பதிவு செய்த நாள்
16 ஜூன்2018
00:52
வேப்பூர்:ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, வேப்பூர் வாரச் சந்தையில், நேற்று ஒரே நாளில், மூன்று கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.
கடலுார் மாவட்டம், வேப்பூர் கூட்டுரோட்டில், வெள்ளிக்கிழமைதோறும் வாரச் சந்தை நடப்பது வழக்கம். இதில், ஆத்துார், தலைவாசல், மடப்பட்டு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள், காய்கறிகள், தானியங்கள், பழ வகைகளையும், ராமநாதபுரம், துாத்துக்குடி, மதுரை, திருக்கோவிலுார் பகுதி விவசாயிகள், வெள்ளாடு, செம்மறி, மால் ஆடுகளையும் விற்பனை செய்வர். இங்கு ஆடுகளை வாங்கும் வியாபாரிகள், சென்னை, பெங்களூரு, ஐதராபாத் போன்ற நகரங்களுக்கு, இறைச்சிக்காக அனுப்புவது வழக்கம்.
இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையையொட்டி, வேப்பூர் வாரச் சந்தையில், நேற்று அதிகாலை முதலே, அதிகளவில் ஆடுகள் விற்பனைக்கு குவிந்தன. வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கினர். ஒரு ஆடு, அதிகபட்சமாக, 19 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டது. சந்தையில், நேற்று ஒரே நாளில் மட்டும், மூன்று கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.
இது குறித்து, பெரிய நெசலுார் வியாபாரி ஒருவர் கூறுகையில், ‘வேப்பூர் வாரச் சந்தையில், சாதாரண நாட்களில், 1,500 ஆடுகள் வரை விற்பனைக்கு வரும். ரம்ஜான் பண்டிகையையொட்டி, 2,500 ஆடுகளுக்கு மேல் விற்பனைக்கு வந்தன; மூன்று கோடி ரூபாய்க்கு மேல் வியாபாரம் நடந்தது. கடந்தாண்டு, ஐந்து கோடி ரூபாய் வரை வியாபாரம் நடந்தது’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|