பதிவு செய்த நாள்
05 மார்2018
00:32
ஓய்வு கால முதலீடான, என்.பி.எஸ்., திட்டத்தில், சம பங்கு முதலீட்டை அதிகரிக்கும் வகையில் உத்தேசிக்கப்பட்டுள்ள மாற்றம் ஈர்ப்புடையதாக இருக்குமா?
தேசிய பென்ஷன் திட்டத்தை (என்.பி.எஸ்.,) நிர்வகிக்கும் பென்ஷன் நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம், இந்த திட்டத்தில், சம பங்கு முதலீட்டு அளவை அதிகரிப்பதற்கான மாற்றத்தை உத்தேசித்துள்ளது. இது தொடர்பான கருத்தாக்க குறிப்பை வெளியிட்டு, மக்களின் கருத்துக்களை ஆணையம் கோரிஉள்ளது. இந்த மாற்றம், ‘ஆக்டிவ் சாய்ஸ்’ எனும் விருப்ப முதலீட்டு தேர்வு வாய்ப்பை நாடுபவர்களுக்கு ஈர்ப்புடையதாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
மேலும், 60 வயதில் சம பங்கு முதலீடு, 50 சதவீதத்திற்கு மேல் இருக்காத வகையில், 50 வயதில் இருந்து சம பங்கு முதலீடு குறையும் வகையிலும் மாற்றம் உத்தேசிக்கப்பட்டுள்ளது.ஓய்வு காலத்திற்கான, என்.பி.எஸ்., திட்டத்தில் தற்போது, அரசு பத்திர நிதி (ஸ்கீம் – ஜி), வர்த்தக பத்திரங்கள் நிதி (ஸ்கீம் – சி) சம பங்கு நிதி (ஸ்கீம் – இ) மற்றும் மாற்று முதலீட்டு நிதி (ஸ்கீம் – ஏ) என, நான்கு விதமான நிதிகள் உள்ளன. இவற்றில் இரண்டு விதமாக முதலீடு செய்யலாம்.
வாழ்க்கை காலகட்ட நிலைக்கு ஏற்ப முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட முறையில் முதலீடு செய்யலாம். ‘லைப் சைக்கிள்’ திட்டம் என, இவை குறிப்பிடப்படுகின்றன. இரண்டாவது வாய்ப்பு, ‘ஆக்டிவ் சாய்ஸ்’ என குறிப்பிடப்படுகிறது. இதன் கீழ், நான்கு நிதிகளில் அவற்றின் வரம்பிற்கு ஏற்ப விரும்பிய விகிதத்தில் முதலீடு செய்யலாம். இந்த முறையில் சம பங்கு முதலீட்டை அதிகரித்துக் கொள்ளலாம் என்றாலும், இதற்கும், 50 சதவீதம் வரம்பு உண்டு. இந்த வரம்பை தான் தற்போது, 75 சதவீதமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான யோசனை ஏற்கனவே வல்லுனர் குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்களிடம் இருந்து இதற்கான கோரிக்கை அதிக அளவில் வந்துள்ளதாக பென்ஷன் ஆணையம் தெரிவித்துள்ளது.அதிக அளவிலான சம பங்கு முதலீடு, உறுப்பினர்களுக்கு அதிக பலன் அளிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. என்.பி.எஸ்., திட்டத்தில் நிதிக்கான நிர்வாக கட்டணமும் குறைவாக உள்ளது. எனவே, உத்தேசிக்கப்பட்டுள்ள மாற்றம் ஈர்ப்புடையதாக அமையலாம் என கருதப்படுகிறது.
குறிப்பாக, இளம் வயதினருக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். இந்த முதலீட்டிற்கு கூடுதலாக 50 ஆயிரம் ரூபாய் வரிச் சலுகை இருப்பதும் சாதகமான அம்சமாகக் கருதப்படுகிறது.எனினும், என்.பி.எஸ்., திட்டத்தில் அதிகபட்சமாக, 60 சதவீத தொகையை மட்டுமே விலக்கிக்கொள்ள அனுமதிக்கப்படுவது, பலரை யோசிக்க வைக்கிறது. 40 சதவீத தொகையை ஓய்வூதிய காப்பீட்டு திட்டத்தில் முதலீடு செய்வது கட்டாயம்.
இவை தரும் பலன் குறைவாக இருப்பதாகக் கருதப்படுகிறது. அதிலும், பல ஆண்டுகளுக்குப் பின், வட்டி விகித போக்கிற்கு ஏற்ப ஓய்வூதிய பலன் குறைவாக இருக்கலாம்.மேலும், 50 வயதுக்கு மேல் சம பங்கு அளவு குறைவது பாதகமானது என, சில வல்லுனர்கள் கருதுகின்றனர். 50 வயதில் தீவிரமாக முதலீடு செய்ய, 10 ஆண்டுகள் மட்டுமே இருப்பதால், முதலீடு தேர்வை உறுப்பினர்களிடமே விடப்பட வேண்டும் என, வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும், சம பங்கு அளவு உயர்வதற்கான வாய்ப்பு வரவேற்கத்தக்க மாற்றம் என கருதப்படுகிறது. அதே நேரத்தில், இந்த திட்டத்தை மட்டுமே ஓய்வூதிய காலத்திற்கான ஒற்றை வாய்ப்பாக கருதாமல், பரவலாக இருக்கும் வகையில் ஓய்வூதிய திட்டம் வகுக்கப்பட வேண்டும் என்றும் ஆலோசனை சொல்கின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|