பதிவு செய்த நாள்
21 மார்2018
00:26
புதுடில்லி : ‘‘உலக வர்த்தக அமைப்பை வலுப்படுத்த, உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்,’’ என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
டில்லியில், உலக வர்த்தக அமைப்பின், அதிகாரபூர்வமற்ற கூட்டம் நடைபெற்றது. அமெரிக்கா, சீனா உள்ளிட்ட, 52 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில், சுரேஷ் பிரபு பேசியதாவது: பொருளாதார வளர்ச்சி, சர்வதேச வர்த்தகம், வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு, பன்னாட்டு பரஸ்பர வர்த்தகம் மிகவும் முக்கியம். பன்னாட்டு வர்த்தக நெறிமுறைகளின் காவலனாக, உலக வர்த்தக அமைப்பு உள்ளது.
கடந்த ஆண்டு,அர்ஜென்டினாவில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் மாநாடு, முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காணாமல் முடிவுற்றது.இத்தகைய நிலை தவிர்க்கப்பட வேண்டும். சர்வதேச வர்த்தக வளர்ச்சிக்கு, உலக வர்த்தக அமைப்பு உரிய பங்களிப்பை வழங்குவதாக நீங்கள் கருதினால், அனைத்து வகையிலும், அதை வலிமையாக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இதில், எந்த ஒரு உறுப்பு நாடும், செயல்படாமல் இருக்கக் கூடாது.
உறுப்பு நாடுகள், அனைத்து பிரச்னைகள் குறித்தும், வெளிப்படையாக, ஒளிவுமறைவின்றி விவாதித்து, தீர்வு காண்பதற்காக, இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செயல் திட்டங்களுக்கு, அரசியல் ஆலோசனை அவசியம் தேவை. அவ்வாறு இல்லாததால் தான், அர்ஜென்டினா மாநாட்டில் எதையும் சாதிக்க முடியவில்லை. அதனால், உலக வர்த்தக அமைப்புடன் இணைந்து செயல்படவும், அதை மேம்படுத்தவும், அரசியல் ஆலோசனை வழங்குவது உள்ளிட்டவற்றுக்கு, உறுப்பு நாடுகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|