பதிவு செய்த நாள்
30 மே2018
00:38
ஐதராபாத் : இந்தியாவில், முதன் முறையாக அமைய உள்ள, எரிவாயு சந்தைக்கான முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளன.
பங்குச் சந்தை, விளைபொருள் முன்பேர சந்தை ஆகியவற்றை போல, இந்தியாவிற்கென, எரிவாயு சந்தையை அமைக்க, மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. இச்சந்தையில், எரிவாயு மீதான வர்த்தகம் நடைபெறும். இது, எரிவாயு மீதான அன்றாட விலை நிர்ணயத்திற்கு உதவும்.
தற்போது, அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ரஷ்யா ஆகிய நாடுகளில் நிலவும் எரிவாயு விலை அடிப்படையில், உள்நாட்டில் இயற்கை எரிவாயு விலை, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, மத்திய அரசால் நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த நாடுகளில், 10 லட்சம் யூனிட் இயற்கை எரிவாயுவிற்கு, 3.06 டாலர் என்ற அடிப்படையில், உள்நாட்டில், எரிவாயு விலை, கடந்த ஏப்ரலில் நிர்ணயிக்கப்பட்டது.
உள்நாட்டில்:
இதே அளவில், இறக்குமதியாகும், திரவ இயற்கை எரிவாயுவின் விலை, 7.50 டாலராக உள்ளது.உள்நாட்டில், எரிவாயு சந்தை அமைந்தால், சந்தை விலைக்கேற்ப, இயற்கை எரிவாயு விலையை நிர்ணயம் செய்யலாம். எரிவாயு பயன்பாடும் அதிகரிக்கும்.
இது குறித்து, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினர், சத்பல் கர்க் கூறியதாவது: இந்தியாவில் எரிவாயு சந்தை அமைப்பதற்கான விதிமுறைகளை உருவாக்குவது குறித்து ஆலோசனை வழங்க, சர்வதேச தர நிர்ணய நிறுவனமான, ‘கிரிசில்’ நியமிக்கப்பட்டுள்ளது.
அடுத்த, 15 வாரங்களில், விதிமுறைகள் உருவாக்கப்பட்டு, அக்டோ பரில் சந்தையை செயல்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. மின்சார சந்தையை போல, எரிவாயுவின் தேவை, சப்ளை ஆகியவற்றின் அடிப்படையில், எரிவாயு சந்தையில் விலை நிர்ணயம் செய்யப்படும். இங்கு, மின்னணு தொழில்நுட்பத்தில் வர்த்தகம் நடைபெறும். முக்கிய எண்ணெய் குழாய்கள் எங்கு அமைந்துள்ளனவோ, அங்கு, எரிவாயுவை வினியோகிக்க வசதியாக, சந்தை அமைக்கப்படும்.
இலக்கு:
தற்போது, குஜராத், மஹாராஷ்டிரா, ஆந்திராவின் காக்கிநாடா ஆகியவற்றில், முக்கிய எரிவாயு குழாய்கள் உள்ளன. இவற்றில், ஏதாவது ஓரிடத்தில், எரிவாயு சந்தை அமைய வாய்ப்புள்ளது.மத்திய அரசு, எரிசக்தி துறையில், இயற்கை எரிவாயுவின் பங்களிப்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. எரிவாயு சார்ந்த பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களை தீட்டி வருகிறது.
எரிசக்தி துறையில், எரிவாயுவின் பங்கை, தற்போதைய, 6 சதவீதத்தில் இருந்து, 2030ல், 15 சதவீதமாக உயர்த்த, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ஹென்றி எரிவாயு சந்தை:
அமெரிக்காவின், லுாசியானா மாகாணத்தில் உள்ள, ஹென்றி மையம் தான், உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு சந்தையாக விளங்குகிறது. இங்கிருந்து, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளுக்கு, குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு சப்ளை ஆகிறது. என்.ஒய்.எம்.இ.எக்ஸ்., எனப்படும், நியூயார்க் வணிக சந்தையில் நடைபெறும் முன்பேர வர்த்தகத்தின் அடிப்படையில், ஹென்றி மையத்தில் இருந்து எரிவாயு சப்ளை செய்யப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|