பதிவு செய்த நாள்
20 ஜூன்2018
00:27
அவிநாசி : தீபம் எரிய பயன்படுத்தும் எண்ணெய் பாக்கெட்டுகளுக்கு பிரத்யேக வண்ணம் ஒதுக்க, உணவு பாதுகாப்பு துறை முடிவு செய்துள்ளது.
‘கடலை எண்ணெய்’ என, அச்சிடப்பட்டுள்ள பாக்கெட்டில், சாதாரண பாமாயில் எண்ணெயை மட்டும் அடைத்து விற்பது, உணவு பாதுகாப்புத் துறையின் உரிமத்தை புதுப்பிக்காமல், எண்ணெய் உற்பத்தி மற்றும் மறு விற்பனை செய்வது போன்ற செயல்களிலும், பலர் ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுக்க, உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர்களை உறுப்பினர்களாக்கி, கண்காணிப்பு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதில், எடுக்கப்பட்டுள்ள முடிவு குறித்து, உணவு பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:
வியாபாரிகள் பலர், தீப எண்ணெயை, சமையல் எண்ணெய் எனக்கூறி விற்கின்றனர். பொதுமக்களும் அதை நம்பி வாங்கும் நிலை உள்ளது. தீப எண்ணெய், சமையலுக்கு ஏற்றதல்ல.பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த, தீப எண்ணெய் பாக்கெட்டுகளை ஊதா நிறத்தில் அச்சிட, அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து, மொத்தமாக எண்ணெயை வாங்கி, பாக்கெட்டுகளில் அடைத்து விற்கும் தொழில் செய்வோர், தாங்கள் எண்ணெய் வாங்கும் நிறுவனங்களிடம் இருந்து, தடையில்லா சான்று பெற வேண்டும்.
பாக்கெட்டில், நிறுவனத்தின் முழு முகவரி, எண்ணெயில் கலந்துள்ள பிற பொருட்களின் விபரங்களை அச்சிட வேண்டும். முக்கியமாக, அந்த எண்ணெய், ‘சமையலுக்கு உகந்தது’ என்றோ, ‘சமையலுக்கு உகந்ததல்ல’ என்றோ, பெரிய எழுத்துகளில் அச்சிடப்பட வேண்டும். இதுபோன்ற முடிவுகள், கண்காணிப்பு கமிட்டி கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|