பதிவு செய்த நாள்
30 மே2018
00:26
புதுடில்லி : மொபைல்போனில், தேவையற்ற அழைப்புகள், ‘எஸ்.எம்.எஸ்.,’ஆகியவற்றை தடுக்க, தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள், ‘பிளாக்செயின்’ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது தொடர்பான விதிமுறைகளைக் கொண்ட, வரைவு அறிக்கையை, 'டிராய்' எனப்படும் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது.
இது குறித்து, ஆணையத்தின் தலைவர், ஆர்.எஸ்.சர்மா கூறியதாவது: ‘பிளாக்செயின்’ தொழில்நுட்பம், குறிப்பிட்ட நபருக்கு மட்டுமே சேவை கிடைப்பதை உறுதி செய்கிறது. மேலும், சேவையின் ரகசியத்தை காக்கவும் உதவுகிறது. அதனால், இந்த தொழில்நுட்பத்தில், பதிவு செய்த சந்தாதாரர்களை தவிர, வேறு நபருக்கு வணிக ரீதியிலான அழைப்புகளை விடுத்து தொல்லை கொடுக்க முடியாது.
அதுபோல, ‘எஸ்.எம்.எஸ்.,’ எனப்படும் குறுந்தகவல்களையும் தேவைப்படுவோருக்கு மட்டுமே அனுப்பலாம்; அனைவருக்கும் அனுப்ப முடியாது. இத்தகைய சேவைகளுக்காக பதிவு செய்துள்ள சந்தாதாரர் விபரங்களை அறியவும், சேவையை வழங்கவும், அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களால் மட்டுமே முடியும்.
அதனால், அங்கீகாரமற்ற எந்த நிறுவனமும், தேவையற்ற அழைப்புகளை விடுக்கவோ, குறுந்தகவல்கள் அனுப்பவோ முடியாது. உலகிலேயே, டிராய் அமைப்புதான், இது போன்ற கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்த உள்ளது. இது தொடர்பான வரைவறிக்கை, பொதுமக்களின் கருத்து கேட்புக்காக, வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஜூன், 11 வரை, கருத்துக்களை பதிவு செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.
மொபைல்போன் மூலம், பொருட்கள் மற்றும் சேவைகளை சந்தைப்படுத்தும், ‘டெலிமார்க்கெட்டிங்’ நிறுவனங்கள், சந்தாதாரர் விபரங்களை, தொலைதொடர்பு சேவை நிறுவனங்களிடம் இருந்து பெறுவதாக கூறப்படுகிறது. இதற்கு, ‘பிளாக்செயின்’ முடிவு கட்டும். இந்த தொழில்நுட்பத்தில், வர்த்தக அழைப்புகள், எஸ்.எம்.எஸ்., போன்றவற்றுக்காக பதிவு செய்த சந்தாதாரர்களுக்கு மட்டுமே, அத்தகைய சேவைகளை நிறுவனங்களால் வழங்க முடியும். பதிவு செய்த நிறுவனங்களுக்கு மட்டுமே, சந்தாதாரர் தகவல்களும், அவர்களுக்கு அளிக்க வேண்டிய சேவைகள் குறித்த விபரங்களும் கிடைக்கும்.
-எஸ்.கே.குப்தா, செயலர், தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|