பதிவு செய்த நாள்
17 ஜூன்2018
00:32
புதுடில்லி: இரண்டு ஆண்டுகளாக செயல்படாது, பெயரளவில் உள்ள, 3- – 4 லட்சம் நிறுவனங்களின் பதிவை ரத்து செய்வது குறித்து, மத்திய நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.பலர், பெயரளவில் நிறுவனங்களை பதிவு செய்து, அவற்றின் மூலம், சட்ட விரோத பணப் பரிமாற்றம், வரி ஏய்ப்பு உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.இத்தகைய போலி நிறுவனங்களை களையெடுக்க, மத்திய அரசு, சிறப்பு குழுவை அமைத்துஉள்ளது. இக்குழு, 16 ஆயிரம் நிறுவனங்கள் போலியானவை என, அடையாளம் கண்டுள்ளது; 80 ஆயிரம் நிறுவனங்களை, சந்தேக பட்டியலில் சேர்த்துள்ளது. இத்துடன், பொது இயக்குனர்களைக் கொண்ட, 17 ஆயிரம் போலி நிறுவனங்களை கண்டுபிடித்துள்ளது.இந்நிலையில், நிறுவனச்சட்டப்படி, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யாமலும், எவ்விதமான வர்த்தகம் புரியாமலும் உள்ள நிறுவனங்களின் பதிவை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த, 2017 டிசம்பர் நிலவரப்படி, 17 லட்சத்திற்கும் அதிகமான நிறுவனங்கள், மத்திய நிறுவனங்கள் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன; இவற்றில், 11.4௦ லட்சம் நிறுவனங்கள், செயல்பாட்டில் உள்ளன. அவற்றில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் செயல்படாத நிறுவனங்களும் அடங்கி உள்ளன. இந்நிலையில், குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாக வர்த்தகம் புரியாமல், நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யாமல் உள்ள, 25 – -30 சதவீத நிறுவனங்கள் களையெடுக்கப்படும் என, தெரிகிறது.அவை, மத்திய நிறுவனங்கள் பதிவாளர் அலுவலக பதிவு பட்டியலில் இருந்து நீக்கப்படலாம். இந்த வகையில், 3 -– 4 லட்சம் போலி நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.ஏற்கனவே, இதுபோன்ற காரணங்களுக்காக, 2.25 லட்சம் போலி நிறுவனங்களின் பதிவு நீக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
பாயும் நடவடிக்கை : l இரண்டு ஆண்டுகளுக்கு மேல் வர்த்தகம் புரியாமல் அல்லது நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யாத நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்படும்l அதற்கு முன், அந்த நிறுவனங்கள் மற்றும் அவற்றின் இயக்குனர்களுக்கு, 30 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு, ‘நோட்டீஸ்’ அனுப்பப்படும்l மத்திய நிறுவனங்கள் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்த ஓராண்டுக்குள் தொழில் துவங்காமல் அல்லது, 180 நாட்களுக்குள் பங்கு மூலதனம் மேற்கொள்ளாத நிறுவனங்களின் பதிவு ரத்தாகும்l தொடர்ந்து இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் வர்த்தகம்செய்யாமல், நிதி நிலை அறிக்கை வழங்காத நிறுவனங்கள், நிறுவன பதிவாளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும்l பினாமி நிறுவனங்கள் மீது, பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்l குறைந்த பங்கு மூலதனத்தில், சிறிய அளவில் வர்த்தகம் புரிந்து, சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை பாயும்l கறுப்பு பணப் பரிமாற்றத்திற்காக உருவாக்கப்படும் போலி நிறுவனங்களை, களையெடுக்கும் பணியை தீவிரப்படுத்த திட்டம்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|