பதிவு செய்த நாள்
11 மே2018
00:54
புதுடில்லி:‘நிறுவனங்களின் இயக்குனர் குழுவில், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பதவிகளை ஒருவரே வகிக்கக் கூடாது; தனித் தனியாக பிரிக்க வேண்டும்’ என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ தெரிவித்துள்ளது.
‘உதய் கோட்டக்’ குழு அளித்துள்ள பரிந்துரைகளின் அடிப்படையில், நிறுவனங்களுக்கான புதிய விதிமுறைகளை செபி வெளியிட்டுள்ளது. அதன் விபரம்:
* பங்குச் சந்தை பட்டியலில், முன்னணியில் உள்ள, 1,000 நிறுவனங்களின் இயக்குனர் குழுவில், ஒரு பெண் உட்பட, குறைந்தபட்சம், ஆறு தனி இயக்குனர்கள் நியமிக்கப்பட வேண்டும். தனி இயக்குனர்கள் நியமனம், 2019, ஏப்., 1 முதல் நடைமுறைக்கு வரும்
* இயக்குனர் குழுவில், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பதவிகளை பிரிக்க வேண்டும். இரு பதவிகளில், தனித்தனி நபர்களை நியமிக்க வேண்டும். 2020, ஏப்., 1க்குள் இந்த விதிமுறை பின்பற்றப்பட வேண்டும்
* 100 முன்னணி நிறுவனங்கள், அவற்றின் ஆண்டு பொதுக்குழு நிகழ்ச்சிகளை, கட்டாயம் வலைதளத்தில் வெளியிட வேண்டும்
* ஒருவர், எட்டு நிறுவனங்களுக்கு மேல், இயக்குனர் பதவி வகிக்கவோ அல்லது தனி இயக்குனராகவோ செயல்படக் கூடாது
* ஒரு நிறுவனத்தின் நிறுவனர் குழுமத்தைச் சேர்ந்த, தனி நபர் அல்லது நிறுவனம், குறைந்தபட்சம், 20 சதவீத பங்குகளை வைத்திருந்தால், அது, உறவு முறையாக கருதப்படும்
* அத்தகையோருக்கு, நிறுவனத்தின் விற்றுமுதலில், 2 சதவீதத்திற்கு மேல், ‘ராயல்டி’ அல்லது ‘பிராண்டு’ பயன்பாட்டு தொகை வழங்குவதற்கு, பங்கு முதலீட்டாளர்களின் ஒப்புதல் அவசியம்
* தகுதியுள்ள நிறுவனங்களிடம் இருந்தும், உரிமைப் பங்குகள் மூலமாகவும் திரட்டும் நிதி, எவற்றுக்காக செலவிடப்பட்டது என்ற விபரத்தை நிறுவனங்கள் வெளியிட வேண்டும்
* நிறுவனங்கள், அவற்றின் வரவு – செலவு கணக்கை தணிக்கை செய்யும் நிறுவனங்களின் விபரங்கள், தணிக்கைக்கு வழங்கப்பட்ட கட்டணம் உள்ளிட்ட விபரங்களை தெரிவிக்க வேண்டும்
* கணக்கு தணிக்கையில் இருந்து ஒரு நிறுவனமோ அல்லது பட்டய கணக்காளரோ விலகினால், அதற்கான காரணங்களை, நிறுவனம் வெளியிட வேண்டும்
* முன்னணியில் உள்ள, 100 நிறுவனங்கள், நிதியாண்டு முடிந்த, ஐந்து மாதங்களுக்குள், ஆண்டு பொதுக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும்
* அனைத்து செயல் சாரா இயக்குனர்களின் மொத்த ஊதியத்திற்கு நிகராக, செயல்சாரா இயக்குனர் ஒருவருக்கு ஊதியம் வழங்க வேண்டுமென்றால், பங்கு முதலீட்டாளர்களின் ஒப்புதல் வேண்டும்
* நிறுவனத்தின் நிகர லாபத்தில், 2.5 சதவீதம் அல்லது ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் செயல் நிறுவனர் இயக்குனர்களுக்கு ஊதியம் அளிப்பதாக இருந்தால், பங்கு முதலீட்டாளர்களின் ஒப்புதல் தேவை
* 75 வயதிற்கு மேற்பட்டோரை, செயல் சாரா இயக்குனராக நியமிக்க, பங்கு முதலீட்டாளர்களிடம் அனுமதி பெறுவது அவசியம்
* முன்னணியில் உள்ள, 500 நிறுவனங்கள், கணினி பாதுகாப்பை பலப்படுத்த, இடர்ப்பாட்டு மேலாண்மை குழுவை அமைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளில், பெரும்பாலானவை, அடுத்த ஆண்டு, ஏப்ரல் 1ல் அமலாகும். இதர விதிமுறைகள், 2020 ஏப்., 1ல் நடைமுறைக்கு வரும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|