிசர்வ் வங்கி நிர்ணயித்ததை விட குறையும். அதை, வங்கி ஈடுசெய்ய நேரிடும். அதுமட்டுமின்றி, 2019 மார்ச்சுக்குள், ‘பேசல் – 3’ விதிகளின்படி, வங்கி, குறைந்தபட்சம், 8 சதவீத மூலதன இருப்பு விகிதத்தை பராமரிக்க வேண்டும். இத்தகைய சூழலில், பங்கு மூலதனத்தை உயர்த்த, மத்திய அரசிடம் நிதி கோர நேரும்.
மோசடியால், வங்கியின் பங்கு விலை, 30 சதவீதத்திற்கும் மேலாக சரிந்துள்ளது. அதனால், பங்குச் சந்தையில் ஓரளவிற்கே நிதி திரட்ட முடியும். இத்தகைய அம்சங்களை கருதி, வங்கியின் கடன் தகுதி மதிப்பீட்டை குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
‘பிட்ச்’ நிறுவனமும்...
அமெரிக்காவைச் சேர்ந்த, ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ நிறுவனமும், பஞ்சாப் நேஷனல் வங்கியின், கடன் தகுதி மதிப்பீட்டை குறைப்பது குறித்த ஆய்வை துவக்கி உள்ளது. இதற்காக, பாதகம் ஏற்படக் கூடிய நிறுவனங்களை கண்காணிக்கும் பிரிவில், வங்கி சேர்க்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|