பதிவு செய்த நாள்
18 ஏப்2018
00:21
புதுடில்லி : நாட்டிலேயே, மருந்து மற்றும் ஆரோக்கிய பராமரிப்பு துறைகளில் தான், வல்லுனர்களுக்கு அதிக,ஊதியம் வழங்கப்படுவதாக, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
ரான்ஸ்டாட் இந்தியா நிறுவனத்தின் ஆய்வுப் பிரிவான, ரான்ஸ்டாட் இன்சைட்ஸ், 20 துறைகளில், 15 பிரிவுகளைச் சேர்ந்த, 1 லட்சம் வல்லுனர்களுக்கு, நிறுவனங்கள் அளிக்கும் ஊதியம் குறித்து ஆய்வு செய்து வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவில், மருந்து துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில், அதிக வல்லுனர்கள் தேவைப்படுகின்றனர்.
மருத்துவர்கள்:
அதுபோல, ஆரோக்கிய பராமரிப்பு துறையில், சிறப்பு சிகிச்சைக்கான மருத்துவர்களின் தேவையும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, மருந்து மற்றும் ஆரோக்கிய பராமரிப்பு துறைகளில், வல்லுனர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்படுகிறது. ஒரு சில சிறப்பு நோய் சிகிச்சை மருத்துவர்களுக்கு, ஆண்டுக்கு சராசரியாக, 18.40 லட்சம் ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது.
ஜி.எஸ்.டி., அறிமுகம் காரணமாக, நிறுவனங்கள் கணக்கு தாக்கல் செய்வது அதிகரித்துள்ளது. இத்தகைய சேவைகளுக்கான வல்லுனர்களுக்கு வேலைவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. சேவைகள் துறை நிறுவனங்கள், வல்லுனருக்கு, ஆண்டுக்கு, சராசரியாக, 9.40 லட்சம் ரூபாய் ஊதியம் வழங்குகின்றன.
அதிக ஊதியம் வழங்குவதில், நுகர்ப்பொருள் நிறுவனங்கள், மூன்றாவது இடத்தில் உள்ளன. இவை, ஒரு வல்லுனருக்கு ஊதியமாக, ஆண்டொன்றுக்கு, சராசரியாக, 9.20 லட்சம் ரூபாய் அளிக்கின்றன.இது, ஐ.டி., மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில், முறையே, 9.10 லட்சம் ரூபாய் மற்றும், 9 லட்சம் ரூபாயாக உள்ளது.
பெங்களூரு நம்பர் – 1:
வல்லுனர்களுக்கு அதிக ஊதியம் வழங்கும் நகரங்களில், பெங்களூரு முதலிடத்தில் உள்ளது. இங்கு, ஒரு வல்லுனருக்கு, ஆண்டுக்கு சராசரியாக, 10.80 லட்சம் ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது. இரண்டாவது இடத்தில், புனே உள்ளது. இந்நகரில், சராசரியாக, 10.30 லட்சம் ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது.
தேசிய தலைநகர் பிராந்தியம் மற்றும் மும்பை ஆகியவை, முறையே, 9.90 லட்சம் ரூபாய் மற்றும் 9.20 லட்சம் ரூபாயுடன், அடுத்த இடங்களில் உள்ளன. சென்னை நகரம், ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. இங்குள்ள நிறுவனங்கள், வல்லுனர்களின் ஊதியத்திற்கு, சராசரியாக, 8 லட்சம் ரூபாய் செலவிடுகின்றன.
ஐதராபாத், கோல்கட்டா நகரங்களில், வல்லுனர்களுக்கு, முறையே, 7.90 லட்சம் ரூபாய் மற்றும் 7.20 லட்சம் ரூபாய் என்ற அளவில், சராசரி ஊதியம் கிடைக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதர துறைகள்:
கட்டட வடிவமைப்பாளர்கள், திட்ட பொறியாளர்கள், ‘பிளாக்செயின்’ தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு, முறையே, ஆண்டுக்கு, 15.10 லட்சம்; 14.8 லட்சம் மற்றும் 14.௬ லட்சம் ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது.
-ரான்ஸ்டட் இன்சைட்ஸ் ஆய்வறிக்கை
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|